Skip to main content

எதையாவது சொல்லட்டுமா....2






ரு தீபாவளிபோது நாங்கள் இருக்கும் அடுக்கத்தில் யாவரும் வருத்தத்துடன் இருந்தோம். எங்கள் தெரு முனையில் உள்ள ஒரு வீட்டில் வசித்த வந்த ஒரு வயதான பள்ளி ஆசிரியை கொலை செய்து விட்டான் ஒரு கொலையாளி.. அதவும் நகைக்காக. அந்தப் பள்ளி ஆசிரியை தனியாக வசித்து வந்தார். எங்கள் பகுதியில் சின்ன சின்ன திருட்டுக்கள் நடக்கும். ஆனால் கொலை செய்யும் அளவிற்குப் போகுமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருமுறை எங்கள் அடுக்கத்தில் உள்ள வீடுகளின் வாசல்களைப் பூட்டிவிட்டு மாடியில் உள்ள பித்தளை வால்வுகளைத் திருடிப் போனான் ஒருவன்.

கீழே உள்ள ஒரு குடியிருப்பில் புகுந்து பீரோவையெல்லாம் திறந்து நகைகளை எடுக்கப் போனான். கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் அவ் வீட்டின் டிவியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அது பெரிய ரகளையாகிவிட்டது. அந்த வீட்டுக்காரர் போலீஸில் புகார் சொல்ல விரும்பவில்லை. அது எதாவது விபரீதத்திற்கு எடுத்துப் போய்விடுமோ என்று பயந்தார். அந்தக் குடியிருப்பில் இரண்டு வாசல்கள். கொல்லைப் பக்க வாசல் வழியாக பத்துப் பாத்திரங்களைத் தேய்க்கப் நடமாடும் பகுதியைப் பயன்படுத்தினார்கள். பொது இடத்தை அது மாதிரி பயன்படுத்துவதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால் அவர்களிடம் சொல்லி அவர்கள் கேட்கப் போவதில்லை என்பதை நிச்சயமாக நம்பினோம். இந்தத் திருட்டு நடந்த பிறகு உடனடியாக இன்னொரு வாசலை மூடி விட்டார்கள்.

அடிப்படையில் இது மாதிரியான திருட்டுகள் எதாவது முடிவை நோக்கி வருகிறதா என்றெல்லாம் யோசிப்பேன். திருடப்படுவதால் நமக்குத் தெரிய வேண்டிய உண்மை எது என்றெல்லாம் யோசிப்பேன். ஒரு முறை மாடியில் உலர்த்திய மனைவியின் பட்டுப்புடவை திருட்டுப் போயிற்று. எனக்கு துணுக்கென்றது. ஏற்கனவே பயன்படுத்திய பட்டுப்புடவைதான். ஆனால் திருடுப் போகக்கூடாது, போய்விட்டது என்று நினைத்தேன். இந்தச் சமயத்தில்தான் மனம் எதாவது தொடர்புப் படுத்திப் பார்த்துக்கொண்டே இருக்கும்.

திருடுப் போயிற்று என்று நாங்கள் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இரண்டு போன்கள் வந்தன. முதல் போன் என் ஒன்றுவிட்ட சகோதரனின் (பெரியப்பாவின் புதல்வன்) பையன் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கக் கற்றுக்கொள்ளும்போது ஜம்ப் பண்ணும்போது தண்ணீர் ஆழம் இல்லாததால் தலையில் அடிப்பட்டு மரணம் அடைந்த செய்தியைச் சொன்னார்கள். கேட்டவுடன் பதிறிப் போய்விட்டோம். உடனே இரண்டாவது போன் வந்தது. என் அலுவலக நண்பனிடமிருந்து. தெருவில் மருத்துவமனைக்குச் சென்ற அவன் அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார் என்ற செய்தி. என்னடா இது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறதே என்று நினைத்தேன். அன்று சனிக்கிழமை. பட்டுப் புடவை திருடு போனதற்கும், இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமாவென்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த மூன்றும் வெவ்வேறு நிகழ்ச்சிகள்.

