Skip to main content

Posts

Showing posts from December, 2008

நண்பர்களே,

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் . இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் நவீன விருட்சம் கடை எண்.147 - ல் நவீன விருட்சம் என்ற ஸ்டாலில் 8-18 ஆம் தேதிவரை காணலாம். புத்தகக் காட்சியின்போது ஒவ்வொரு நாளும் கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன். சென்னையில் உள்ள நண்பர்களோ சென்னைக்கு வரும் நண்பர்களோ நவீன விருட்சம் கடைக்கு வரவும். என் புத்தகக் காட்சி அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன். எனக்கு உதவி செய்வதற்கு அன்பர்கள் இல்லாமல் தவிக்கிறேன். யாராவது உதவ முன் வருபவர்கள் கட்டாயம் வரவும். 9444113205 என்ற எண் எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும். அழகியசிங்கர்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

7 பூனைகள்......... செல்வராஜ் ஜெகதீசன் பூனைகளுக்கென்று பொதுவாய் புகலிடங்கள் ஏதுமில்லை. பூனைகள் பொதுவில் வாழும் பூனைகள் கூட்டமாய் திரிதல் பொதுவினில் காண்பதரிது. பூனைகள் தனித்தும் வாழும். வசிக்கமிடம் பற்றியெதுவும் வரையறைகள் பூனைகளுக்கில்லை. தகிக்கும் சூழலில் தனித்து தாழ்தள இடங்களில் நிற்கும் கார்களுக்கிடையே வாழும் பூனைகளுக்கென்று பொதுவாய் புகலிடங்கள் ஏதுமில்லை நிலை குத்தும் பார்வை கொண்டு நெருங்கும் வரை நின்று வெறிக்கும். நேரெதிரே குதித்துக் கடக்கும் நெடுஞ்சாலை வாகனங்களுக்கிடையில் இருத்தல் இறத்தல் குறித்தெந்த முகாந்திரமின்றி முடிந்து போகும் பூனைகளின் எளிய வாழ்வு.

எனக்குப் பிடித்த இரண்டு விருதுகள்

இந்த ஆண்டு மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதெமி விருதும், வைதீஸ்வரனுக்கு விளக்கு விருதும் கிடைத்துள்ளது. மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன், கந்தர்வன், சமுத்திரம், தமிழ்ச்செல்வன், பா ஜெயப்பிரகாசம் முதலிய படைப்பாளிகள் முற்போக்கு முகாமைச் சார்ந்தவர்கள் என்று முத்திரை குத்தினாலும், அவர்கள் அதையும் மீறி படைப்பாளிகள். முதன் முதலாக மேலாண்மை பொன்னுசாமி கதை ஆனந்தவிகடனில் பிரசுரமானபோது, பரவாயில்லை ஆனந்தவிகடன் இவர் எழுதுகிற கதையெல்லாம் போட ஆரம்பித்துவிட்டார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. செய்திகளுக்குக் கொடுக்கும் மதிப்பு படைப்புகளுக்குக் கிடைப்பதில்லை. படிக்கிற சுவாரசியத்தையே அடிப்படையாகக்கொண்டு செய்திகளை வெளியிடுகிற பெரும் பத்திரிகைகள் படைப்பாளிகளைக் கண்டுகொள்வதில்லை. ஐந்தாம் வகுப்புவரை படிக்கார மேலாண்மை பொன்னுசாமி 22 சிறுகதைத் தொகுதியும், 6 நாவல்களும், 6 குறுநாவல் தொகுதியும் எழுதியுள்ளார். இது அசாத்தியமான முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது. கிராமத்தில் வசிக்கும் பொன்னுசாமி, இந்த விருது கிராமத்து எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறார். ஜெயகா

சின்னத்திரையில் மும்பை பயங்கரம்.

