Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 85

அழகியசிங்கர்


 நண்பனுக்கு


கு ப ராஜகோபாலன்


ஓயாமல் எண்ணியும் பேசியும், 
சளைத்துப் போய்விட்டோம் அல்லவா? 
வார்த்தையை வைத்து வாதாடி 
வீண்வித்தியாசம் கொண்டோம், போதும்!

மாயையும் தத்துவமும் என்ன 
என்று தெரியவே வேண்டாம் ; 
கண்கண்ட சுகத்தைக் கடைந்து
உண்போம், இனிமேல், வா! 

இல்வாழ்க்கை நதி வரண்டு
மணலாகும் மரணம் வரை 
அதன் கரை புரளும் வெற்றியை 
ஒப்புக் கொள்வோம், அதனாலென்ன?

உயிரின் இன்ப ஊழியத்தில்
அடிமைகளாவோம், பாதகமில்லை!
ஆத்மா, பரமாத்மா - இந்தப் பேச்சு - 
யுகம் யுகமாக, காது துளைத்துப்போச்சு!

அது வேண்டாம் நமக்கு !
மதுக் கிண்ணத்தைப் பற்றி பேசினானே - 
அவன் யார் ? - உமர்கயாம் - 
அவனைத் தொடர்வோம், அப்பா!
 
நன்றி : சிறிது வெளிச்சம் - கு ப ராஜகோபாலன் - வாசகர் வட்டம் - 14 தணிகாசலம் செட்டி ரோடு, தியாகராய நகர், சென்னை 17 -வெளிவந்த ஆண்டு : 1969 - விலை : ரூ.7

Comments