Skip to main content

Posts

Showing posts from March, 2010

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20

ஆறுதல் விடுமுறையில் குழந்தைகளுடன் மனைவி ஊருக்குச் சென்றுவிட்டாள் குழந்தையின் பூனைக்கத்தல், அவனின் சிரிப்பு, குறும்பு, குதூகலங்களின் பின்னணியில் மிக்ஸியின் காட்டுப் பிளிறல் சமையலறையில் பாத்திரங்கள் உருள்கிற விழுகிற பின்வாசலில் வாளிகள் மோதுகிற சப்தம் எதுவுமின்றி குக்கர் விசில், குழாயில் தண்ணீர் விழும் சப்தம், என ஏதுமின்றி ஒரே நிசப்தம். தனிமையில் அவன். உயிர்களற்ற உலகில் அவன் மட்டும் தனிமையில் உலவுவது போல் ஒரு உணர்வு அவனுள். என்னவோ போல் இருந்தது. சமையலறையில் திடீரென பாத்திரங்கள் உருளும் சப்தம். அதிர்ச்சியில் அங்கே சென்று பார்த்தான் ஒரே ஆறுதல். சமையலறையில் பதுங்கி வந்தன எதிர் வீட்டுப் பூனை அதன் குட்டிகளுடன்.

மொழிபெயர்ப்புக் கவிதை

சந்தேகம் நட்சத்திர இதழ்கள் முடிச்சவிழ்க்கும் பனியூறும் இரவில் தொலைதூர தேசமொன்றில் அவளின்னும் உறங்காதிருக்கலாம் நிலவு வெள்ளி எழுத்தாணியால் மென்மையான சொற்தொடர்களைப் பின்னும் இரவு ஒரே ஒரு கவிதையென அவள் உணரக் கூடும் இறந்தகாலத்தை அணைத்தபடி மனமுறங்கும் திசையில் கவியுணர்வுகள் விசிறிபோலாகி அசைதல் கூடும் பழக்கப்படாத ஒழுங்கையினூடு அவளிடமிருந்து எனக்குக் கிட்டாத எனது வாழ்வையும் எடுத்துக் கொண்டு அவள் அடிக்கடி செல்லக் கூடும் அழும்போது கவிழ்ந்த அவளது கீழுதடு உருவாக்கிய பெரிய சோகப் பெருமூச்சுக்கள் காற்றுவெளியெங்கும் இருக்கக் கூடும் இரு கைகளையும் இணைத்து இயற்றிய கவிதையற்ற வாழ்வைக் கழிக்க இயலாதென அவளுக்கும் தெரிந்திருக்கக் கூடும் மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில் துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும் எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும் சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும் மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

மூன்று கவிதைகள் முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன நீலக் குழல் விளக்கில் விட்டில் பூச்சிகள் உள்ளே மழைக்குப் பயந்து அறைக்குள் ஆட்டம் போட்டன துவைத்த துணிகள் விடலைகள் துள்ளித் துவண்டு தென்றல் கடக்க விஸில் அடித்தன மூங்கில் மரங்கள் - பாலகுமாரன் பின் குறிப்பு : கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அவர் கையில் வைத்திருந்த சில புத்தகங்களைக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் புள்ளி என்ற இப் புத்தகம். கைக்கு அடக்கமான இப் புத்தகத்தைப் போல் ஒன்றை தயாரித்து எல்லோருக்கும் இலவசமாக வழங்க வேண்டுமென்பது என் அவா. எப்படி இந்தச் சிறிய புத்தகத்தில் நவீன ஓவியர்களின் படங்களுடன் புத்தகம் கொண்டு வர முடிந்தது? ஆச்சரியமாக உள்ளது. - அழகியசிங்கர்

