Skip to main content

எதையாவது சொல்லட்டுமா..........52

வாஷிங்டனில் நாங்கள் ரயில் பிடித்தபோது மணி இரவு 8.30.  ரயில் பார்ப்பதற்கு பிரமாதமாக இருந்தது.  முதலில் ரயில்வே ஸ்டேஷனில் நுழைவதற்கு வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.  அதன்பின்தான் உள்ளே விட்டார்கள்.    எந்த இடத்தில் வேண்டுமானாலும் எல்லோரும் உட்காரலாம் என்பதால், அவசரம் அவசரமாக இடம் பிடித்துக்கொண்டோ ம்.  வாஷிங்டனிலிருந்து நியுயார்க் செல்ல 2 மணி நேரம்தான். அன்று இயந்திரக் கோளாறால் ரயில் 1 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது.  1 மணி நேரம் தாமதம் ஏன் என்பதை அவர்கள் ஒலிபெருக்கியின் மூலம் தெரியப் படுத்தினார்கள்.  ரயிலில் நாங்கள் உட்காரும் இடத்திலேயே அந்த ஒலிபெருக்கியைப் பொருத்தி இருந்தார்கள்.  ரயில் உள்ளே ஒரு கம்பார்ட்மெண்டிலிருந்து இன்னொரு கம்பார்ட்மெண்டிற்கு எளிதாக செல்லலாம்.  அப்படி போகும்போது கதவு தானகவே திறந்து கொண்டு வழிவிடும்.  இதைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பக்கங்களிலும் இரண்டு இரண்டு கழிவறைகள் பொருத்தப்பட்டிருந்தன.  அவைப் பார்ப்பதற்கு அவ்வளவு சுத்தமாக இருந்தன. நம் ஊரில் உள்ள  ரயிலில் பயணம் செல்லும்போது, ரிசர்வ் செய்தாலும், என் ராசி கழிவறைக்குப் பக்கத்தில்தான் இடம் கிடைக்கும்.  இரவு முழுவதும் நாற்றத்துடன்தான் பயணம் செய்ய வேண்டி வரும்.  அங்கு ஒவ்வொரு பெட்டியிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.  உட்காரும் இடம் மெத்தையில் உட்காரும்படி பிரமாதமாக இருந்தது. 

பொதுவாக இங்கே பெண்கள் சுதந்திரமாக இருப்பதாகப் படுகிறது. சிலர் புகை பிடித்துக்கொண்டும், சிலர் மது அருந்திகொண்டும் ரயிலில் வந்து கொண்டிருந்தார்கள்.  உடை அணிவதிலும் அவர்கள் அலட்சியமாகவே இருந்தார்கள்.  அல்லது அதுதான் அவர்கள் இயல்பாக இருக்கிறது.  அரை டிராயரும், மேலே அணியும் உடையும் அணிந்திருந்தார்கள்.  எல்லோர் முன்னிலும் வெட்கப்படாமல் அவர்களுக்குப் பிடித்த ஆண்களுடன் உதட்டில் முத்தமளித்துக்கொண்டிருந்தார்கள்.  எனக்கு அவர்களைப் பார்க்கும்போது திகைப்பாகவே இருந்தது. முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் எப்படி அவர்கள் நாசூக்காகப் பேசுகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டிருந்தேன்.  

நாங்கள் இறங்கும்போது இரவு 11.30க்கு மேல் ஆகி விட்டது.  ஒரு டாக்ஸியைப் பிடித்து நியு ஜெர்சிக்கு அரவிந்த் அழைத்துப்போனான்.  டாக்ஸிக்கே 40 டாலர் மேல் ஆகிவிட்டது.  நியுயார்க்கில் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்குவது என்பது அதிக விலை கொடுக்கும்படி இருக்கும்.  மேலும் 3 பேர்கள் தங்க அறை அவ்வளவு வசதிப்படாது என்று அவன் நினைத்திருந்தான்.  Comfort Inn என்ற இடத்திற்குச் சென்றோம்.  இரவு 1 மணி மேல் ஆகிவிட்டது நாங்கள் தூங்கும்போது.  எல்லாவற்றையும் ப்ளோரிடாவில் இருந்தபடி நெட் மூலம் பதிவு செய்திருந்தான். 
காலையில் அவசரம் அவசரமாக எழுந்து கொண்டோ ம்.  நியு ஜெர்சியிலிருந்து நியுயார்க் செல்ல ஒரு shuttle ஐ விடுதிக்காரர்கள் ஏற்பாடு செய்தார்கள்.  அதில் அந்த விடுதியில் தங்கியிருந்த எங்களைப் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏறிக்கொண்டார்கள். நியுயார்கில் இறங்கியவுடன், NFTA-METRO Trolley Day Pass வாங்கிக்கொண்டு நியுயார்க்கைச் சுற்றிக் கொண்டிருந்தோம்.  Empire State Building என்ற இடத்திற்குப் போனோம்.  மொத்தம் 102 மாடி கொண்ட கட்டிடம். அதில் 86வது மாடியிலிருந்து நியுயார்க்கையும் அதனைச் சுற்றி உள்ள இடத்தையும் பார்த்தோம்.  நியுயார்க்கை ஒட்டி உள்ள மற்ற மாவட்டங்களையும் பார்த்தோம்.  அப்படிப் பார்க்கும்போது பெரிய பெரிய கட்டிடங்களைக் கொண்ட நியுயார்க் சின்ன நகரமாகத் தோன்றியது.



அதன்பின் நாங்கள் Liberty Islandம் Ellis Islandம் சென்றோம். Liberty Island ஐப் பார்க்க வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது.  பல நாட்டவர்கள் எங்களுடன் வரிசையில் இருந்தார்கள்.  பெரும்பாலும் சீனர்கள் அதிக அளவில் இருந்தார்கள்.  இந்தியாவிலிருந்து தெலுங்கு பேசுபவர்கள் அதிகமாக வந்திருந்தார்கள்.  லிபர்ட்டி சிலையைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.   செப்பால் புனையப்பட்ட சிலை கம்பீரமாக வீற்றிருந்தது.  என்னால் வரலாறை எழுத முடியவில்லை.  வெளிநாட்டவர்களால் உருவாகப்பட்ட சிலை அது.  அங்கங்கே வரலாறை எழுதி வைத்திருந்தார்கள்.  நான் சாதாரண பார்வையாளன்.  ஒரு பார்வையாளன் கோணத்தில் என்ன சொல்ல முடியுமோ அதைச் சொல்ல முயற்சி செய்கிறேன்.  அங்கிருந்து Ellis Island சென்றோம்.  அமெரிக்க நாட்டிற்கு வருபவர்கள் Ellis Island வழியாகத்தான் உள்ளே வரமுடியும்.  அங்கு அதற்காகவே ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது.  அங்குள்ள அதிகாரிகள் சிலரை உள்ளே வரவிடாமல் தடுத்து விடுவார்கள்.  அன்றைய பொழுது போய்விட்டது.  திரும்பவும் நாங்கள் விடுதிக்கு வந்தோம்.

Comments

kuthu said…
உட்காரும் இடத்திலே ஏன் ஒலிபெருக்கியை வைச்சாங்க?
சுவையானப் பயண அனுபவங்கள்... தொடரட்டும்...
K V SURESH said…
You are writing the experiences well. Please continue