அந்த மரண நிகழ்ச்சிக்கு நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்றோம். தூங்கிக் கொண்டிருக்கிற மாதிரி ஒன்றுவிட்ட சகோதரினின் பையன் படுத்திருந்தான். பெரியப்பா பையனிடம் சென்று ஆறுதல் சொல்ல முற்பட்டேன். அவன் உடனே, 'நீ வருத்தப்படாதே,' என்றான். பெரியப்பாப் பையன் கொஞ்சங்கூட அழவில்லை. ஆனால் அவன் மனைவியோ பயங்கரமாக புலம்பிக் கொண்டிருந்தாள். அதேபோல் அலுவலக நண்பனின் வீட்டில், அவன் அப்பாதான் அந்தக் குடும்பத்தில் முக்கியமானவர். அவருடைய எதிர்பாராத முடிவு அந்தக் குடும்பத்திற்குப் பெரிய அடி. அதுவும் தெருவில் அனாதையாய் அவர் மரணம் நிகழ்ந்து விட்டது. அப்பாவின் மரணத்திற்குப் பிறகு என் நண்பன் தன் இயல்பான நிலைக்குத் திரும்ப பல மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

அலுவலகம் முடிந்து நாங்கள் இருவரும் மின்சார வண்டியில் செல்வோம். மனம் கலங்கியிருந்த அவனை தினமும் தேற்றுவேன். என்கூட வருவதில் பிரியப்படுவான். இந்த இரண்டு மரணங்களையும் பட்டப் பகலில் பட்டுப்புடவை திருடு போனதற்கும் நான் முடிச்சுப் போடுவேன்.

தெரு முனையில் வயதான ஓய்வுப்பெற்ற ஆசிரியையை நகைக்காக கொலை செய்த விஷயத்திற்கு வருகிறேன். அந்த நகையைக் கொள்ளை அடிக்க வந்தவன், முதலில் கொல்ல வேண்டுமென்ற நோக்கத்திற்காக வந்திருக்க மாட்டான். இது என் யூகம். ஆனால் பணத்திற்காக கொலையைக் கூட துச்சமாக நினைப்பவனாக இருப்பான். நகையை எடுக்க முயற்சி செய்யும்போது, ஆசிரியை எதிர்ப்பு தெரிவித்திருப்பார். அப்போது திருட வந்தவன் வேறு வழியில்லாம் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பான். இந்த நிகழ்ச்சியை நாம் பத்திரிகையில் படிக்கும்போது ஒருவித மன அழற்சி ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். என்ன பாடுபட்டிருப்பார்கள். பத்திரிகையில் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் வெளிவருகிற செய்தி ஒரு கலைப் படைப்பாக மாறும்போது பலவித உணர்ச்சிக் கோளங்களைப் பிரதிபலிக்கின்றன. இக்கொலையை அடிப்படையாகக் கொண்டு ராம்காலனி என்ற குறுநாவல் ஒன்றை எழுதியிருக்கிறேன்.

பல மாதங்கள் கழித்து போலீஸ் அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடித்து அவன் புகைப்படத்தை பேப்பரில் வெளியிட்டிருந்தார்கள். இந்தச் சம்பவம் எனக்கு போலீஸ் மீது ஒருவித மரியாதையே ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த ஒரு இரட்டைக் கொலையும் அவர்கள் துப்பு கண்டுபிடித்துவிட்டார்கள்.

ரொம்ப மாதங்கள் கொலை செய்யப்பட்ட ஆசிரியை வசித்த வீடு பாழடைந்து காணப்பட்டது. எனக்கு பேய் வீடு மாதிரி தோற்றம் தரும்.

இப்போது பாண்டிச்சேரி அன்னையின் பேரில் அந்த வீடு ஒரு அடுக்ககமாக மாறி பலர் குடியும் வந்துவிட்டார்கள். இதை எதற்கு சொல்ல வருகிறேன். போலீஸின் திறமை.

சமீபத்தில் உன்னைப் போல் ஒருவன் என்ற படத்தைப் பார்த்தேன். அதில் போலீஸ் அதிகாரியாக வரும் மோகன்லால் தத்ருபமாக ஒரு போலீஸ அதிகாரிபோல் காட்சி தருகிறார். மிகையில்லாமல் அவர் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.

Comments

தங்களின் இந்த தொடர் அருமையாக வருகின்றது. நான் பிரமிள் விசிறி சாமியார் தொடரை ‌விட இ‌து அருமையாக இருக்கின்றது. காரணம் அன்றாட வாழ்க்கையில் எல்லாரும் சந்திக்கும் சமூக அவலங்கள்,நவீன வாழ்க்கையின் சிதைவுகளை எ‌ளிய நிகழ்வுகள் மூலம் வெளிப்படுத்தும் விதம்.