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் நிறைய தொலைபேசி அழைப்புகள் நீங்கள் யாரென்னும் கேள்வியோடு நிராகரிக்கப்படலாம் நிலுவையில் இருக்கும்நிறைய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படலாம் நாளைய நம்பிக்கைககளின் வேர்கள் நடுக்கம் காணலாம். உறவுகளுக்குள்ளான உறுதிமொழிகள் உடனுக்குடன் ஆவணப்படுத்தப்படலாம். பிறந்த நாள் பிரிந்த நாள் உபசாரங்களெல்லாம் ஒடுங்கியோ அல்லது ஓய்ந்தோ போகலாம். அந்தந்த கணங்களில் வாழ அநேகம் பேர் ஆயத்தமாகலாம் நிகழ் கணங்களை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் கவிதைகளுக்கு நேரலாம் ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் நிறைய துரோகங்கள் மன்னிக்கப்படலாம் அல்லது மறக்கப்படலாம்

அப்பா என்கிற ஸ்தானம்

அவனுடைய மனைவியின் முதல் பிரசவத்துக்கு குறிக்கப்பட்ட அந்த நன்னாள் நெருங்கிக் கொண்டே வந்தது பணியாற்றும் இடம் பலமைல் தொலைவிலிருந்தும் பிறக்கப்போகும் ஒரு உயிருக்காக பிரார்த்தனை செய்தபடியே அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது அந்த நகரத்தின் சாலையோரக் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் படங்களும் ‘கற்பூரமுல்லை ஒன்று.... ’ -என எதேச்சையாக அருகாமையில் ஒலித்த இனிய கானமும் அவன் மனதைப் பிசைந்தன. அன்றைய மாலைப் பொழுதில அடுக்குமாடி வணிக வளாகமொன்றில் ‘டாடி’ என்றழைத்தபடி ஓடிவந்த குழந்தையொன்று தவறுதலாக அவன் கால்களைக் கட்டிக் கொண்டது சில வினாடிகள் கழித்து அண்ணாந்து முகம் பார்த்து தனது தந்தையல்ல என்றுணர்ந்த பின்னர் அந்நியர் ஸ்பரிசத்தை தொட்டுவிட்ட சங்கோஜத்தில் விலகிச் சென்றது நிமித்தங்கள் அவன் தந்தையானதை இந்நிகழ்வினால் உறுதிப்படுத்த ‘நான் அப்பாவாகிவிட்டேன்’ என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உதித்த அக்கணத்தில் வாயில் கைப்பிடி சர்க்கரை போடாமலேயே உடலில் ஓடும் உதிரம் கூட அவனுக்கு இனித்தது.

எதையாவது சொல்லட்டுமா....18

எதையாவது சொல்லட்டுமா....18 போன சனிக்கிழமை (13.03.2010) எழுதியிருக்க வேண்டும். இந்தச் சனிக்கிழமைதான் எழுதுகிறேன். சனிக்கிழமை எப்போதும் நான் சென்னையை நோக்கிக் கிளம்பி விடுவேன். பின் ஞாயிறு கிளம்பி இங்கு வந்துவிடுவேன். வழக்கம்போல் 13ஆம் தேதி மதியம் சீகாழி கிளையிலிருந்து வாசலில் வந்து நின்றேன். எனக்குப்பிடித்தமான வசீகரமான பெண் பெயரில் ஓடும் பஸ் வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் இந்தப் பஸ்ஸில் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆன் லைனின் பதிவு செய்யவேண்டும். ஏசி வண்டி. விலை அதிகம். தேர் மாதிரி தெரு முழுவதையும் அடைத்துக்கொண்டு அந்த வண்டி வந்து கொண்டிருந்தது. கை காட்டினேன். நிற்காமல் போய் விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். டிரைவர் நிறுத்தினான். 'சீட் இருக்கிறதா?' என்று கேட்டேன். 'இருக்கிறது,' என்றான். நான் இன்று சென்னை போகப்போகிறோம் என்ற நினைப்பில் ஒரு பை நிறைய நவீன விருட்சம் 75 - 76 இதழ் பிரதிகளை அடுக்கிக் கொண்டேன். அதைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு சீகாழியில் மேற்குறிப்பிட்ட பஸ்ஸில் ஏறினேன். இப்படி அதிகமாக மீந்துபோகும் இதழ்களை ஒன்றாக்கி ஒரு புத்தகமாகக் கொண்ட

