Skip to main content

அஞ்சலட்டைக் கதைகள் - 11


அழகியசிங்கர்




அம்மா...அம்மா






மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுத் தூங்கச் செய்து விட்டேன்.  இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு எழுந்துகொள்ள மாட்டாள்.  அதன்பின் எழுந்து தொண தொணவென்று எதாவது பினாத்திக் கொண்டிருப்பாள்.  பெரும்பாலும் படுக்கையில்தான் எல்லாம்.

ஒவ்வொரு முறையும் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார முயற்சி செய்கிறாள்.  அப்போதெல்லாம் என் பெயரைச் சொல்லிக் கத்துவாள்.  இந்தக் கொரோனாவால் நானும் என் கணவரும் வீட்டில் அடை பட்டிருக்கிறோம்.  அம்மாவை நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.  உண்மையில் ஒரு செவிலியர் போட்டிருந்தோம். நான் அலுவலகம் போய்விட்டுத்   திரும்பும்வரை செவிலியர் இருப்பாள்.  அவள்  வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்று பயந்து இப்போதெல்லாம் வருவதில்லை.

அவருக்கு வீடே அலுவலகமாக மாறிவிட்டது.  எனக்கு அப்படி இல்லை.  முழுக்க முழுக்க தொலைக்காட்சி.  காலையிலிருந்து இரவு வரை.  அம்மாவைப் பார்த்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.  படுக்கையிலிருந்து விழுந்து விடுவாளோ என்ற பயம் இருக்கிறது.  நாங்கள் முதல் மாடியில் இருக்கிறோம்.  கொரோனா வால் கதவைத் தொடக் கூடப் பயம்.  செய்தித்தாளில் பரவிடும் என்பதால் செய்தித் தாளே வாங்குவதில்லை.  அவர்தான் முகமூடி அணிந்துகொண்டு மளிகைச் சாமான்கள், மருந்தெல்லாம் வாங்கி வருவார்.  

அம்மாவிடம் கொரோனாவைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தேன்.  புரிந்த மாதிரி தலையைத் தலையை ஆட்டினாள்.  ஆனால் ஒன்றும் புரியவில்லை.

"அம்மா, கொரோனா தெரியுமா?"

"யாராவது வாசலில் நிற்கிறாளா?"  என்றாள் அம்மா.

Comments