12.9.11

உண்மை

 
 
 
 உண்மைகள் என்றால் 
அவனுக்குக் கொள்ளைப் பிரியம்

தனக்குத் தெரியாத உண்மைகளே 
இருக்கக் கூடாதென்பதில்
தணியாத மோகம்

அரைகுறை உண்மைகளை
அறவே வெறுத்தான்

முழு உண்மைகளை
என்ன விலை கொடுத்தேனும்
வாங்கத் தயாராக இருந்தான்

அவனது பாதுகாப்பே
விலையென்றாலும் 
பயப்பட மாட்டான்

எந்தக் கடையில் எந்த உண்மை
விலைக்கு வந்தாலும்
முதலில் அவனுக்கே 
சொல்லி அனுப்பினார்கள்

சந்தைக்கு வராத உண்மைகளைச்
சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்
சத்தியத்தை மீறியேனும் அவை தன்
சட்டைப்பைக்குள் வர
சகல உத்திகளையும் கையாண்டான்

சேகரித்த உண்மைகள்
இரும்பாய்க் கனத்து இழுத்தாலும்
காட்டிக் கொள்ளாமல்
நிமிர்ந்தே நடந்தான்

அறியாதவற்றால் ஏற்படும்
ஆச்சரியங்களாலும்
தெரிய வராதவற்றால் தொடரும் 
சுவாரஸ்யங்களாலும்
உயிர்த்திருக்கும் வாழ்வில்

மறுக்கப்படும் 
உண்மைகளால் மட்டுமே
பிழைத்துக் கிடைக்கும்
நாளையைப் பற்றியதான நம்பிக்கை 
என்கிற உண்மை மட்டும்

பார்வைக்குச் சிக்காமல் 
அவனது நடுமுதுகில் அமர்ந்து 
கண்சிமிட்டிச் சிரித்தபடி 
சவாரி செய்து கொண்டிருந்தது

தன்னை விலை பேசவே முடியாதென்று.

5 கருத்துக்கள்:

குமரி எஸ். நீலகண்டன் said...

உண்மையின் தரமானது நம்பிக்கையால் மட்டுமே உரசிப் பார்க்க இயலும். மூளையால் உண்மையின் தரத்தைக் கண்டு கொள்வதென்பது குழப்பமானது இன்றைய உலகில்...உண்மையின் சுமையில் உலவும் மனிதரை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

ராமலக்ஷ்மி said...

/மூளையால் உண்மையின் தரத்தைக் கண்டு கொள்வதென்பது குழப்பமானது இன்றைய உலகில்.../

அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.மிக்க நன்றி நீலகண்டன்.

ஷைலஜா said...

//அவனது நடுமுதுகில் அமர்ந்து கண்சிமிட்டிச் சிரித்தபடி சவாரி செய்து கொண்டிருந்தது
தன்னை விலை பேசவே முடியாதென்று///

அருமை....அதிலும் இப்படி முடித்தவிதம்!

Elango said...

//
மறுக்கப்படும்
உண்மைகளால் மட்டுமே
பிழைத்துக் கிடைக்கும்
நாளையைப் பற்றியதான நம்பிக்கை
என்கிற உண்மை மட்டும் //

நுட்பமாக கையாண்டிருக்கும் வரிகளுக்கு வாழ்த்துக்கள்..

sooryan said...

மிகவும் அழகான கவிதை... நன்றி... சூர்யா