அழுகையும் அவனின் நகைச்சுவையும்

நான் இழந்து விட்டேன். எல்லாவற்றையும் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என அழுதான் அவன். அவனைச் சுற்றிலும் கல் நெஞ்சைக் காட்டி கனத்துயர்ந்த மலைகள். பூமித் தாய்க்காய் நீரில் நெய்த வெள்ளிச் சேலையாய் வளைந்தோடும் அருவிகள். இடைவிடாது காற்றை வீசி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் மரங்கள். இளமைத் துடிப்புடன் அவனோடு இடறி விளையாடும் இளந் தாவரங்கள். வனப்பான நட்சத்திரங்களுடன் வளைந்து விரிந்த வானம். அவன் மனதை விரித்து உலர்த்த விரிந்த மயானம். மனதை ஈரப்படுத்திக் கொண்டே இருக்கும் பதமான நீர் துளிகள். சுற்றி இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்து அழுதான். கதறி கதறி அழுதான். '' நான் இழ்ந்து விட்டேன் எல்லாவற்றையும்....... இனி இழப்பதற்கு எதுவுமில்லை '' எனப் புலம்பி அழுதான். சுற்றி இருக்கும் அனைத்தும் அவனைப் பார்த்து சிரித்தன. அந்த சிரிப்பொலி மட்டும் அவனுக்குக் கேட்கவே இல்லை.

பத்மநாபன் எதையோ தேடுகிறார்

பத்மநாபன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து சுரம், தலைவலி என்று எதுவும் வந்ததில்லை. அடிக்கடி வயிறு வலிக்கும். அதுவும் அஜீரணத்தினால். ஆனால் ஒருமுறை சுரம் வந்துவிட்டது. அவரால் நம்ப முடியவில்லை. அவர் பள்ளிக்கூடம் படித்த நாட்களில்தான் ஒவ்வொரு வருடமும் அவருக்கு மே மாதத்தில் சுரம் வந்துவிட்டுப் போகும். அதன்பின் அவருக்கு சுரம் அடித்ததே இல்லை. வயிற்றைக் கட்டுப்படுத்தாத அஜீரண தொந்தரவுதான் அடிக்கடி அவருக்கு இருக்கும். அன்று சுரம் வந்தவுடன், அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த ஊரில் அவர் மருத்துவமனைக்குச் சென்ற தில்லை. டாக்டர் என்று யாரையும் பார்த்ததில்லை. சென்னையிலும் பெரும்பாலும் அவர் டாக்டரைப் பார்ப்பதில்லை. அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரு நண்பர் சிவாதான். இருவரும் இலக்கியம் பேசும் நண்பர்கள். சிவாக்கும் அவருக்கும் பலமடங்கு வயது வித்தியாசம். ஆனால் இலக்கியம் பேசும்போது வயது வித்தியாசம் தெரியாது. பார்ப்பதற்கு இளம் வயதுக்காரராக இருந்தாலும், சிவா எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அவரைத்தான் பத்மநாபன் போனில் கூப்பிட்டார். சுரம் என்றார். சிவா பத்மநாபனைப் பார்க்க வரும்போது ரசக் கரைசலை

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

பூக்கள் வெட்கமின்றி சிரித்தது கொட்டும் மழையில் குளிக்கும் ரோஜாப்பூ சூரியன் மறைவில் கூம்பிய மலர்கள் மூடிப்பிடித்தவை அப் பாவி வண்டுகள் பனிபூக்க முகம் பூக்கும் நான் வளர்க்கும் ரோஜாப்பூ மனிதரோடு மாடுகள் போகும் ஊரோர தார்ச்சாலை மரங்கள் இறைந்திருக்கும் மலர்கள் இரவில் ஊரார் கால் கழுவ போகுமிடம் பெருமாள் குளம் புண்ணாய் நீரெல்லாம் ஊதாப்பூ வேலைக்குப் போகும் மகளிராய் பஸ் ஸ்டாண்டில் கூடைப்பூ அருகழைத்து பின் விரதமென்று புறந் தள்ளும் பவழ மல்லி. - பதி

