Skip to main content

Posts

Showing posts from May, 2011

தண்டனை !

அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை கலந்த ஏப்பத்துடன் வெளியானதில் அவள் முகம் சுளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. எல்லா அழகிகளும் ஒன்று போல மதுவாடையை ஏற்றுக் கொள்பவர்களல்லர். அல்லது அஸ்விதாவைப் போல எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாவண்ணம் மறைக்கத் தெரிந்தவர்களுமல்லர். வீட்டு வாசலில் இரண்டு நாட்களாகத் தண்ணீர் ஊற்றப்படாதிருந்த போகன்வில்லாச் செடிகள் வாடியிருந்தன. வெண்ணிறப்பளிங்குத் தரையில் அதன் செம்மஞ்சள் நிறப்பூக்கள் உதிர்ந்து வீழ்ந்து குப்பையாகிக் கிடந்ததைக் கவனிக்காமல் அஸ்விதா என்ன செய்கிறாளெனக் கோபம் வந்தது. வழமையாக இதன் பராமரிப்பு எல்லாம் அவள் பொறுப்பில்தான். இதில் நீங்கள் ஆச்சரியப்பட ஏதுமில்லை. உங்கள் வீட்டிலும் பெண்கள் இது போன்ற வேலைகளைத் தாங்களே ப

கண்ணீரின் புனிதம்

உப்பெல்லாம் கண்ணீரில் கரைந்து விடுவதால் உணர்வுகளும் கண்ணீரோடு கரைந்து விடுமாவெனத் தெரியவில்லை. கன்னத்தில் சொட்டுகிற கண்ணீர் சுத்தமானதா அசுத்தம் கலந்ததாவென அறிய இயலவில்லை. தோண்டி விட்டார்களா ஊற்றாய் ஊறி வந்ததாவெனவும் தெரியவில்லை. ஆனால் அனுதாப அலைகளால் அனைவரையும் சுனாமியாய் அபகரிக்க இயல்கிறது சில துளி சொட்டும் கண்ணீரால்.

நிசி

இலைகளற்று மூளியாய் நிற்கும் மரம் பீதியைக் கிளப்பியது கும்மிருட்டில் கள்வனைக் கண்டது போல் வெற்று வெளியைப் பார்த்து நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன தாகம் தணிக்க அடுக்களைக்கு போன என்னை வரவேற்றது திருட்டுப்பூனை தூக்கம் வராத இரவுகளில் மொட்டை மாடியில் வானம் பார்த்துக் கிடப்பது வழக்கம் படுக்கையில் தலையணை மட்டும் இருக்கட்டும் மனதிற்கு சஞ்சலம் தரும் நிகழ்வுகள் வேண்டாமென்று வானம் போதனை செய்தது தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் எல்லோரிடமும் எப்படி இந்தச் சங்கதியை சொல்வது எனத் தெரியாமல் பள்ளிக்கூட மாணவனைப் போல் மலங்க மலங்க விழித்தேன் நான்.

உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

நான் மழை ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன் உன் பழங்கால ஞாபகங்களை ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் எனை மறந்து சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும் குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய் ஆனாலும் உன் முன்னால் உனைச் சூழச் சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன் உனைக் காண்பவர்க்கெலாம் நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க் கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும் எனக்குள்ளிருக்கும் உன் மழைக்கால நினைவுகளைத்தான் நீ மீட்கிறாயென எனை உணரவைக்கிறது எனது தூய்மை மட்டும் இன்னும் சில கணங்களில் ஒலிச் சலனங்களை நிறுத்திக் குட்டைகளாய்த் தேங்கி நிற்க நான் நகர்வேன் சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி 'அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?' எனக் கோபத்தில் நீ அதிர்வாய் எனைத் தனியே ரசிக்கத் தெரியாத நீ மட்டும் மனிதனா என்ன?

