Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 70

அழகியசிங்கர்  


மிதிவண்டித் திருடன்


ராணிதிலக்

                                                                                                                 



மாட்டி இருக்கவேண்டிய இடத்தில் சாவி இல்லை.  தேடத் தொடங்கினேன்.  எனக்குத் தெரிந்து, யாருக்கும் தெரியாத ஒருவன் அந்தத் தெருவில் பிறந்து, இந்தத் தெருவில் நுழைகிறான்.  நான் சாவியைத் தேடுகிறேன்.  பூட்டப்படாத வண்டியைத் தொடுகிறான். நான் சாவியைத் தேடுகிறேன்.  திறந்த தெருவில் ஒருவன் வண்டியை ஓட்டிச் செல்கிறான்.  சாவி எனக்குக் கிடைத்து விட்டது.  பூட்டின கதவைத் திறந்து, வெளியே பார்த்தேன்.  தன்னைப் பூட்டிக்கொண்டு வண்டி நிற்கிறது.  நெருக்கமான சாலையில், யாருடைய வண்டிகளையோ, யார் யாரோ ஓட்டியபடி மறைகிறார்கள்.  அவர்களுக்கு இடையில், என் கற்பனையில் காணாமல் போன மிதிவண்டியை, இன்னும் பிறக்காத, இப்போது எங்கோ வாழ்கிற, எப்போது இறந்த, நான் பார்த்து, யாரும் பார்க்காத ஒருவன், எனக்குத் தெரிந்து, யாருக்கும் தெரியாத மிதிவண்டியை, பூமியின் எல்லா சாலைகளிலும் ஓட்டிக்கொண்டே இருக்கிறான்.  சாவித் திறந்து விட்டது.  அவன் ஓட்டுவரை நிறுத்தவே இல்லை.

நன்றி : நாகதிசை - கவிதைகள் - ராணிதிலக் - உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்றை 600 018 - பக்கங்கள் : 80 - விலை : 40 ரூபாய்  

பின் குறிப்பு : 
ஸ்ரீ நேசனும், ராணிதிலக்கும் நண்பர்கள். கவிதைகள் எழுதுபவர்கள். இருவரையும் அப்போதெல்லாம் அடிக்கடி பார்ப்பேன். இப்போது இல்லை. இருவர் கவிதைகளையும் ஒரு முறை என் வீட்டு மொட்டை மாடியில் தென்னங்கீற்று நிழலில் அவர்கள் மூலம் வாசிக்கக் கேட்டேன். உடனே விருட்சத்தில் அவற்றை பிரசுரித்தேன்.  அவர்களுடைய நண்பர்களின் கவிதைகளையும் பிரசுரம் செய்தேன். இருவரும் திறமையான கவிஞர்கள்.  ஸ்ரீ நேசன் நேரிடையாக கவிதைக்கு வந்து விடுவார்.  ராணி திலக் அப்படி இல்லை.  ஆனால் நாகதிசை என்ற இத் தொகுதி வித்தியாசமாக இருக்கிறது. 
க நா சு, நகுலன் பாணியில் வித்தியாசமாக எழுதியிருக்கிறார்.  அந்தத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். 

Comments