Skip to main content

கோபங்களின் நிமித்தம்



வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்
ஒவ்வொரு துணிக்கையிலும்
அன்பைக் கொண்டு
எனக்காய்ச் செய்ததான சுவர்களுக்குள்
உன் சகாப்பிசாசுகளை ஏவுகிறாய்
மிகுந்த அச்சம் கொண்ட பார்வையினை
மீண்டும் மீண்டும் உன்னிலெறிகையில்
அலட்சியத்தின் சலனமற்ற மொழி
உன் முகத்தில் உறைகிறது
நாற்திசைகளிலும் ஊசலாடும்
நூலாம்படைகளினிடையில்
சிதறும் மனதின் சூனியங்களுக்குள்
நிரம்பி வழிகிறது
நிராகரிப்பின் பெருவலி
நான் அகல்கிறேன்
உனது இப்பெருங்கோட்டையை விட்டும்
நீயுன் வழித்துணைகளை
மூலைக்கொன்றாய்க் குடியமர்த்திப்
பாடச் சொல்லி ரசி
இறுதியாக வழமை போலவே
உனது அளவிடமுடியாக் கோபங்களையும்
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று
வழியிறங்கிப்போகிறேன்
வாழ்க்கை
அது மீண்டும் அழகாயிற்று

Comments

Popular posts from this blog