உப்பு

_ தலைவர்,மனிதவள மேம்பாட்டுத் துறை. பளிச்செனக் கண்ணில் பட்டது. அறைக் கதவின் மீதிருந்த ப்ளாஸ்டிக் பலகை. பலகைக்கு மேலே üதற்காலிகம்ý என ஸ்கெட்ச் பேனாவில் எழுதப்பட்ட மஞ்சள் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. கதவை மெல்லத் திறந்தாள். ரூம் ஸ்ப்ரே மணந்தது. சிகரெட் வாடையடித்தது. செவ்வக அறை. கதவு அறையின் ஒரு ஓரத்திலிருந்தது. மறுமூலையில் அந்த அதிகாரி உட்கார்ந்திருந்தார். "நான் உள்ளே வரலாமா...?" "வெல்கம்" அறைக்குள் நுழைந்தான். மூலைவாட்டில் குழலூதும் கண்ணன் பொம்மையாய் நின்றுகொண்டிருந்தான். "நான் மதியழகன்" "வளையாபதி......" கரகரத்த பெரியகுரல். கைகுலுக்கினான். விரல்கள் லேசாய் வலித்தன. சிகரெட்டிருந்த இடதுகையில் நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னார். தடித்த கண்ணாடிக்குள்ளிருந்து இரண்டு கோலிக்குண்டு கண்கள் தன்னை ஊடுருவுவதை உணர்ந்தான். மறுவிநாடி எதிரேயிருந்த கணினியை இயக்கினார். ஒரு நிமிடம் ஸ்கிரீனில் வருவதை நன்றாகப் பார்த்துக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினார். "மிஸ்டர் மதியழகன். அப்பாவைச் சந்தித்தீர்களா?.." திகைத்தான். கணத

சாய்பாபா

வெற்றிகரமாக விளங்கும் எந்தவொரு கோட்பாடும் அதன் வளர்ச்சிப்போக்கில் மூன்று நிலைகளைக் கொண்டிருப்பதாக வில்லியம் ஜேம்ஸ் கூறுவார். முதல் நிலையில் அக்கோட்பாடு அபத்தமானது என்று தாக்கப்படும். இரண்டாம் நிலையில் அது பழக்கப்பட்ட ஒன்றாகவும் உண்மை என்று ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் கருதப்படும். இறுதி நிலையில் அதன் அத்தியாவசியம் உணரப்பட்டு அதைத் தாங்களே கண்டுபிடித்தது போன்று அதன் விமர்சகர்களும் சீராட்டுவார்கள். சத்ய சாய்பாபாவை ஒரு கோட்பாடு என்கிற அளவில் சுருக்கிக்கொண்டு பார்க்க முடியாதெனினும் அவரும் இந்த மூன்று நிலைகளையும் கடக்க வேண்டியிருந்தது. ஷிர்டி சாய்பாபா இறந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு 1926இல் பிறந்த சத்யநாராயண ராஜூ தனது பதினான்காம் வயதில் தான் ஷிர்டி பாபாவின் மறு அவதாரமான சாய்பாபா என அறிவித்தபொழுது அவர் சிற்சில அதிசயங்களையும் புரிய ஆரம்பித்திருந்தார். தன் நண்பர்களுக்கு திடீரென லட்டுகள், மாம்பழங்கள் ஆகியனவற்றை வரவழைத்துக் கொடுப்பது போன்றவை மட்டுமல்லாது ஷிர்டி பாபா தன் பக்தர்களிடம் என்னவெல்லாம் சொன்னாரோ அவற்றைஎல்லாம் அவர்களிடமே நினைவூட்டி அசரவைத்தார் சாய்பாபா. சாய்பாபாவிற்கு

