Skip to main content

ஆவலுடன் காத்திருக்கிறேன்

ஆவலுடன் காத்திருக்கிறேன்


அழகியசிங்கர்




இன்று மாலை 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் என் கதைப் புத்தகமான அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத் தொகுப்பு பற்றி முனைவர் ஜெ கங்காதரன் என்பவர் நூல் திறனாய்வு செய்கிறார்.

64 சிறுகதைகளும், 7 குறுநாவல்களும், ஒரு நாடகமும், சில சின்னஞ்சிறு கதைகளும் எழுதி உள்ளேன்.  664 பக்கங்கள் கொண்ட முழுத் தொகுதியை என் கதைகளை எல்லோரும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ரூ.300க்குக் கொடுக்கிறேன்.

ஆரம்ப காலத்திலிருந்து நான் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.  இன்னும் கூட கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  உதாரணமாக 4வது சென்னை புத்தகத் திருவிழாவை முன் வைத்து நல்லவன் கெட்டவன் என்று கதை எழுத உள்ளேன்.

என் கதைகளின் முக்கிய அம்சமாக நான் கருதுவது அதிகப் பக்கங்கங்கள் போகாமல் பார்த்துக் கொள்வது.  படிப்பவர்கள் ஒரு சில நிமிடங்களில் என் கதையைப் படித்து முடித்து விடலாம்.

என்னுடைய 7 குறுநால்கள் இத் தொகுதியில் வெளிவந்துள்ள.  இக் குறுநாவல்கள் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் வெளிவந்தவை.  இப்போதெல்லாம் அவ்வளவு பக்கங்கள் கொண்ட குறுநாவல் எழுத எனக்குப் பொறுமை இல்லை.  

கணையாழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட என் குறுநாவல்களை அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதிதான் தேர்ந்தெடுத்தார்கள்.  அதில் விபத்து என்ற என் குறுநாவலைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். 

அந்தக் குறுநாவல் எழுதும்போது நான் உஸ்மான் ரோடில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  அப்போது நடந்த விபத்து மாதிரியான ஒரு விபத்தைப் பற்றிதான் அந்தக் குறுநாவல்.

குறுநாவலில் வங்கியில் பணிபுரிகிறவனைப் பற்றி வரும். இக் கதையை வங்கியில் உள்ள யாராவது படிக்க நேர்ந்து ஒரு மொட்டைக் கடுதாசி எழுதி என் வேலைக்கே உளை வைத்துவிடுவார்களோ என்று

தேவையில்லாமல் அஞ்சினேன்.  உடனே அசோகமித்திரன் வீட்டிற்கு ஓடினேன்.  அன்று அவருக்கு சுரம்.  என்னைப் பார்த்தவுடன் என்ன என்று கேட்டார்.  விபத்து என்ற குறுநாவல் நான்தான் எழுதினேன் என்றேன்.  நீங்கள் தானா அது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்று அந்தக் குறுநாவலை அப்படியே ஒப்பித்தார்.  எனக்கு ஆச்சரியம்.  அதில் வங்கியில் பணிபுரிகிறவன் என்று எழுதியிருக்கிறேன்.  வங்கி என்பதற்குப் பதில் எல்ஐசி என்று எழுதி விடலாமா என்று கேட்டேன். அதல்லாம் வேண்டாம்.  அப்படியே இருக்கட்டும் என்றார்.  

அப்புறம்தான் தெரிந்தது.  என் வங்கியில் இருப்பவர்களில் பலருக்கு கணையாழி என்ற பத்திரிகை தெரியாது என்றும், பணிபுரிபவர்கள் பலரும் படிக்காத விரும்பி என்றும். இதை நினைத்தால் இப்போது சிரிப்பு வருகிறது. 

 மேலும் என் வீட்டில் உள்ளவர்களே என் கதைகளை முழுவதும் படித்ததில்லை.  அதனால்தான் பயந்துகொண்டு நானே முழுத் தொகுதியைக் கொண்டு வந்துவிட்டேன்.  இனி நான் எழுதும் எல்லாக் கதைகளையும் இத் தொகுப்பில் சேர்த்துக்கொண்டு வருவேன். 

இப்படித்தான் பல திறமையான எழுத்தாளர்களின் படைப்புகள் தொகுக்கப்படாமல் போய்விட்டன.  இது ஒரு சோகம்.  இந்த அனுபவம் எனக்கு ந பிச்சமூர்த்தி கதைகளைத் தொகுக்கும்போது தெரிந்தது.  அவர் வீட்டில் உள்ளவர்களே அவர் கதைகளின் முழுத் தொகுதிகளை வைத்திருக்கவில்லை.  நாங்கள்தான் தடுமாறி கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.  இந்தச் சங்கடம் பி எஸ் ராமையாவின் கதைகளுக்கும் ஏற்பட்டு விட்டது.    அவர் எத்தனைக் கதைகள் எழுதி உள்ளார் என்ற விபரம் சி சு செல்லப்பா எழுதிய ராமையாவின் சிறுகதை பாணி புத்தகத்தில் மட்டும் தெரியும்.  பல கதைகள் நஹி. 

இன்று என் புத்தகத்திற்கான நூல் திறனாய்வு நடைபெற உள்ளது. முனைவர் ஜெ கங்காதரன் பேச உள்ளார்.   என்ன பேசப் போகிறார் என்பதை அறிய நான் -.  

Comments