Skip to main content

மறந்து போன எழுத்தாளர்



அழகியசிங்கர் 



üஸ்டெல்லாபுரூஸ் என்ற எழுத்தாளர் மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ஆம் ஆண்டு தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டார்.  அவர் ஒரு சுதந்திரமான மனிதர்.  விருதுநகரில் நாடார் வகுப்புச் சேர்ந்த அவர்,  தனக்கென்று ஒரு பாதையை வகுத்து தன் ஊரை விட்டு சென்னைக்கு வந்து விட்டார்.  அவர் குடும்பம்  வசதியான குடும்பம்.  ஸ்டெல்லா புரூúஸô எந்த வேலைக்கும் செல்லாமல், குடும்ப மூலம் கிடைத்த சொத்துக்களை வங்கியில் சேமித்து அதன் மூலம் கிடைக்கும் வட்டியை வைத்துக்கொண்டு ரொம்ப எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர்.'

ஸ்டெல்லா புரூஸ் பற்றி நான் ஒரு கட்டுரையில் மேலே குறிப்பிட்ட மாதிரி எழுதியிருந்தேன்.  உண்மையிலேயே அந்தத் தருணத்தில் யாராவது கூட இருந்தால் அவர் தூக்குப் போட்டுக்கொண்டிருக்க மாட்டார்.  நான் மாயூரத்தில் இருந்திருந்தால் (அலுவல் பொருட்டு அங்கு தனியாக இருந்தேன்) அவரை அழைத்துக்கொண்டு போய் பாதுகாத்திருப்பேன். எல்லோருக்கும் இயல்பாக ஏற்படும் மனக்குழப்பம்தான் அவருக்கு.

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கும்.  நிதானம் இருக்கும். மனைவி இறந்ததை அடுத்து அவர் வாழ்க்கையில் ஒழுங்கு தப்பி விட்டது. குழப்பம் ஏற்பட்டு விட்டது.  அந்த வீட்டில் இருக்க முடியவில்லை.  அவரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.

அவர் விருட்சம் வாசகர். எழுத்தாளர்.  விருட்சம் எப்படி வருகிறதென்று அடிக்கடி கடிதம் மூலம் தெரிவித்துக் கொண்டிருப்பார்.  அவர் எழுதிய எத்தனையோ கடிதங்களை அடுத்த ஆண்டில் விருட்சம் கடிதங்கள் என்ற தொகுப்பில் கொண்டு வர உள்ளேன். 

விருந்தினர்களை உபசரிப்பதில்  ஸ்டெல்லா புரூஸøம் அவர் மனைவியும் எடுத்துக்கொள்ளும் அக்கறை அலாதியானது. எத்தனையோ நாட்கள் நான் அங்குப் போய் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழித்திருக்கிறேன்.  எந்த எழுத்தாளர் வீட்டிலும் உரிமையுடன் இருக்க முடியாது.  சிலர் திண்ணையிலேயே உட்காரவைத்து அனுப்பி விடுவார்கள். உட்கார்ந்து பேச ஆரம்பிக்கும்முன் காப்பி, விருதுநகர் முறுக்கு என்றெல்லாம் ஒவ்வொன்றாய் வரும். அவர்கள் வாழ்ந்தவரை லட்சிய தம்பதியராக இருந்தார்கள். 

ஸ்டெல்லா புரூஸ் மறைந்து 11 ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் உயிரோடு இருந்தபோது '25 வருடக் கதை' என்ற சிறுகதைத் தொகுப்பை 2006ஆம் ஆண்டு கொண்டு வந்தேன்.   அவர் இறந்த போன பிறகு 'என் நண்பர் ஆத்மாநாம்' என்ற கட்டுரைத் தொகுதி டிசம்பர் 2008ஆம் ஆண்டு வெளிவந்தது.  அந்தப் புத்தகத்தைப் பார்க்க அவர் உயிரோடு இல்லை.  அத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் எல்லாம் விருட்சம் இதழில் வெளிவந்தவை. எல்லாம் உணர்வுப்பூர்வமான கட்டுரைகள்.  உண்மையில் இந்தக் கட்டுரைத் தொகுதி அவருடைய வாழ்க்கை வரலாறு.  

   ஆத்மாநாமின் தற்கொலையைப் பற்றிப் புலம்பி எழுதியிருப்பார். அவருடைய நாவல்களில் அவருடைய வாழ்க்கை வரலாறும் புனைவும் இரண்டற கலந்தவை.  ஆண் பெண் உறவை நுணுக்கமாக ஆராய்ந்து புட்டு புட்டு வைப்பார்.  புத்தகத்தை எடுத்தால் படிக்காமல் வைக்க முடியாது. அவருடைய நாவல்கள் முழுக்க தீவிரத்தன்மையும் இல்லாமல் முழுக்க ஜனரஞ்சகத் தன்மையும் இல்லாமல் ஒரு கலவை.  ஜனவரி 2018 ல் அவருடைய நாவலான 'அது வேறு மழைக்காலம்' கொண்டு வந்தேன்.  இந்த ஆண்டு 'உள்ளே எரியும் சுடர்' என்ற நாவல். 225 பக்கங்கள் கொண்ட இந்நாவல் விலை ரூ.150.

Comments