Skip to main content

கௌதம புத்தர் - 4


அழகியசிங்கர்




தான் கண்டுணர்ந்த உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டி புத்தராகி விட்ட கதையை இன்னும் தொடர்கிறேன்   அவர் கொள்கைகளை மக்களிடையே பரப்ப அவருக்கு ஒரு தொண்டர் படை தேவைப்பட்டது.  காசிக்கருகே சாரநாத் நகரில் தங்கள் தவ முயற்சியைத் தொடர்ந்து வந்த தன் ஐந்து பழைய சீடர்கள் பற்றியே முதலில்  அவர் நினைத்தார்.  புனிதர் புத்தர் அவ்வூரை நோக்கிப் போனார்.

ஒரு மகான் முன் தாங்கள் நிற்பதை உணர்ந்தனர்  அவர் சொல்வதைக் கேட்க அமர்ந்தனர்.  புத்தரின் முதல் போதனை இந்த ஐந்து மாணவர்களிடம் தொடங்கியது.

தீவிர நிலைகளைத் தவிர்க்க வேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் அவர்களுக்கான புத்தரின் போதனை துவங்கியது.  விளையாட்டும் போக அனுபவமும் நிறைந்த வாழ்வைப் போலவே கடுந்தவமும் தியாக அனுபவமும் மட்டுமே நிறைந்த வாழ்க்கைக் கூட நல்லதல்ல என்றார் புத்தர்.  நடுநிலைப் பாதையே பொன்னான வழி.  இந்த வழி மூலமாகத்தான் ஒருவன் வாழ்வைச் சரியாகப் பார்க்கலாம்.  உண்மையையும் உணரலாம்.

இவ்வுலகம் துன்பங்கள் நிறைந்தது.  ஆசை.  அதாவது புலன்களில் மூலம் இன்பங்களை அனுபவிக்கும் வேட்கையே இத்துன்பங்களில் மூல காரணம்.  புனிதமான எட்டு வழிப்பாதையில் செல்வதன் மூலமாக துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம்.  நிர்வாணம் எனக் கூறப்படும் முக்தி நிலையை எய்தலாம். 

புத்தர் கூறும் எட்டுவழிப் பாதை என்பது

1. நற்கொள்கை 2. நல்லார்வம் 3. நன்மொழி 4. நன்னடத்தை 5. நல்வாழ்வு 6. நல்முயற்சி 7. நல்லெண்ணம் 8. நற்சிந்தனை

சாரநாத்தில் போதனை செய்தது ஒரு துவக்கமே.  தன் வாழ்ந்ளில் மீதி நாள் அனைத்தையும் புத்தர் தமது நல்லொழுக்க மார்க்கத்தை அனைத்து மக்களிடம் பரப்பும் பயணங்களிலேயே செலவிட்டார்.  அந்தக் காலத்தில் படித்தவர்களிடமும் செல்வர்களிடையேயும் சமஸ்கிருத மொழியே புழக்கத்தில் இருந்து வந்தது.  சாமானியர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக புத்தர் மக்கள் பேசிய மொழியான பாலியிலேயே தமது உரைகளை நிகழ்த்தினார்.

புத்தரின் போதனைகள் எளிமையானவை. புரிந்து கொள்ளக் கூடியவை.  புத்தர் வினைப்பயன் (கர்மா) என்ற தத்துவத்தை ஏற்றார்.

சாரநாத் போதனையின் விலைவாக புத்தரின் ஐந்து பழைய மாணவர்களும் அவரது முதல் ஐந்து சீடர்களாயினர்.   சங்கம் எனப்படும் பௌத்தத் துறவியர் அமைப்பின் முதல் துறவியராக, முதல் பிட்சுக்களாக, இவர்கள் அமைந்தனர்.  காலப்போக்கில் புத்தரின் கொள்கை பரவப் பரவ மேலும் மேலும் மக்கள் சங்கத்தில் சேர்ந்தனர்.

