Skip to main content

Posts

Showing posts from June, 2011

எதையாவது சொல்லட்டுமா........44

உங்களுக்கு கல்யாண சுந்தரம் தெரியுமா? எப்படி தெரியும்? நான் சொன்னால்தான் தெரியும். இது கணனி யுகம். எல்லாத் துறைகளிலும் பெரிய மாற்றம் நடந்தவண்ணம் உள்ளது. வங்கியிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் வங்கியின் கணனியின் Intranet மூலம் ஒருநாள் வங்கியின் சர்குலர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய அதிர்ச்சி எனக்கு. கல்யாணசுந்தரம் இறந்துவிட்ட செய்தி தெரிந்தது. நான் பார்த்த சமயம் ஏப்ரல் மாதம். கல்யாணசுந்தரம் மரணம் அடைந்த மாதம் மார்ச்சு மாதம். இந்தக் கல்யாணசுந்தரம் எனக்கு தூரத்து உறவு. அவர் இறந்த விஷயத்தை என் பெரியப்பா குடும்பத்தைச் சார்ந்த யாரும் தெரிவிக்கவில்லை. கல்யாணசுந்தரத்தை மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பீச் வரை வரும் மின்சார வண்டியில் தினமும் சந்திப்பேன். அப்படி இல்லாவிட்டாலும் ஹார்பர் கிளையில் கீழே வரும்போதெல்லாம் சந்திப்பேன். அப்போது நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதிகமாகப் பேச மாட்டோ ம். எதாவது ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பேசுவோம். அவ்வளவுதான். கிளார்க்காக இருக்கும்வரை அவருக்குப் பிரச்சினை எதுவுமில்லை. ரொம்ப ஆண்டுகளாக அவர் எந்தப் பதவி உ

பசுவும் நிலாவும்

பௌர்ணமி இரவின் பரந்த வெளியில் கொட்டகைத் தொட்டியில் கொட்டிய கழனியை சப்பி சப்பி குடித்தது பசு. நிலா மிதந்த கழனியை மென்று மென்று சுவைத்தது. மிகுந்த சுவையாய் இருந்ததாய் சிலாகித்தது. மெல்ல மெல்ல வாய்க்கு பிடிபடாமல் தொட்டியில் எஞ்சிய கழனியிலேயே கொஞ்சி விளையாடியது நிலா. கன்று வாய் வைத்ததும் காணாமல் நிலா போக பசு கன்றைப் பார்த்தது சந்தேகமாக

சுயநலம்

அதிகமாய் பேசுகிறேனோ அடிக்கடி சந்தேகம் வருகிறது பேசாமல் இருப்பதே உசிதம் சமயத்தில் தோன்றதான் செய்கிறது கேட்பவர் முகங்களில் தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல் தொடர விழைகிற மனதின் மேல் கோபம் கூட வருகிறது பேசுவதை நிறுத்தி விடலாமெனப் பொறுப்புணர்வுடன் தீர்மானிக்கப் போகையில்.. யாருக்காகப் பேசுகிறேன் எனும் கேள்வி எழ, புரிய வந்தது இதுகாலமும் பேசிய யாவும் எனக்காகவே என்று. ஒத்தி வைக்கப்பட்டது காலவரையரையின்றி தீர்மானம். *** ***

வினோதமான பறவை

ஒன்று வினோதமான பறவை சப்தம் இட்டப்படி இங்கும் அங்கும் சென்று கொண்டிருந்தது மண்ணில் எதைத் தேடிக் கொண்டிருக்கிறது கோட்டான் பூனை மதிற்சுவரில் சோம்பலாய் சயனித்துக்கொண்டிருக்கிறது கீழே குடியிருப்பவர் துருப்பிடித்த சைக்கிளை எங்கே எடுத்துச் செல்கிறார் வெயில் கொளுத்துகிறது மரங்கள் அசையவில்லை கதவைச் சாற்றிவிட்டு வெளியில் அமர்ந்திருந்தேன் ஆமாம்.. என் நேரமும் உங்கள் நேரமும் ஒன்றல்ல.. 27.05.2011 மதியம் : 1.50