டெக்கான் முஜாகிதின் என்று அது வரை கேட்டிராத பெயரில் நவம்பர் 26ம் தேதியன்று மும்பையில் பயங்கரவாதச் செயல்களைத் துவக்கிய கும்பலின் உண்மையான பின்னணிகள் என்ன, லஸ்கர் இ தொய்பாவான அதன் சதித்திட்டங்கள் யாவை என்பனவற்றை உயிருடன் பிடிப்பட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப் போலீஸிடம் கக்கத் தொடங்கியவுடன் மும்பைத் தாக்குதல் எத்தகைய முன்னேற்பாடுகள் கொண்டவை என்பது தெரியவந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்ட பயங்கரவாதிகளுக்கு இணையாக தேசிய பாதுகாப்பு காவலர்கள், கடற்படை தரைப்படை வீரர்கள் போலீஸ்காரர்கள் ஆகியோர் அப்போதைக்கப்போது திட்டமிட்டு செயல்பட்டு அந்த கோர சம்பவத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தனர். என்னசெய்வதென்று அறியாமல் இவற்றையெல்லாம் கையைப் பிசைந்த நிலையில் அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். அதே சமயத்தில் எவ்வித முன்னேற்பாடோ முன் அனுபவமோ இல்லாத தொலைக்காட்சி சேனல்கள் அந்த ஐம்பத்து ஒன்பது மணி நேரங்களை வினாடி வினாடியாகப் பகுத்து மக்களுக்கு அங்கே நடப்பவற்றை வழங்கிக் கொண்டிருந்தனர். தொலைக்காட்சி தகவல் ஒளிப்பரப்பு என்பது இந்தியாவில் ஒரு பக்குவ நிலையை எய்திருப்பதை அவை காட்டின. Head Lines Today, NDTV, T

பூனைகள் பூனைகள் பூனைகள்

ஒரு பொருளை தயாரிப்பதுபோல, ஒரு தொழிலில் ஈடுபடுவதுபோல, கவிதையை உருவாக்க முடியுமா? கவிதை எழுதுவது தானாகவே வரவேண்டுமா? அல்லது பயிற்சி எடுத்துக்கொண்டு வர வேண்டுமா? முதலில் கவிதை எழுதுபவர்களுக்கு கவிதை மீது ஒருவித ஈடுபாடு வேண்டும். கவிதையை ரசிப்பதற்கு மனம் செல்ல வேண்டும். மேலும் எது சரியான கவிதை என்பதை அடையாளம் காணத் தெரிய வேண்டும். கவிதையை எங்கே எப்படி எழுத முடியும்? எழுதும்போது என்ன மனநிலை ஒருவருக்கு இருக்கும். கவிதை மனதிலிருந்து உருவாக்கியபிறகு வருமா? அல்லது அந்தச் சமயத்தில் என்ன தோன்றுகிறதோ அது கவிதையாக வருமா? ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா? கவிதையின் தலைப்பு கவிதை எழுதியபிறகு கிடைக்குமா? அல்லது தலைப்பே இல்லாமல் கவிதை உருவாகுமா? இதுபோன்ற பல விஷயங்களை கவிதைக் குறித்து நாம் யோசித்துக்கொண்டே இருக்கலாம். பின் எது நல்ல கவிதை? எது கவிதை இல்லை? இந்த ஆராய்ச்சிக்குப் போனால் கவிதை எழுதுபவர்களில் ஒருவருக்கு ஒருவர் சண்டை வந்து விடும். கவிதை எழுதுபவதைவிட அதை ரசிக்க மனம் வேண்டும். சமீபத்தில் என் அலுவலகத்தில் உள்ள ஒருவருக்கு ஒரு கவிதையை எடுத்துப் படித்துக் காட்டினேன். அடுத்த

சில குறிப்புகள் - 13

ஸ்டெல்லாபுரூஸ் காப்பாற்றி விட்டார் இந்த மாதம் 7ஆம் தேதி எனக்கு விஜய் டிவியிலிருந்து போன் வந்தது ஸ்டெல்லாபுரூஸ் பற்றி விஜாரித்தார்கள். அவர் இருக்குமிடம் பற்றியெல்லாம் கேட்டார்கள். சொன்னேன். பின் நீங்கள் அவரைப் பற்றி எதாவது சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். டிவியில் அவரைப் பற்றி சொல்ல சொல்கிறார்கள். சரி என்றேன். டிவி மோகம் யாரையும் விடுவதாயில்லை. பலர் டிவியை வைத்துக்கொண்டுதான் பொழுதைக் கழிக்கிறார்கள். நான் 200க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்றாலோ 50 சிறுகதைகளுக்குமேல் எழுதியிருக்கிறேன் என்றாலோ என் வீட்டில் உள்ள யாருக்கும் ஒரு பொருட்டல்ல. ஒரு பத்திரிகையை விடாப்பிடியாக 21 ஆண்டுகள் நடத்தி வருகிறேன் என்றாலும் ஒரு அலட்சியம். டிவியிலும் இத்தனை சேனல்கள் இருந்தாலும் இலக்கியவாதிகளுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. சினிமா நடிகர்கள் நடிகைகள்தான் அவர்களுக்கும் முக்கியம். நான் டிவி சேனல் அதிபதியாக இருந்தால் கவிதை வாசிப்பதை தினமும் வைத்திருப்பேன். குறிப்பிட்ட நேரத்தில் தமிழ் நாட்டில் உள்ள எல்லா கவிஞர்களும் தினம் தினம் கவிதை வாசிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருப்பேன். ஆனால் டிவியிலோ ச