முகங்கள்

சில முகங்கள் வெகு சீக்கிரமாகவே முதுமை அடைகின்றன. ஏமாற்றங்கள் அவற்றில் எழுதி ஒட்டியிருக்கும். குழந்தைகளின் பிடிவாதத்தினால் தாடைகள் இறுகியிருக்கும் குடும்பத்தில் பல சாவுகளினால் மூக்கு எப்பொழுதும் விம்மிய நிலையிலிருக்கும் ஒவ்வொரு முகமும் கர்ப்பப்பையினுள்ளே நீண்டநேரம் தீர்மானித்திருக்கும் - லௌகீக விஷயங்கள் தன்னை எப்படி பாதிக்கும் என்பதை - பிரச்சினைகள் வரும்போது குப்புறப் படுப்பதா கண்காணாத ஊருக்கு ஓடிவிடுவதா என்பதை. சில முகங்கள் விட்டுக் கொடுக்கின்றன வேறு சிலவோ விடைத்து நிற்கின்றன சில முகங்கள் பிரகாசமாய் தெளிவாய் தெரிகின்றன வாழ்க்கையின் விடை தேடி அவற்றை நாம் ஆராய்கிறோம் முப்பத்தோரு வயதான முத்துப்பல்லழகி நிர்மலா சொன்னாள் üஎன் அப்பா பெயர் ராமச்சந்திரன்.நாங்கள் குழந்தைகள் கூட்டாக ராமோ, ராமா, ராமென என்று அவர் காதுபடி ராம சப்தம் சொல்வோம்.ý அவள் கண்களின் உற்சாகம் உங்களையும் பற்றிக்கொள்ளும் ரெடிமணியில் முப்பதாயிரம் இழந்த ராகவன் சொன்னான். üஉலகம் தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டது. இந்த நம்பிக்கை இல்லாமல் வாழ்வதில் அர்த்தம் இல்லை. நம்மில் சிலருக்கோ வசவுகள்

மையம்

நிர்மாலியப்படாத பூக்கள் தெய்வத்தின் திருமேனியை அலங்கரிக்கும் பால் வற்றிப் போன தாயின் முலை சப்பும் குழந்தை பள்ளிக் கூட வாசலில் வியாபாரியின் கைபட்டவுடன் புதுப்புது வடிவெடுக்கும் பஞ்சுமிட்டாய் ஏனோ சிறுவர்களை ஈர்க்கும் வாழை இலை அசைவைப் பார்த்து பயந்து போன சிநேகிதன் ஜுர வேகத்தில் உளறிக்கொண்டிருந்தான் பேயைப் பார்த்ததாக சிட்டுக் குருவியின் சீண்டல்களைப் பார்த்து செவ்வந்தியின் மனம் சிறகடிக்கும் அந்தி நேரம் கணவனின் வருகைக்காக முகம் கழுவி பவுடர் பூசி வாசலில் காத்திருக்கும் தோப்புக்காரன் தேங்காய் தலையில் விழுந்து கபாலம் சிதறி இறந்து போனான் உச் கொட்டிய கூட்டம் தேங்காய் சிரட்டை கூட ஈயமாட்டாரு போறப்ப என்னத்த எடுத்துகிட்டு போனாரு என்றது.

அறியாப் பிறவி

நான் கோபக்காரன் கொலைகாரன் காட்டுச் சிங்கமென்று எனது கவிதை நாயகனுக்குத் தெரியாது. அப்பாவியாய் அபகரிக்க வல்லவனாய் எண்ணி என்னை அன்றாடம் அலைக்கழிக்கும் சூன்யக்காரனான அவனறிய மாட்டான் நான் அவனை அவ்வப்போது எழுத்தால் கண்டந்துண்டமாய் வெட்டிப் பிளப்பதை. பாவம் அவன் என் கவிதைகளைப் படிப்பதில்லை. கவிதைகளும் அவனுக்குப் பிடிப்பதில்லை.

