Skip to main content

பிறந்தநாள் போது ஒரு குழப்பம்

    

அழகியசிங்கர்




        இன்றுதான் என் பிறந்தநாள்.  67 நாட்கள் பின்னால் அப்பா பிறந்த தினத்தை சர்டிபிக்கேட்டில் தப்பாகக் கொடுத்து விட்டார். ஏன் தெரியாமல் அப்படி கொடு:த்தார் என்பது தெரியவில்லை.  93 வயதாகிற  அவரைக் கேட்டால், ஞாபகமில்லை என்கிறார். அதனால் டிசம்பர் மாதம் பிப்பரவரி மாதம் ஆகிவிட்டது. பெரும்பாலோருக்கு பிறந்த நாளே ஞாபகத்தில் இருப்பதில்லை.  பிறந்த நாள் என்பதை நம் வயதை ஊகிக்க ஒரு அடையாளம். அவ்வளவுதான். நான் அந்தத் தவறை என் புதல்வனுக்கோ புதல்விக்கோ செய்யவில்லை. 

    பல ஆண்டுகள் நான் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதைப் பற்றி யோசித்ததில்லை.  பெரும்பாலும் எனக்கு அது தெரியாமல் கூட போய்விடும்.  யாரும் அன்று என்னை வாழ்த்தக் கூட மாட்டார்கள். உண்மையில் அன்று நான் யாரிடமாவது சண்டைக்குப் போவோனாக இருப்பேன்.  அல்லது என்னிடம் யாராவது வம்புக்கிழுத்து திட்டினாலும் திட்டியிருப்பார்கள்.  

    இன்று சினிமாவில் இருப்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள் இந்தப் பிறந்தத் தினத்தை வைத்துக்கொண்டு அடிக்கிற கூத்தை நினைத்து வேடிக்கையாக இருக்கிறது.  ஒரு அடையாளத்திற்காகத்தான் பிறந்த நாள் என்பதைத் தவிர அதுவும் மற்ற நாட்களைப் போல் ஒரு நாள்தான்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பிறந்த தினத்தை ஒட்டி என் புத்தகங்கள் கொண்டு வர வேண்டுமென்று நினைப்பதுண்டு.  2013 ஆம் ஆண்டு என் பிறந்த தினத்தை ஒட்டி என்னுடைய 4 புத்தகங்களைக் கொண்டு வந்தேன்.  3 சிறுகதைத் தொகுதியும் 1 கவிதைத் தொகுதியும்.  

    அதேபோல் இந்த வருட பிறந்த தினம் போது என் மொத்த சிறுகதைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வர நினைத்தேன்.  முடியவில்லை.  ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நான் 4 அட்டைப் படங்களை ஒன்றாக அடித்து வைத்திருந்தேன்.  அதில் மூன்று அட்டைப் படங்களை அப்போதே புத்தகஙகளாகக் கொண்டு வந்துவிட்டேன்.  நாலாவதாக ஒரு அட்டைப் படத்தில் என் கட்டுரைப் புத்தகம் கொண்டு வர நேர் பக்கம் என்ற பெயரில் அட்டைப் படம் தயாரித்து வைத்திருந்தேன்.  ஒவ்வொரு வருடமும் என் கடட்டுரைப் புத்தகம் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும்போது ஒரு அலட்சியம் இருந்து கொண்டே இருக்கும்.  என் நண்பரும் கவிஞரும் வைதீஸ்வரன் வரைந்த ஓவியத்தைக் கொண்டு அந்த அட்டைப் படத்தைத் தயாரித்திருந்தேன்.  அற்புதமான ஓவியம் அது.  100 பக்கங்களுக்கு மேலாக அந்தப் புத்தகம் கொண்டு வரலாமென்று நினைத்திருந்தேன்.  

    கடந்த 27 ஆண்டுகளாக பத்திரிகைக் கொண்டு வருவதும் புத்தகம் போடுவதும் என் வழக்கம்.  புத்தகம் விற்பது என்பதெல்லாம யோசித்துக் கொண்டிருக்கும்போது என் நிலை ரொம்பவும் மாறி விட்டது.  முதலில் 1000 பிரதிகள் அச்சடித்தப் புத்தகமெல்லாம் பின்னால் 600 பிரதிகளாக மாறி விட்டன.  அதன் பின் 500 பிரதிகள் அடிக்கத் தொடங்கினேன். இப்படி நான் அடித்த 600 பிரதிகள் 500 பிரதிகள் புத்தகங்களே இன்னும் என்னை விட்டு அகலாமல் இருக்கின்றன.  லாவண்யா என்ற கவிஞர் எழுதிய 'இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்' என்ற கவிதைத் தொகுதி என்னை விட்டு அகலுவதில்லை.  நான் யோசிப்பேன்: அந்தக் கவிதைத் தொகுதிக்கு நத்தை என்று பெயர் வைத்ததால் நத்தை நகராமல் என்னிடமே இருக்கிறதா என்று.