புத்தர் ஞானியான சில ஆண்டுகளுக்குள்ளேயே அவர் புகழ் வயதான அவரது தந்தையையும் எட்டியது.  மகனின் துறவுபற்றி சுத்தோதனர் எப்போதும் திருப்தி அற்றவராகவே இருந்தார்.  குறுகிய காலத்துக்கேனும் மகன் கபிலவஸ்துவுக்கு வரவேண்டுமென அவர் ஆசைப்பட்டார்.  மகன் மீண்டும் அரண்மனைக்கு வந்துவிட்டால் தனது பிட்சு உடைகளைக் களைந்து அரச மகுடம் தரிக்க ஒப்புக் கொளவாரென்று சுத்தோதனர் இன்னும் கூட நம்பினார்.

புத்தர் ராஜகிருகத்தில் போதனைகள் செய்து வருவதாகக் கேள்விப்பட்டதும் சித்தார்த்தரின் இளமைக்கால விளையாட்டுத் தோழர் காலூதயினை அனுப்பினார்.  புத்தரின் சொற்பொழிவு கேட்டு இவரும் துறவியாகிவிட்டாலும், மன்னருக்குத் தந்த சொல்லை மறக்கவில்லை.  மென்குரலில் தலைவா, தங்கள் தந்தையார், சித்தி பிரஜாபதி, மனைவி யசோதரா எல்லாரும் உம்மைக் காண ஆவலாயிருக்கின்றனர் உம்மை அழைத்துவரவே மன்னர் என்னை இங்கு அனுப்பினார் என்றார். புத்தரும் மன்னரைக் காண அரண்மனைக்குச் சென்றார். மன்னர் புத்தரின் கம்பீரத்தையும் ஞான ஒளியையும் கண்டு வியந்து போனார்.  எனக்கினி சோகமில்லை மனித இனமனைத்தையும் காக்கும் மார்க்கத்தை நீ கண்டு கொண்டாய் என்று சொல்லி புத்தரை அணைத்துக் கொண்டார்.

புத்தர் அரண்மனையில் தங்கவில்லை.  அரசர் தலைநகருக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் புத்தரையும் அவரை சார்ந்த சீடர்களையும் தங்க ஏற்பாடுகள் செய்தான். 

துறவிகளின் வழக்கப்படி மறுநாள் காலை புத்தர் திருவோடு  ஏந்தி கிளம்பினார் புத்தர்.  செய்தியறிந்த சுத்தோதனர் என்னை ஏன் இப்படி அவமதிக்சிறாய் என்று கேட்டார்.

இதுதான் எங்கள் மரபு என்கிறார் புத்தர்.

மறு சொல்லின்றி மன்னர் மகானையும் மற்றவர்களையும் தமது மனையுள்  இட்டுச் சென்றார்.  அரச குடும்பம் வாழ்த்த வந்தது.  சித்தி பிரஜாபதியும் பிற மாதர்களும் வந்தனர்.

நீ இல்லாத ஏழாண்டுகளில் கடுந்துறவு பூண்டு யகோதரா வாழ்ந்தாள்.  மொட்டையடித்து மஞ்சள் ஆடை புனைந்து, அது ஒரு தவ வாழ்வு.  யசோதரா புத்தரைக் கண்டாள்.  அவர் திருவடிகளில் வீழ்ந்து அழுதாள்.  அவள் பக்திக்கு மெச்சி அவர் அவளையும் வாழ்த்தினார்.

புத்தரின் புத்திரன் ராகுலுக்கு வயது ஏழு.  தந்தையை அறியாத தனயன்.  தாத்தாவைத்தான் தந்தையென எண்ணியிருந்தான்.  புத்தர் கபிலவஸ்து வந்த ஏழாம் நாள் மகன் ராகுலனை இளவரசன் போல் அலங்கரித யசோதரா தந்தையிடம் சென்று தன் வாரிசு உரிமையை கேட்கச் சொல்ஙூ அனுப்பினாள்.  உரிமை கேட்ட சிறுவனைக் கண்டார் புத்தர். புத்தர் தன் சீடர் சாரிபுத்ரரைப் பார்த்து சங்கத்தில் இவனை சேர்த்துக் கொள் அதுவே இவனுடைய வாரிசு உரிமை என்றார்.

Comments