Skip to main content

அஞ்சலட்டைக் கதைகள் 17


அழகியசிங்கர்







இது என் 17வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திஙூருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 

அறை

நீங்கள் போன் செய்து என்னைப் பார்க்க வருவதைப் பற்றி அறிவித்துள்ளீர்கள்.  நீங்கள் ஏன் வர வேண்டும்?  உண்மையாக நீங்கள் வருவது எனக்குப் பிடிக்கவில்லை.  ஆனால் உங்கள் முகத்துக்கு நேரே அப்படிச் சொல்வதில் எனக்குத் தயக்கமிருக்கிறது.

அவசரம் அவசரமாக என் கண்ணில் தட்டுப்படும் புத்தகங்களை என் புத்தக அறையில் கொண்டு போட்டேன்.  பின் அறைக் கதவை நன்றாகப் பூட்டினேன்.”

எந்தப் புத்தகமும் உங்கள் கண்ணில் படாது என்று உறுதியாக நம்பினேன். உங்களிடம் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது.  எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் நீங்கள் எடுத்து வைத்துக் கொண்டு விடுவீர். 

உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் புத்தக அலமாரியைப் பார்க்க வேண்டும்.  எத்தனைப் புத்தகங்களை எல்லாரிடமிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விடலாம்.

சரியாகச் சொன்னபடி வீட்டிற்கு வந்து விட்டீர்கள்.  உங்களை வரவேற்று என் இன்னொரு அறைக்கு அழைத்துக்கொண்டு போனேன்.  கண்ணில் எதாவது புத்தகம் தென் படுகிறதா என்று பார்த்தேன்.  நிம்மதியாக இருந்தது எந்தப் புத்தகமும் தென்படவில்லை. ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டேன். உங்களைக் கூர்ந்து கவனித்தேன்.  சற்று ஏமாற்றமாக உங்கள் தென்பட்டது.

"என்னய்யா எப்படி இருக்கே?"

"நல்லாயிருக்கேன்."

"இலக்கியக் கூட்டத்திற்கு எங்காவது போனீயா?"

"போனேன்."

"நீ கூட்டம் நடத்துவது என்ன ஆச்சு?"

"மாசம் மூன்றாவது சனிக்கிழமை நடத்துகிறேன்."

"எத்தனைப் பேர் வர்றாங்க"

"பத்து பேர். அதற்கு மேல் வந்தால் அது வெற்றிகரமான கூட்டம்."

"இதைச் சொன்னவுடன் நீங்கள் வாய்விட்டுச் சிரிக்கிறீர்கள்."

"என்னய்யா உன் புத்தங்கள் எதுவும் கண்ணில் படவில்லையே?"

"பக்கத்து அறையில் வைத்திருக்கிறேன்."

"அந்த அறைக் கதவைத் திற.  அங்குப் போகலாம்."

"அந்த அறைக்குப் போக முடியாது." 

"சாவி எடுத்துக்கொண்டு வா. திறப்போம்."

"காலையிருந்து சாவியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  சாவியைத் தொலைத்து விட்டேன்."

உங்கள் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறது.  உங்களிடமிருந்து தப்பிக்க இந்தப் பொய்யைத் தவிர வேற வழியில்லை. நீங்கள் கூர்ந்து உட்கார்ந்து இருந்த அறையைப் பார்க்கிறீர்.  அப்போதுதான் ஒன்று தோன்றியது.  ஆடியோ காசெட்டுகள்.  ஜே.கிருஷ்ணமூர்த்தியின்  ஆடியோ காசெட்டுகள்.  உங்கள் கண்ணில் படக்கூடாது என்று நினைத்தேன்.  பட்டு விட்டது.
  
"இது என்னய்யா?"

"ஜே.கே கேசட்டுகள்."

"அதைக் கொடுய்யா...கேட்டுட்டு கொண்டு தர்றேன்.,". என்று நீங்கள் என்னைக் கேட்காமலேயே எடுத்து வைத்துக்கொண்டீர்கள். நான் செய்வதறியாது திகைத்தேன்.

Comments