Skip to main content

எதையாவது சொல்லட்டுமா......71


க.நா.சு வை நாம் மறந்துவிட்டோம்.  அவருடைய 100வது ஆண்டை நாம் வெறுமனே சில கட்டுரைகள் எழுதி நிறுத்தி விட்டோம்.  நான் அவருடைய கவிதைகளை இலவசமாக அச்சடித்து விநியோகம் செய்ததோடு நிறுத்தி விட்டேன்.

ஆனால் க.நா.சுவை நான் பல சந்தர்ப்பங்களில் நினைத்துக்கொள்ள வேண்டும்.  உண்மையில் அவர் மரணம் அடையும்வரை புத்தகங்கள் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தவில்லை. இது ரொம்ப ஆச்சரியம்.  வயது ஆக ஆக நம்மால் புத்தகம் படிப்பது முடியாது.  க.நா.சு கண் தெரியாவிட்டாலும் படித்துக்கொண்டிருப்பார்.  எழுதிக்கொண்டே இருப்பார்.  இன்னும்கூட அவர் எழுதியது பிரசுரமாகாமல் இருக்கும். 

ஒருமுறை நான் விருட்சம் ஆரம்பித்தபோது எதாவது கட்டுரை தரும்படி கேட்டுக்கொண்டேன்.  உடனே க.நா.சு ஒரு கட்டுரை ஏற்கனவே எழுதியதைக் கொடுத்தார். பல சந்தர்ப்பங்களில் நான் க.நா.சுவைப் பார்த்து வியந்திருக்கிறேன்.  கவிதை எழுதுவது, விமர்சனம் செய்வது, கதை எழுதுவது என்று தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டிருந்தார்.  

அவருடன் பேசுவது இனிமையான அனுபவமாக எனக்குத் தோன்றும்.  ஒருமுறை பெரிய கூட்டம் ஒன்று மயிலாப்பூரில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்றது.   அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.  இப்படி ஒரு கூட்டம் க.நா.சு என்ற மகத்தான எழுத்தாளரைப் பார்க்கத்தான் செல்லமுடியும்.  இப்படி ஒரு கூட்டம் இன்றைய எழுத்தாளருக்குச் சாத்தியமா என்பது தெரியவில்லை.  யாரும் யாரையும் பார்க்காமல் இருப்பதுதான் சாத்தியம். 

அந்தக் கூட்டத்தில் நகுலன் கூட இருந்தார்.  பின் கநாசு மயிலாப்பூரில் உள்ள ராயர் ஓட்டலில் சாப்பிட எங்களை அழைத்துச் சென்றார். உண்மையில் என்ன வருத்தமான விஷயம் என்னவென்றால், அன்று பேசியது ஒரு டைரியில் குறித்துக்கொள்ளாமல் விட்டுவிட்டது.  இப்படி எத்தனையோ கூட்டங்களை பதிவு செய்யாமல் விட்டுவிட்டது பெரிய தப்பாகவே எனக்குத் தோன்றுகிறது. 
க.நா.சு எந்தக் கூட்டத்தில் பேசினாலும் எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் மனதிலிருந்து பேசுவார்.  மாதம் ஒருமுறையாவது இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்பது அவர் விருப்பம். அப்படிப்பட்டவருக்கு ஒரு கூட்டம் நடத்தவேண்டும்.  அதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன். எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். 

Comments

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக உங்களுக்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் உண்டு.