Skip to main content

நீரும் நிலாவும்




பித்தளை குட்டுவத்தின்
நீரில் நிலா மிதக்க
ஐந்து வயது சிறுவன்
ஒரு தட்டால் நிலாவை
சிறை வைத்தான்.
அடுத்த நாள்
மூடியை பத்திரமாக
திறந்து பார்த்தான்.
நிலா இருந்தது.
கொஞ்சம்
கரைந்துமிருந்தது.
மீண்டும் மூடி
வைத்து விட்டு
அடுத்த நாள் பார்த்தான்.
இன்னும் கரைந்திருந்தது.  
நாட்கள் செல்லச்
செல்ல முழுவதும்
கரைந்திருந்தது.
நிலா முழுவதும்
நீரில் கரைந்து
விட்டதாக எண்ணி
மூடியைத் திறந்தே
வைத்திருந்தான்.
நீர் ஆவியாகி
வானத்தில் நிலாவாகப்
படியத் தொடங்கியது.
நீர் ஆவியாக
ஆவியாக
நாட்கள் செல்லச்
செல்ல வானத்தில்
நிலாப் படிமம்
வளரத் தொடங்கியது
முழு நிலாவாக. 

Comments

மதி said…
கவித்துவமான சிந்தனை .. மிக ரசித்தேன்

Popular posts from this blog