சில க.நா.சு கவிதைகள்

நல்லவர்களும் வீரர்களும் கடவுளுக்கு கண்ணூண்டு. அவனுக்கு வீரர்களையும் நல்லவர்களையும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். உண்மையில் வீரர்களையும்.சமாதான காலத்தில் நல்லவர்களையும் அதிகமாக இப்பாழான உலகத்தில் உலவ விடாமல் சீக்கிரமே கடவுள் தன்னிடம் அழைத்துக் கொண்டு விடுகிறான். கடவுளுக்கு உண்மையில் கண்ணுன்டு. நல்லவர்களையும் வீரர்களையும் அவனுக்குத் தெரியும் என்று நிச்சயமாக நம்பலாம் !

எதையாவது சொல்லட்டுமா - 42

வெயில் கடுமையாக இருப்பதால், நான் எதையாவது சொல்லட்டுமா பகுதியில் எதையும் சொல்லாமல் விட்டுவிட்டேன். பல கற்பனைகளை செய்து வைத்திருந்தேன். பெருந்தேவி, நேசன் கவிதைத் தொகுதிகளைப் பற்றி எழுதுவது. பின் பிரமிள் கட்டுரையைத் தொடர்வது என்றெல்லாம் நினைத்திருந்தேன். கவிதையைப் பற்றிய என் கட்டுரையைத் தொடரலாம் என்றெல்லாம் நினைத்திருந்தேன். வெயில் என் எண்ணத்தைச் சிதற அடித்துவிட்டது. என் இயலாமையை வெயில் மீது கொட்டுகிறேன் என்றுகூட தோன்றுகிறது. நாம் எந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது, அதை நிறுத்துவது எப்படி என்றும் யோசிக்க வேண்டும். எப்போதும் எதையாவது படிப்பதை நிறுத்திவிட்டு, பேசாமல் இருந்தால் என்ன என்றுகூட தோன்றுகிறது. நம்முடைய பிரச்சினை நாம் எதையும் நிறுத்தமுடியாமல் அவதிப் படுகிறோம். வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டிருக்காது. எதையும் தொடர்வதை நிறுத்திப் பார்த்து என்ன நடக்கிறது என்று ஆராய வேண்டும். ஒரு பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தேன். ஒவ்வொரு இதழிலும் அவர் ஏகப்பட்ட கவிதைகளை எழுதிக்கொண்டே போகிறார். அதைப் பார்த்தபோது, இவர் ஏன் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே போகிறார் என்

சில க.நா.சு கவிதைகள்

போ எட்கார் ஆலன் போவின் கதைகளைப் படிக்கும்போது மிகவும் உஷாராகத்தான் படிக்க வேண்டியதாக இருக்கிறது. ஏதாவது ஒரு வார்த்தையின் இடத்தையும் அர்த்தத்தையும் கவனிக்காமல் விட்டு விட்டால், அவன் என்னதான் சொல்ல வருகிறான் என்பது தெரியாமலே போய் விடுகிறது. இத்தனைக்கும் அவன் எழுதியதெல்லாவற்றையும் பத்திரிகைத் தேவைக்காக அவசர அவசரமாக எழுதினான் என்றுதான் தெரிகிறது. கவனமாகப் படிக்காவிட்டால் அவன் அர்த்தப்படுத்துவதற்கு எதிர் மறையாக வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ள ஏதுவாகியிருக்கிறது. லிஜீயா என்கிற கதையில் அவன் தனது இரண்டாவது மனைவியைக் கொன்றானா; ஆகாயத் திலிருந்து கொட்டிய விஷத்துளிகள் மனப்பிராந்தியா உண்மையின் எதிரொலியா பிரதிபலிப்பா என்று கண்டுகொள்ள முடியாமல் திணறிப் போவோம். தன் கூடப்பிறந்தவனைக் கொன்றானா? யாரையோ நட்புடன் உயிரோடு புதைத்து சாக விட்டுவிட்டு தான் செய்த தவறுக்குத் தண்டனை வேண்டி நின்றானா?-கவனித்துப் படித்தால்தான் தெரியும் வேறு விதமாகவும் பதினாறு விதங்களாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ள அவன் உபநிஷத்துக்கள் எழுதினானா? வெறும் கதைகள்த