Skip to main content

திருக்குறள் சிந்தனை 10



அழகியசிங்கர்



இன்று நான் படித்தது பத்தாவது குறள். கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் திருவள்ளுவர் பத்து குறள்களை அருளி உள்ளார். இந்தப் பத்து குறள்களிலும் ஒரு பொதுத் தன்மை உள்ளது. அறத்துப் பால் என்ற தலைப்பின் கீழ் இதெல்லாம் வருகிறது. அதாவது கடவுளை அடைவதுதான் அந்தப் பொதுத் தன்மை. அப்படி கடவுளை அடைவதற்கு என்னன்ன வழி முறைகள் என்பதையும் சொல்லியிருக்கிறார். அவர் கடவுள் என்பதை பொதுவாக சொல்லுகிறார். முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் தோன்றும்போது தோன்றியது என்கிறார். இன்னொரு குறளில் விருப்பு வெறுப்பு இல்லாதவன் கடவுள் என்கிறார். ஒருவர் அப்படி விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் இருக்க வேண்டும் என்கிறார். கடவுள் என்பதை விட ஒருவர் கடவுள் தன்மையை அடைய உள்ள வழி முறைகள் என்று இக்குறள்களைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் திருக்குறள் மாதிரி ஒரு படைப்பு வந்திருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அப்படி ஒன்று உருவாகவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. எதாவது இருந்தால் அதை அறிந்துகொள்ளவும் ஆவலாக உள்ளேன்.

இதோ பத்தாவது குறள் :


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

பிறவியாகிய கடலை ஒருவர் நீந்த வேண்டுமென்றால் இறைவனின் பாதங்களைச் சேர வேண்டுமென்கிறார். நாவலர் இதற்கு உரை எழுதும்போது அறிவாற்றலில் சிறந்த சான்றோர் ஆகிய ஒரு பெருந்தலைவரைப் பின்பற்ற வேண்டுமென்கிறார். யார் அப்படிப்பட்ட பெருந்தலைவர் இந்தக் காலத்தில் இருக்கிறார்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத ஒருவரே ஒருவர் இருக்கிறார். அவர் கடவுள். அந்தக் கடவுள் வேறு எங்குமில்லை நம் மனதிலேயே வீற்றிருக்கிறார். நாம் அதை உணர வேண்டும். நீந்துவர் நீந்தார் என்ற வரி பிடித்திருக்கிறது.

Comments

Popular posts from this blog