Skip to main content

நட நட நட நடநடநட நட நடநடநட நட ......

03.04.2018

நட நட நட நடநடநட நட நடநடநட நட ......


அழகியசிங்கர்




என் லைப்ரரி வைத்திருக்கும் போஸ்டல் காலனி வீட்டின் அருகில் இதய இயல் பேராசிரியர் மருத்துவர் வைத்தியநாதன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் சில கிடைத்தன.  இதய படபடப்பு பற்றி ஒரு புத்தகம்.  இதய நோய் இல்லாத இதய நோயாளிகள் என்ற இன்னொரு புத்தகம். மூன்றாவது புத்தகம் நடை....நோய்க்குத் தடை என்ற புத்தகம்.  சொ செல்வராசன் என்பவர் எழுதிய புத்தகம்.
இதைப்போல முக்கியமான புத்தகத்தை கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டியவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.  நடை எவ்வளவு முக்கியமானது என்று இந்த நூல் புட்டு புட்டு வைக்கிறது.  நடைப்பயிற்சி முடிந்தவுடன் தண்ணீர் அருந்தலாமா என்ற ஒரு கேள்வி. உடனே அருந்த கூடாது.  பதினைந்து நிமிடங்கள் பிறகு அருந்தலாம் என்கிறது இந்தப் புத்தகம்.  அதே சமயத்தில் நடைபயிற்சிக்கு முன்னால் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் அருந்தலாம் என்கிறது புத்தகம்.
இதில் இன்னொரு பக்கத்தில் இதுமாதிரி எழுதியிருக்கிறது. 1. நடக்கும்போது பேச்சைத் தவிர்த்து விடுங்கள் என்கிறது இப் புத்தகத்தில் ஒரு வாசகம்.  நானும் ஒரு இலக்கிய நண்பரும் காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபடும்போது பேசாமல் இருக்க மாட்டோம்.  சில சமயம் பேசுவதற்காகவே நடப்பதாகத் தோன்றும்.
நாங்கள் பேசிக்கொண்டே வந்தாலும், நடப்பதை விட்டுவிட மாட்டோம்.  நான் ஒன்று இரண்டு மூன்று என்று சுற்றை எண்ணிக்கொண்டே வருவேன்.  
தியான நடை என்பது ஓர் அனுபவம் என்று ஒரு பக்கத்தில் கூறுகிறது.  விருப்பத்துடன் நடக்கும்போது நம் மனதில் ஓர் உறுதி தோன்றுகிறது. 
என் தந்தை 96 வயது வரை உயிரோடு இருந்தார்.  அதற்கு முக்கிய காரணம் நடை.  அளவான சாப்பாடு.  எதைப் பற்றியும் கவலைப் படாத வாழ்க்கை.  
இந்தப் புத்தகத்தின் அணிந்துரையில் ஒரு எச்சரிக்கை : சந்தேகம் இல்லாமல் ஒரு 15 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட நம்மிடம் பணப்புழக்கம் கணிசமாக கூடியுள்ளது.  ஆனால் ஓடி உழைத்து சம்பாதித்த பணத்தினை அனுபவிக்க முடியாத அளவிற்கு நோய்.  அதிலும் உடற்பயிற்சியின்மையால் 25 வயதில் எலும்பு தேய்வது, 35 வயதில் இருதய நோயால் பாதிக்கபடுவது.  40 வயதில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்ற அச்சம் விளைவிக்கும் உண்மைகளை பற்றி நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்று எச்சிரிக்கை விடுக்கிறது. 
சரி நீங்கள் இதுவரை நடக்காதவர்களாக இருந்தால், நாளையிலிருந்து நடக்கத் தொடங்குங்கள்.  உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
நட நடநடநட் நட..... 

Comments