வருந்துகிறேன்

காலையில் வண்டியில் திருவள்ளூர் பக்கம் போய்க் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தச் செய்தியை sms மூலம் பாரதிமணி அனுப்பியிருந்தார். வெங்கட்சாமிநாதன் மனைவி மரணம் அடைந்த செய்தியை. வெங்கட்சாமிநாதன் வீட்டிற்குச் செல்லும் ஒவ்வொருமுறையும், வரவேற்று உபசரிப்பவர் அவர் மனைவியும் கூட. சமீபத்தில் கீழே விழுந்து, அடிப்பட்டுக் கொண்டார் வெங்கட்சாமிநாதன். அந்தத் துயரத்தை வெ சாவின் மனைவியும் வெளிப்படுத்தினார். அந்தச் சமயத்தில் இருவரையும் போய் பார்த்ததுதான். சென்னையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது அவ்வளவு சுலபம் இல்லை. அது ஒருவிதமான நரகம். திருவள்ளூர் போய்விட்டு மாலைதான் திரும்பினேன். வெ சா வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. மனைவியை இழந்து நிற்கும் அவருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மனைவியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். - அழகியசிங்கர்

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத்

விதி அந்திக் கருக்கலில் இந்தத் திசை தவறிய பெண் பறவை தன் குஞ்சுக்காய் தன் கூட்டுக்காய் அலைமோதிக் கரைகிறது எனக்கதன் கூடும் தெரியும் குஞ்சும் தெரியும் இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை - கலாப்ரியா

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

திட்டமற்ற...... வானம் கட்டுப் பாடற்று பெற்றுத் திரியவிட்ட மேகங்கள் பொல்லா வாண்டுகள் நினைத்த இடத்தில் கவலையற்று நின்று தலையில் பெய்துவிட்டு மூலைக்கொன்றாய் மறையுதுகள் வெள்ளை வால்கள் - எஸ் வைதீஸ்வரன்

புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதி

இது என் பேப்பர் ரெயிலில் செல்கையில் அடுத்தவர் தோள்மேல் அரை மேய்ந்ததில்லை விரைந்து விழுங்கும் இரவல் ஷீட் அல்ல கைக்குள் வைத்து மடித்துப் படிப்பேன் மேஜைமேல் போட்டு விரித்துப் பார்ப்பேன் பகலிலும் படிப்பேன் இரவிலும் படிப்பேன் படிக்காமல் கூட தூக்கிஎறிவேன் இது என் பேப்பர் (புள்ளி என்ற பெயரில் ஒரு சின்ன கவிதைத் தொகுதியை இலக்கியச் சங்க வெளியீடு டிசம்பர் 1972 ஆம் ஆண்டு. அப்போது அதன் விலை 30 பைசா. அதில் வெளியான கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் - அழகியசிங்கர்)

முக்காட்டு தேவதைகள்

தீயெரித்த வனமொன்றின் தனித்த பறவையென வரண்டு வெடித்த நிலமொன்றின் ஒற்றைச் செடியென சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து உயிர் பிழைத்தவள் நிறைகாதலோடு காத்திருக்கிறாள் அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள் சோரச் சோரச் சொட்டுச் சொட்டாய்க் கண்ணீர் தூவி நிறைத்து பொழுதனைத்தும் துயர்பாடல்கள் இரைத்து எண்ணியெண்ணிக் காத்திருக்கிறாள் பிரவாகங்கள் சுமந்துவரும் வலிய கற்களும் ஒலிச் சலனத்தோடு நகர்கையில் தொன்ம விடியலொன்றில் நதியோடு மிதந்த இலையொன்றின் பாடல்கள் குறித்துக் காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை அவளது தூய காதல் குறித்தும் அவளைத் தவிர்த்துக் குறிப்புகளேதுமற்றவளானவளிடம் ஏதும் கேட்டால் வெட்கம் பூசிய வதனத்தை திரையை இழுத்து மூடிக் கொள்கிறாள் நிரம்பி வழியத் தொடங்கும் கண்களையும் அவன் போய்விட்டிருந்தான் அச்சாலையில் எவரும் போய்விடலாம் மிகுந்த நம்பிக்கைகளைச் சிதைத்து ஏமாற்றங்களை நினைவுகளில் பரப்பி துரோகங்களால் போர்த்திவிட்டு அவனும் போய்விட்டிருந்தான் அதைப் போல எவரும் போய்விடலாம் தூய தேவதைகள் மட்டும் என்றோ போனவனை எண்ணிக் காத்திருப்பார்கள் என்றென்றும்

அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்குஒரு திறந்த கடிதம்

விளக்கு பரிசு பெற்ற பிறகு நீங்கள் அளித்த பேட்டியை (அம்ருதா பிப்ரவரி 2010) படிக்க நேர்ந்தது. பரிசுகளிலும் விருதுகளிலும் நம்பிக்கை உள்ளவர் நீங்கள் என்ற போதிலும் பரிசுகளுக்கு எந்த மரியாதையையும் தராதவன் என்ற போதிலும் முதலில் என் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். “நாங்கள் கண்ணதாசனின் பேரப்பிள்ளைகள்” என்ற அறிவிப்பைச் செய்து நவீன தமிழ் இலக்கியவாதிகளையும் இலக்கிய இயக்கங்களையும், அவர்களின் யத்தனங்களையும் மிக எளிமையாக சினிமாக்காரர்களின் வியாபரங்களுக்கு கீழ்மையானவையாக ஆக்கியிருக்கும் உங்கள் கவித்துவத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. மேலும் உங்களின் “நாங்கள்” என்ற அறிவிப்பில் என்னைப் போன்றவர்களைச் சேர்த்து எழுத உங்களுக்கு யார் அனுமதியோ அல்லது உரிமையோ அளித்தது? தயை கூர்ந்து பதில் அளிப்பீர்களாக. வேண்டுமானால் நீங்களும் கலாப்ரியாவும் எந்த சினிமாப் பாடாலாசிரியருக்கு வேண்டுமானால் என்ன உறவாகவும் இருந்துவிட்டுப் போங்கள். உங்கள் விசுவாசிகளை மாத்திரமே அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஒரு சந்தேகத்தை நீங்கள் நிவர்த்திக்க வேண்டும். உங்கள் பட்டியலில் பிச்சமூர்த்தி, சுரா, அரூப் சிவராம்(பிர

எதையாவது சொல்லட்டுமா....17

கொஞ்ச நாட்களாய் இதைப் பற்றி எழுத வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். வழக்கம்போல் நேரத்துடன் என்னுடைய போராட்டம் நின்று விடவில்லை. பவித்திரா மெஸ்ஸில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் செய்தியைக் கேள்விபட்டேன். சன் செய்தியில் திரும்ப திரும்ப அந்த சிடி ஓடிக்கொண்டிருப்பதாக. நித்யானந்தா பற்றிய சிடிதான் அது. அதைப் பார்த்தபோது எனக்குப் பெரிய அதிர்ச்சி எதுவுமில்லை. விகடனில் நித்தியானந்தா எழுதுவதை நான் படிக்கவே மாட்டேன். விகடனே தொடர்ந்து வாங்க மாட்டேன். எதாவது விகடன் இதழில் இதைப் பார்க்கும்போது என்ன அப்படி எழுதுகிறார் என்று யோசித்துக் கொண்டும் இருப்பேன். என் அலுவலகத்தில் வெங்கட்ராமன் ஒருவருக்கு நித்தியானந்தர் குரு. அவர் பதவி உயர்வுப் பெற்று பொறுப்பேற்கக் கூட நித்தியானந்தரிடம் அனுமதிப் பெற்றுதான் சேர்ந்தார். அவரைப் பற்றி உயர்வாக என்னிடம் சொல்வார். அப்ப கூட நித்தியானந்தரைப் பற்றி தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டதில்லை. அதேபோல் எனக்கு தப்பாகக் கூட எதுவும் தோன்றாது. அவரைப் பற்றி சாருநிவேதிதா எழுதியபோது எனக்கு நித்தியானந்தரைப் பற்றி சாருநிவேதி