Skip to main content

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

நினைவு தினம்

அன்றைக்கென்று
அலுவல் நிமித்தம்
அடுத்த நாடொன்றுக்கு
ஆகாயப் பயணம்.
அலை அலையாய்
அம்மாவின் நினைவுகளோடு.
அசைவ உணவை
அண்டாமல் இருந்ததொன்றே
அயலக வாழ்வில்
அடியேனால் முடிந்தது
அம்மாவின் இந்த முதலாம்
ஆண்டு நினைவு நாளில்.

0

அப்படியே இருப்பதுதான்

என்றைக்காவது
பார்த்தால்
கேட்பதற்கென்று
சில கேள்விகள்
என் வசம்.
என்றைக்காவது
பார்த்தால்
கேட்கப்படாமல்
அவைகள்
அப்படியே
இருப்பதுதான்
அழகு.

o
எப்போதும் போல
எப்போதும் போல்தான்
இதையும் சொன்னேன்.

எப்போதையும் போலின்றி
கேட்கின்ற வகையில்
நீ இருந்ததுதான்
இன்றைய சிறப்பம்சம்.

Comments

Popular posts from this blog