பரிமள விலாஸ்

சிறுகதை பாங்காக்கில்தமிழ்ப் பெண் என்று கேட்டதும் சட்டென்று உள்ளே பரபரப்பானது. அதுவரை பெண் விஷயத்தில் அசட்டையாக, சமர்த்தாக இருந்தவன்தான். தாக சாந்தி என்று பார்ட்டிகளில் கிடைக்கும். அளவாக அருந்துவான். எதாவது வாய் தவறிவிடுமோ, கேலியாக ரகளையாக கிவிடுமோ, என்று பயத்துடன், அத்தோடு அன்றைய நாளை முடித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பி, தாள் போட்டுக்கொண்டு படுத்துவிடுவான். காலையில் மூளை தெளிய எழுந்து கொள்வதில் கவனமாய் இருப்பான். தலைவலி என்று இழுத்துப் போட்டுக் கொள்ளமாட்டான். முந்தைய நாள் இரவு அவனுக்கே கனவு போலிருக்கும். ஆனால் தாக சாந்தி இல்லை, இது தேக சாந்தி! வேண்டாம் ...என மறுக்க சட்டென வாய் வரவில்லை. வேண்டும் என்று சொல்லவும் கூச்சமாய், தயக்கமாய் இருந்தது. இன்னும் முழுசாய் ஒருநாள் இருந்தது கையில். கான்டிராக்ட் விவாதங்களில் இழுபறி இருக்கலாம். பேசித் தீர்க்க, சரிசெய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கலாம்... கூட ஒருநாளாகும் என அவன் அலுவலகத்தில் எதிர்பார்த்திருந்தார்கள். இவன் காட்டிய செக்யூரிட்டிகள் அவர்களுக

சில குறிப்புகள் 12

மேடைப் பேச்சும் நானும் / 1 எனக்கு மேடையில் பேச வேண்டுமென்ற ஆசை என் பள்ளிக்கூட நாட்களிலேயே தொடங்கி விட்டது. ஆனால் ஆசை மட்டும்தான் உண்டு. தைரியமாக சொல்ல வேண்டியதை மேடையில் ஏறி பிறர் முன் சொல்ல முடியுமா என்பதில்தான் சிக்கல். அந்தக் காலத்தில் பள்ளிகளில் மேடையில் பேசும் திறனுக்கு பரிசு கொடுப்பார்கள். நான் படித்த ஒரு ஆரம்பப் பள்ளியில் பேசும் போட்டி வைத்திருந்தார்கள். நானும் துணிச்சலாகப் பேச பெயர் கொடுத்துவிட்டேன். பேர் கொடுத்துவிட்டேனே தவிர அவர்கள் கொடுத்தத் தலைப்பில் பேசுவதற்கு பெரிய போராட்டமே நடத்த ஆரம்பித்தேன். என்ன பேசப் போகிறேன் என்பதை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டேன். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் கலந்துகொண்டு பேசுபவரின் பெயர்களை வாசித்து வந்தார்கள். கூடவே ஒரு கட்டளையும் இட்டார்கள். 2 நிமிடத்திற்குமேல் பேசக் கூடாது என்பதுதான் அந்தக் கட்டளை. நான் பேசுவதற்கான தருணம் வந்தது. அதற்குள் என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. நான் பேசி எல்லோரும் கேட்டு எல்லோரும் என் பேச்சில் மயங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. என் பெயரைக் கூப்பிட்டார்கள். எனக்கோ உதறல். கையில் எழுதியிருந்

