Skip to main content

ராஜேஸ் குமார் சிறந்த கதைகள்

அழகியசிங்கர்






ராஜேஸ் குமார், தேவி பாலா, சுபா, ரமணிச்சந்திரன், இந்திரா சௌந்திரராஜன், பட்டுக்கோட்டை பிரபாகரன் போன்ற எழுத்தாளர்களின் பாக்கெட் நாவல்களை வாங்கி வைத்துக்கொள்வேன்.  எப்படித்தான் எழுதுகிறார்கள் பார்ப்போம் என்ற எண்ணத்தில்தான்.  ஆனால் ஒன்றையும் படித்ததில்லை.

நான் படிக்கவில்லை என்றால் என்ன பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் அவர்கள் பக்கம்.  அவர்கள் எழுதுவதைப் படித்துக்கொண்டே இருப்பார்கள். 

தேவி பாலா என்ற எழுத்தாளரைப் பற்றி கலைமகள் ஆசிரியர் அகமகிழ்ந்து முகநூலில் எழுதியிருந்ததைப் படித்தேன்.  ஆனால் நான் ஒன்றுகூடப் படித்ததில்லை.  அவர் ஆயிரக்கணக்கில் சிறுகதைகளும், ஆயிரக்கணக்கில் நாவல்களும் எழுதி உள்ளார்.

        எல்லாத் தீபாவளி மலர்களிலும் நான் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் இல்லாமல் இருப்பதில்லை.  சிறுகதைகள் மட்டுமல்ல ஒரு தொடர்கதை எழுத வேண்டுமென்றாலும் அவர்களைத்தான் கூப்பிட்டு எழுதச் சொல்வார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், இலக்கியத்திற்கு என்று ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா என்றும் எழுதச் சொல்வார்கள்.  ஒவ்வொரு முறையும் தீபாவளி மலர்களில் அசோகமித்திரன் எழுதாமலிருக்க மாட்டார்.

இவர்களுடைய பாக்கெட் நாவல்களை வாங்கி வைத்துவிட்டு படிக்காமலிருக்கிறோமே அவர்கள் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றெண்ணி ராஜேஸ் குமார்  'சிறந்த சிறுகதைகளை'ப் படிக்க எடுத்து வைத்துக்கொண்டேன்.  மற்றவர்களிடம் இன்னும் போகவில்லை. 

உயிர்மை பதிப்பகம் ராஜேஸ் குமார் சிறந்த சிறுகதைகளை (எண்ணிக்கையில் 25) கொண்டு வந்துள்ளது.  இப்படி புத்தகம் கொண்டு வந்தவுடன், அமைப்பே மாறிவிட்டது.  

ராஜேஸ் குமார் புத்தகங்களை வலது கையால் படித்துவிட்டு இடது கையால் தூக்கிப்போடும் வாசக தளத்திலிருந்து மாறி வேறு விதமாகத் தோற்றம் கொள்ள ஆரம்பித்து விட்டது.  வாசகர்களுக்கு  மரியாதை கொடுக்க வேண்டுமென்று தோன்றிவிட்டது. புத்தகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.

ராஜேஸ் குமார் எழுத்துக்கள் மீது அசோகமித்திரனுக்கு உயர்வான அபிப்பிராயம் இருந்தது.  என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்

அவர் பேசும்போது நான் பாக்கெட் நாவல்கள் பக்கம் போனதே இல்லை  அவர் குறிப்பிட்டபிறகு வாங்கிப் படித்துப் பார்க்கலாமென்று தோன்றியது. வாங்கிவைத்துக்கொண்டேனே தவிர படிக்கவில்லை.  

உயிர்மை கொண்டு வந்துள்ள ராஜேஸ் குமார் கதையிலிருந்து எதாவது ஒரு கதையைப் படித்து அதைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன்.

இந்தப் புத்தகத்திலிருந்து 3 கதைகள் படித்து விட்டேன்.  நான் முதலில் ஒரு கதையைப் படித்துவிட்டு எழுதலாமென்று நினைத்தேன்.  ஆனால் வரிசையாக 3 கதைகள் படித்து விட்டேன்.

'நேற்றைப் போல் இன்று இல்லை'  என்ற முதல் கதையை எடுத்து வாசித்தேன்.  ஒன்று புரிந்தது.  ராஜேஸ் குமார் அழகாக தன் கதையை வடிவமைத்துக் கொடுக்கிறார். எங்கும் குழப்பமில்லாத வார்த்தைப் பிரயோகம். 