அதிர்வு தாங்கா அறைகள்

அறையை விட்டு வெளியேறுகிறேன் விதிக்கப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து நின்ற மரத்தின் நிழலில் ஆசுவாசமடையத் தொடங்குகிறேன் நான் வெளியேறிய அறை முன்னிலும் பிரகாசிக்கிறது அடைசலாயிருந்த புத்தக அலமாரியின் சுண்ணாம்புகள் மீண்டும் பூசப்படுகின்றன முட்டைகளின் நாற்றம் போக பளிங்குக்கற்களில் சோப்புகளை பிரயோகிக்கிறார்கள் இவன் வெளியேற்றம் இன்னொருவனுக்கான வழி என யாரும் சொல்லிவிடாதீர்கள். என் அறைகள் அதிர்வுகளைத் தாங்குவதில்லை

சில நேரங்களில்

சில நேரங்களில் ஒரு கவிதையில் சொல்லப் பட்டதுடன் சொல்ல விழையாதது நுழைந்து விடுகிறது ஒரு எடுப்பான நிறத்தோடு ஒளிந்து விளையாடும் விளையாட்டு மறைந்திருப்பவரைக் கண்டுபிடித்ததும் முற்றுப் பெறுகிறது - சிறிது நேரம். சீருடையில் ஒரு முகமும் தனியுடையில் ஒரு முகமுமென அடையாளமணியும் சொற்கள்... சிறகென்றெழுதிய கணத்தில் மிதந்தவை தமிழின் இறகில் இருந்து பிரிந்த சிறகொன்றும் லெபனானின் முறிந்த சிறகுகளும் மட்டும பறவை என்றெழுதிய போதே பார்வையில் அவசர வண்ணங்கள் தீற்றப் பெற்றால் தாளின் வெண்மையில் கரைந்திருக்கும் பறவைகள் காணா ஆழத்தில் அமிழ்ந்து தடமறுக்கும் கருப்பும் வெள்ளையும் தவிர்த்த நிறங்களிலும் பூக்கத்தான் செய்கின்றன பூக்கள் எங்கும். -

ஆடுகளம்

ராமலக்ஷ்மி வாழ்க்கை ஏட்டின் வாசித்த முடித்த பக்கங்கள் காற்றில் படபடக்கையில் கண்ணில் மாட்டுகிற பரம பத ஏற்ற இறக்கங்கள் தாய உருட்டல்களில் வாங்கிய வெட்டுக்களாகச் சில வருத்தங்கள் இலகுவாய் தாவிக் கடந்த பாண்டிக் கட்டங்களாகச் சில சந்தோஷங்கள் பல்லாங்குழியில் வெற்றிடம் துடைத்தோ ‘பசு’வெனக் கூவியோ வெள்ளைச் சோழிகளை அள்ளிய குதூகலங்கள் நேர்மைத் திறமற்ற கண்ணாமூச்சித் துரோகங்கள் பம்பரத் தலைக்குள் நுழைகிற ஆணிகளாக நெஞ்சைத் துளைத்த பிரிவுகள் விண்ணைத் தொட்ட ஆனந்தமாக விரல்நுனியில் பிடி இருக்க உலவ விட்டப் பட்டங்கள் கணநேரக் களிப்பைத் தந்த வெற்றிக்காகக் கட்டம் கட்டமாகக் காய்நகர்த்திய உறுத்தல்கள் கல்லா மண்ணா.. வாழ்க்கை பொறிக்கப்படுமா மண்ணோடு மறையுமா கேள்வியில் தொடங்கிய வேள்விகள் காலம் வர்ணனையுடன் வரைந்து வைத்த குறிப்புகளில் அடிக்கோடிட்டுப் போற்றியும் அறவே மறக்க விரும்பியுமாய் வாழ்க்கை வரிகள்... எவற்றாலும் எவருக்கும் வற்றுவதாகத் தெரியவில்லை ஆட்டத்தைத் தொடரும் ஆர்வமும் அடுத்த நாளை வாசிக்கும் ஆவலும் சிறப்பான அல்லது இன்னும் சிறப்பான ஏதோ ஒன்று காத்த