மூன்று கவிதைகள்

நகரம் தொலைத்த வானம் வானத்து நட்சத்திரங்களை பகலில் சூரியன் விழுங்கிக்கொள்கிறான். சாலை விளக்குகளும் குண்டு குழிகளும் சக ஊர்திகளும் இல்லத்திரைக் காட்சிகளும் மேல் வீட்டுக்காரனின் கட்டாந்தரையும் இரவில் மறைத்துக்கொள்கின்றன. இறுதி ஊர்வலம்... இதோ புறப்பட்டுவிட்டது இறுதி ஊர்வலம்... மகள் கதறி தரையில் அழுது புரள... மனைவி கடைசிக் கடைசியாய் முகம் பார்த்துத் தவிக்க... உறவினர்களல்லாத சஹ்ருதயர்களும் கண்களில் கரைமீறாமல் நீர் துளிர்க்க. வாரியிறைக்கப்படும் சில்லறைக் காசுகளை பொறுக்குபவன் குறுக்கிடும் கேபிள்களைத் தள்ளி வழியேற்படுத்தித் தருகிறான். தெருவோரப் பிச்சைக்காரி ஏனோ தன்குழந்தையின் முகத்தின் முன் துண்டுவிரித்து காட்சியை மறைக்கிறாள். இணையாக வந்த யாரோ இரு இளம்பெண்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு ஒதுங்கி நிற்கின்றனர். இரண்டு தெரு கடந்ததும் யாரோவாகிப்போன மனிதர்கள் சலனமற்று வேடிக்கைப் பார்க்கின்றனர். தெருவெங்கும் இறைக்கப்பட்ட சிவப்பு ரோஜாக்களைப் பார்க்கையில் ஊர்வலம் போய்க்கொண்டிருந்த ஒருவன் நினைவில் காதலி கூந்தலின் ஒற்றை ரோஜா நினைவுக்குவர அவசரமாய் நினைவை அழிக்கிறான். பிணத்தின் காலடியில் கட்டப்பட்ட மிரண்ட

கடிதங்கள்

. வெ.நாராயணன் இலக்கியவட்டம் காஞ்சிபுரம் 21.08.1989 விருட்சம் 3வது இதழில் பக்கம் 23ல் நகுலன் அவர்களுடைய குறள் மூலம் கவிதை பின்வருமாறுவெளியாகியுள்ளது. 'நில் - போ - வா/வா - போ - நில்/போ - வா - நில்/நில் - போவா?' இதற்குஎன்ன அர்த்தம் என்று புரியவில்லை என்று சென்ற கூட்டத்திற்கு வந்த நண்பர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர. கவிதை புனைந்தவரின் கருத்தறியவும் விரும்புகின்றனர். நகுலன் பதில் நில் போ வா இப்பொழுது இயங்கிவரும் அதிநூதன இலக்கிய விமர்சன இயக்கத்தில் ஒவ்வொரு வாசகனும் ஒரு படைப்பைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறான் என்றும், சிருஷ்டி கர்த்தாவைவிட வாசகன்தான் முக்கியம் என்ற ஒரு இயக்கம் உலவி வருகிறது. மேலும் ஒரு சிருஷ்டிகர்த்தாவின் விளக்கம் அதிகார பூர்வமானது என்று சொல்வதற்கும் இல்லை. இதைத் தொடர்ந்து சிந்திக்கையில் ஒரு சிரு

சில குறிப்புகள் / 12

நண்பர்களே, நவீன விருட்சம் இதழுக்கு பலர் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் இதழ் ஆரம்பித்த சமயத்தில். தனிப்பட்ட முறையிலும் சிலர் எழுதுவார்கள். அக் கடிதங்களைப் படிக்க சுவாரசியமாக இருக்கும். கடந்த 80வது இதழ் நவீன விருட்சத்தில் அப்படி சில கடிதங்களைப் பிரசுரம் செய்தேன். இங்கேயும் தர விரும்புகிறேன். சும்மா சும்மா கவிதையே போரடிக்கிறது. விருதுநகர் - ஜூலை 3 1991 அன்புள்ள அழகியசிங்கர் , விருட்சம் இதழ் இங்கு கிடைத்தது. ஏன் இத்தனை பக்கங்கள். இத்தனை எழுத்துத் திணிப்புகள்? அறிமுக எழுத்தாளர் என்ற விவரிப்பெல்லாம் தேவையற்ற முகாந்திரங்கள். விருட்சம் பக்கங்கள் குறைத்து வெளியிடலாம். பக்க அதிகரிப்பு மட்டுமே இதழை 'கனமானதாக' ஆக்கி விடாது. பிரமிள் எழுதிய கவிதை 'அமெச்சூர்' தனமாக தொனிக்கிறது. சா. அரங்கநாதன் கவிதை 'தச்சூர்' போனேன் பரவாயில்லை. ஞானக்கூத்தனின் 'மதிப்புக் கூறுதல்' கட்டுரை மிக எளிமையாக நல்ல உண்மை ஒன்றை சொல்லிக் காட்டி உள்ளது. அங்கீகாரம் வேண்டியிருப்பதில் சிறு பத்திரிகையில் எழுதும் இலக்கிய கொம்பர்களும் உட்பட்டவர்கள்தான். 'சிறு பத