    முன்பு லைப்ரரி ஆர்டர் கிடைக்கும்.  புத்தகமும் நம்மை விட்டு நகரும்.  இப்போதெல்லாம் அதெல்லாம் கிடையாது.  மேலும் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி புத்தக விமர்சனம் வந்தால் புத்தகம் விற்கும் என்று சொல்வார்கள்.  அதெல்லாம் கூட பொய்.  முதலில் பத்திரிகையில் விமர்சனமே வராது.  ஏன் என்றால் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஏராளமான புத்தகங்கள் வந்து குவிகின்றன.  யார் புத்தகத்தை விமர்சனம் செய்வது என்ற குழப்பம் அவர்களுக்கு வந்து விடும்.  மேலும் அப்படி விமர்சனம் வந்தப் புத்தகம் பிரமாதமாக விற்று விடாது.  புத்தகக் கடைகளில் விற்கக் கொடுக்கலாம் என்றால் அவர்கள் ஏகப்பட்ட புத்தகங்களை வைத்துக் கொண்டு விழி பிதுங்குகிறார்கள்.  நம் புத்தகங்களைக் கொடுத்தால் எத்தனைப் பிரதிகள் விற்கின்றன என்பதைக் கூட அவர்களால் சொல்ல முடியவில்லை.  சரி புத்தகம் விற்றப் பணத்தையாவது கேட்கலாம் என்றால்...நம்மைப் பார்த்தால் சிரிக்கிறார்கள்.  புன்னகை புரிகிறார்கள்.  புததகம் விற்பதைப் பற்றி கேட்டால் அவர்கள் முகம் மாறி விடுகிறது. அப்படியென்றால் என்னதான் செய்வது?  அதுதான் புரியவில்லை.  அதனால் இப்போது ஒன்றே ஒன்றுதான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.  

    கவிதைப் புத்தகம் என்றால் 50 பிரதிகள், கதை, கட்டுரை, நாவல் என்றால் 100 பிரதிகள் அடிக்கத் தொடங்கி இருக்கிறேன்.  இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  பக்கங்கள் அதிகமாகப் போகாமல் புத்தகம் தயாரிப்பது.  இதனால் தயாரிப்புச் செலவு குறைவதோடு அல்லாமல், படிப்பவர்களும் எளிதாகப் படித்து முடித்து விடலாம். அதனால் பெரும்பாலான என் புத்தகங்கள் எல்லாம் 200 பக்கங்களுக்குள் இருக்கும்.  விலையும் அதிகமாக இருக்காது.  பெரும்பாலும் இந்தப் புத்தகங்களைக் கூட விற்பதற்கு யாரிடமும் கொடுக்காமல் விற்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    நான் 50 புத்தகம் 100 புத்தகம் தயாரிக்கும் போது என் செலவு 50% ஆகி விடும்.  அதாவது 100 பக்கம் தயாரிக்கும் ஒரு புத்தகம் விலையை நான் ரூ100 வைத்தால் எனக்கு ரூ50 செலவாகும் ஒரு புத்தகம் தயாரிக்க. 

    நேர் பக்கம் என்ற பெயரில் நான் அட்டைப் படத்தை 600 அடித்திருந்தேன்.  பல ஆண்டுகளுக்கு முன்பு.  அதனால் அப்புத்தகம் மட்டும் 370 பிரதிகள் இப்போது அடித்து விட்டேன்.  பல சந்தர்ப்பங்களில் நான் வாசித்த எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது.  அப் புத்தகம் முழுவதும் பல படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதி இருக்கிறேன்.  அவர்களுடைய படைப்புகளைப் பற்றி.  இன்னும் கூட நான் அதிகமாக எழுதியிருக்கிறேன்.  மிகக் குறைவாகத்தான் நான் தேர்ந்தெடுத்துப் புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.  அப்புத்தகம் 142 பக்கங்கள் கொண்ட புத்தகம்.

    எந்தந்தப் படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன் என்று ஒரு லிஸ்ட் கொடுக்க விரும்புகிறேன்.

    1.சி சு செல்லப்பா 2. க.நா.சு 3. நகுலன் 4. பிச்சமூர்த்தி 5.அசோகமித்திரன் 6. தி ஜானகிராமன் 7. நீல பத்மநாபன் 8. வைதீஸ்வரன் 9. பிரமிள் 10. வெங்கட் சாமிநாதன் 11. கோபிகிருஷ்ணன் 12. ஸ்டெல்லாபுரூஸ் 13. ஐராவதம் 14. டாக்டர் பஞ்சாட்சரம் செல்வராஜன் 15. ஜெயகாந்தன் 16. பாரதியார்  

    370 பிரதிகள் என் புத்தகத்தை அடித்துவிட்டதால், ராத்திரி எல்லாம் தூக்கம் வராமல் போகிறது.  என் பிறந்த நாள் போது இதுமாதிரியான கலக்கமா எனக்கு?
   

Comments

Bala said…
kalanga vendam alagiyasingar avargalae .nangal ullom thangal padaipugai padika padukaka.

Popular posts from this blog