அனுமானங்கள்

அனுஜன்யா ஜன சந்தடி மிகுந்த தெரு முனையில் பேசிக்கொண்டிருந்தனர் புதுக் காதலர்களா? குறுகுறுப்பைக் காணவில்லை மணமானவர்களா? சலிப்பும் தென்படவில்லை அல்லது... இல்லை ஒரு வேளை... பிரிந்து செல்லத் துவங்கி தயங்கி அவன் பார்த்தபோது திரும்பவில்லை அவள் திரும்பியபோது பார்க்கவில்லை அவன் ஹ்ம்ம். ‘அல்லது’க்கு ஒரு கதையும் ‘ஒரு வேளை’க்கு ஒரு நிறமும் தானாகவே சேர்கிறது இப்போது

கை பேசி கடவுள்களின் கோட்டோவியங்கள்

கடவுள்களைப் பற்றிக் கவியெழுதும் ஃபேஷனிப்போதெனவே வாலிப வயோதிக அன்பர்களே வரைகிறேனென் கோட்டோவியத்தை # வடிவமும் வாழ்வும் தந்த கடவுளுள் முரண்கள் மகா ஆச்சர்யம் நெஞ்சசகத்து அமிர்தமூட்டி நல்லவை அல்லவை சொல்லி வாழ்வின் திசைகள் காட்டி வளர்த்த தெய்வத்துள் வஞ்சகமும் சூதும் வந்ததெப்படி? புகையிருக்கும் கருவறைக்குள் பகையிருக்குமோ? தாய்த் தராசும் தடுமாறுமோ? # கடுங்காய்ச்சலின் களைப்பில் வீடு வந்தவனின் தலை வருடி மடிகிடத்தி உணவூட்டியப் பரிவின் உன்னதத்தில் சாந்த சொரூபியாய் உயர்வடிவம் கொள்கிறதிக் கடவுள் # வாரிசாய் வந்த கடவுளின் குழந்தை கொஞ்சம்(-)ம் கூடுதலாய் (+)ம் கொண்ட தேவகிருபைக்கு என் மீதான அக்கறையும் தன் மீதான தன்னலமும் அதிகம் அதிகம் # முரண்களில் முகிழ்த்த முடிச்சு ஒளிவளையமாய்ப் பின்னியங்கும் இறைமையின் நேசத்தில் நெக்குருகிப் போகிறது நெஞ்சு # ஆண்டவம் ஆதிக்கம் செலுத்துமோ ஆடவ உலகம் மறுக்குமோ சொர்க்கத்துள் சிறை வைக்கும் பிரயத்தனம் தாண்டி தப்பியதென் வரம் # இச்சை மிகுந்த இறைவியின் காதல் பெரிதா காமம் பெரிதா உக்கிர அணைப்பின் யானைப்பசிக்க்கு எம்மாத்திரம் சோளப்பொறி # வரமளித்த தேவதை

ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு

உள்ளிழுக்கவும் வெளித்தள்ளவும் செய்யும் தண்ணீரின் மாய மிதவை கணத்துள் பிரவேசிக்கும் பொழுதில் எடையற்ற ஒரு வெளியின் வெளிச்ச கணங்களில் மொழி மென் துகிலென நழுவிச் செல்லும் நளினமாய் கண்கள் அறியாக் காற்றின் உணர்சித்திரங்களும் பரவசம் பேசிச் செல்லும் வார்த்தைகளற்று. வழியற்று வலியுற்று வளி போல் திடமற்று நெகிழும் மனதை நிலை இருத்த பூக்களைப் பார்க்க பசிய கிளை நுனிகளில் நீள் விரல் மருதாணியாய் பூத்திருக்கும் செந்நிற பூக்களின் விகசிப்பில் நுட்பங்களின் மென்னொளி துலங்கும் அகமொழி இதழ் இதழாய் ததும்பி சிலிர்க்கிறது வண்ண வார்த்தைகளாய். அசையும் இருப்பே மொழி என்றுணரும் வேளை மரத்திலிருந்து மிதக்கும் அச் செம்பூக்கள் மெல்லத் தடம் மாறி கண்களில் உயிர்க்கிறது ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு.