கச்சிதமான வடிவத்தில் கதையை முடித்து விடுகிறார்.  பொன்ராஜ் என்பவர் கிராமத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை செய்துகொள்வதுபோல் நாடகமாடுகிறார்.  இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் பொன் ராஜைக் கூப்பிட்டு விசாரிக்கிறார்.  

அந்தக் கிராமத்துல சீட்டு கம்பெனி நடத்தும் கிருஷ்ண பிள்ளையைப் பற்றி புகார் கொடுக்கிறான் பொன்ராஜ்  சீட்டுப் பணம் ரூ.20000 கொடுக்க வேண்டும்.  கொடுக்காமல் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார் மேலும் ஆளை வைத்து மிரட்டவும் செய்கிறார்  கிருஷ்ணப்பிள்ளை என்கிறான் பொன்ராஜ். 

இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் கிருஷ்ணபிள்ளையிடம் போன் செய்கிறார்.  

'பொன் ராஜிற்குச் சீட்டுப் பணம் ரூ.20000 கொடுக்கவில்லையா?' என்று கேட்கிறார்.

கிருஷ்ணபிள்ளை பதறி விடுகிறார்.  'சார் அவன் சொல்றது பொய்,' என்கிறார்.

உண்மையில் பொன் ராஜிடம் ஒரு இக்கட்டான தருணத்தில் சீட்டுப் பணம் கொடுத்து விடுகிறார்.  ஆனால் பணம் கொடுத்ததற்கு எழுதிக் கையெழுத்து வாங்கவில்லை. சீட்டுப் பணம் கேட்டு வரும்போது கிருஷ்ணப்பிள்ளையின் சம்பந்தி கார் விபத்தில் மாட்டிக்கொண்டு வருகிறார்.  அந்த பதட்டமான சூழ்நிலையில்தான் கையெழுத்து வாங்க மறந்து விடுகிறார்.

இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் கிருஷ்ணபிள்ளையை மிரட்டி விடுகிறார்.  வேற வழியில்லாமல் பொன் ராஜிடம் இன்னொரு முறை ரூ.20000 கொடுத்து விடுகிறார். பொன் ராஜ் உற்சாகமாகப் போய் விடுகிறான்.  தான் ஏமாற்றியதைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்கிறான்.  

பொன் ராஜ் இதைக் கொண்டாட நினைக்கிறான். வெளியே மழை லேசாகப் பெய்து கொண்டிருந்தது. மழைக்கு பெப்பர் சிக்கனும் ஒரு குவார்ட்டரும் கையிலிருந்தால் சூப்பராக இருக்குமென்று நினைக்கிறான்.

வீட்டைப்பூட்டிக்கொண்டு லேசாக மழைத் தூற்றலைப் பொருட்படுத்தாமல் ஒயின் ஷாப்பை நோக்கி நடந்தான் பொன்ராஜ்.

அடுத்தநாள் காலையில் பேப்பரில் ஒரு பக்கத்தில் ஒரு சின்ன பகுதியில் அந்தச் செய்தி இடம் பிடித்து இருந்தது.

மின்னல் தாக்கி உடல் கருகி இளைஞர் மரணம், சமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பொன்ராஜ்.  வயது 25. கிராமத்து வீதியில் மழையில் நனைந்தபடி சென்றபோது மின்னல் தாக்கி இறந்து விட்டார்.  தமிழகத்தில் மழைக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பாராத விதமாய் இதுமாதிரி ஒரு டுவிஸ்டை ராஜேஷ் குமார் கொடுத்துள்ளார்.  இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.  ஒருவருக்கு வஞ்சனை செய்தால் அதற்குத் தண்டனை வேறுவிதமாகக் கிடைக்கும் என்கிறாரா?  துரோகம் செய்தால் அதற்குத் தண்டனை கிடைத்துவிடும் என்ற ரீதியில் முடிவை வைக்கிறாரா? இவருடைய எல்லாக் கதைகளுக்கும் இது மாதிரியான பார்முலா முடிவை கொண்டு வருகிறாரா என்று தெரியவில்ûல்.  நான் இன்னும் முழுவதும் படிக்க வில்லை. 

'நியூஜெர்ஸி தேவதை,'' அன்றே அங்கே அப்பொழுது'  என்ற கதைகளையும் இப் புத்தகத்தில் படித்து விட்டேன். 
  


Comments