Skip to main content

விலகிப் போனவன்


பூக்களை ஏந்திக் கொண்டவன்
வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன்
தனித்த பசிக்குச் சுய சமையலையும்
விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில்
மனதோடு இசைக்கப் பாடல்களையும்
அருகிலிருந்து சொல்லித் தந்தவன்
சொல்லியோ சொல்லாமலோ
அன்பின் பிடியிலிருந்து
யாரோவாகி அவன் நகர்ந்தவேளை
தெரியாமலே போயிற்று
இறுதியில் தெரிந்தது
ஆழ்கிணறுகளின் பழுப்பு தோய்ந்த
சிதிலங்களுக்கிடையில் துளிர்க்கும்
பசுந்தளிர், சிறு மலர்களைப் போன்று
பார்த்துப் பார்த்து மகிழும்படியான
வாழ்வினை அவன் விட்டுச் செல்லாதது
சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்

Comments

Popular posts from this blog