கார்க்கால ஞாபகங்கள்

மழையின் கிணுகிணுப்பு ஒரு மெல்லிய பாடலாய் மீட்டெடுக்கும் நான் தொலைத்த ஞாபகங்கள் எல்லோர் கையிலும் குடை பூக்க மழை நனைக்க நான் தனியளாகின்றேன் தன் குடை தந்த அந்த வெள்ளுடைத் தோழனின் புன்னகை மிகப்பிடித்தமாய் இதயத்தில் நடந்து போயிற்று. மழை மழையென யன்னல் வெளியில் செடியிடையில் அலையும் மனதை இழுத்துப்பிடித்து உற்சாகமாய் இஞ்சி பிளேன் டீ ,மொறு மொறு மாரி பிஸ்கட் பொருளியல் இறுதிப்பரீட்சை இப்போதும் மழை நிலம் சேர்ந்தால் ஊன்றிப்படிக்கும் உணர்வே துள்ளும்… இடையறாது பேசும் மழை உம்மாவின் கை மணக்கும் தேநீர் வெளிக்கிளம்பும் ஆவி ஒரு மேசை நாற்காலி கன்னத்தில் இருகை பதித்த நான். இனிக்குமென் கார்காலச் சித்திரம். கால் நிலத்தில் படராத வயது துள்ளும் கால்கள் இருகை ஆட்டி இன்னொரு மழையாய் குதூகலிக்கும் நான் இரு தங்கைகள் மழைக் குளியல் வாசற்படியில் தலை சாய்த்து ரசிக்கும் என் வித்தியாசமான உம்மா. வீட்டின் நாற்சக்கர வாகனம் சிறகு முளைக்கும் அதிசயம் மழைநாளில் மாத்திரமே சாத்தியம்! பாதி இழுத்த வேன் கதவு… முழுதாய் முகம் மழை வாங்கும். ஊசிக்குத்தாய் இறங்கும் கோடை மழையும் வலிக்காது. நாடு

எதையாவது சொல்லட்டுமா........43

முன்பெல்லாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது அவ்வளவு சுலபமாக இருந்தது. உடம்பும் ஒத்துழைப்பு கொடுத்தது. இப்போது பயணம் என்றால் சற்று அச்சமாகவே இருக்கிறது. அதுவும் பஸ்ஸில் பயணிப்பது, வெகு தூரம் செல்வது என்பதை கற்பனை செய்ய முடியவில்லை. அதற்கு ஒரு காரணம் சீர்காழியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பஸ் பயணம் இன்னமும் செய்து கொண்டிருப்பதால்தான் இந்த அவதியை உணர முடிந்தது. ஆனால் ரயிலில் வருவது சற்று ஆறுதல் தரக்கூடிய விஷயம். பெரும்பாலும் டிக்கட் கிடைப்பது ரொம்பவும் கஷ்டமான விஷயமாகிவிடும். என் உறவினர் ஒருவர் 2 மாதத்திற்குமுன் ரிசர்வ் செய்தாலும் கடைசி நிமிடத்தில் டிக்கட் காத்திருக்கும் நிலையிலிருந்து மாறாது. காலச்சுவடு கண்ணன் அவர்கள் சு.ரா. 80 நிகழ்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். கன்னியாகுமாரியில் நடக்கும் இந்த நிகழ்வுக்கு வர எனக்கும் விருப்பம். ஆனால் நான் இருக்கும் மயிலாடுதுறையிலிருந்து திருச்சி வரைக்கும் ஒரு ரயிலைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும். பின் திருச்சியிலிருந்து கன்னியாகுமாரி போக வேண்டும். 2 நாள் லீவு எனக்குக் கொடுப்பதே ஏதோ வங்கியே நின்றுவிடுவதாக நினைப்பவர்