Skip to main content

இரங்கல்கள்




வைதீஸ்வரனின் தாயார் இறந்த தினத்தன்று அவர் வீட்டுக்குச் சென்றபோது நிறைய ஐம்பதாண்டு கால நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. எஸ் வி சகஸ்ரநாமம் என்பவர் போன்றோரின் விடாமுயற்சியில்தான் எம்.கே தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் சிறை மீட்புக்கு வெற்றி கிடைத்தது. அப்போது இந்தியா சுதந்திரம் அடையவில்லை. கடைசி சரணாலயம் இங்கிலாந்திலுள்ள பிரிவி கவுன்சில் என்பது. வி.எல் எதிராஜ் என்பவர்தான் அதற்குரிய வக்கீல். ஏராளமான செலவு. எஸ் எஸ் வாசனிடமிருந்து கைப்பட ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை சிறை மீட்பு நிதிக்காகப் பெற்றார் என்று கூறுவார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தபோது அவருடைய நாடகக் குழு செயலிழந்து போகக்கூடாது என்று எஸ் வி சகஸ்ராமம் அக் குழு நாடகங்களைத் தினசரி அரங்கேற்ற வழி செய்தார். அப்படி நடிக்கப் பட்டதுதான் 'மனோகரா' நாடகம். அதில் மனோகரனாக நடித்தது. கே. ஆர் ராமசாமி. நாடகத்தில் வரும் 'செயின்' சீன் மிகவும் புகழ் பெற்றது. இது திரைப்படத்திலும் வரும். மேடையில் பொருந்தி போவது, திரைப்படத்தில் அபத்தமாகத் தோன்றும். அதில் இந்த 'செயின்' சீனும் ஒன்று. சிறைப் பிடித்து வரும் காவலாளிகள் கைதியின் பேருரைக்கு வசதியாக சங்கிலியோடு முன்னும் பின்னுமாக நகர்வார்கள். எஸ் வி சகஸ்ராமின் 'பைத்தியக்காரன்' நாடகமும் என்.எஸ். கிருஷ்ணன் சார்பில் நடத்தப்பட்டது. மேடையில் வெற்றிகரமாக இருந்த இந்த நாடகம் திரைப்படமாக அதிகம் சோபிக்கவில்லை.
ஆனால் எஸ் வி சகஸ்ராமம் யாருக்கும் நிழல் தரும் ஆலமரமாக வாழ்ந்தார். அவர் வீடு ஒரு சத்திரமாக இருந்தது. அவருடைய சகோதரர்கள், உறவினர்கள் நன்கு படித்த, பண்பாளர்களாக இருந்தார்கள். அவருடைய ஒரு சகோதரியின் மகன் என்.வி.ராஜாமணி என்னும் ராமநரசு. இன்னொரு சகோதரி மகன் வைதீஸ்வரன். ராமநரசு ஏன் ஜெமினி ஸ்டுடியோவைப் பணிபுரிய தேர்ந்தெடுத்தார்? அவர் கணக்கில் எம்.ஏ பட்டம் பெற்றவர். அப்போதே ஏதாவது கல்லூரியில் எளிதாகச் சேர்ந்திருக்கலாம். ஆனால் எனக்காகவென்று ஜெமினி தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது. அந்த நாளில் நான் யாருக்காக நண்பனானால் என்னை அப்படியே அவர்கள் குடும்பத்திலேயே சேர்த்துக் கொண்டு விடுவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு 21 வயது முடிந்திருக்கவில்லை. என்னுடன் ராமநரசுவின் தந்தையும் இதர உறவினர்களும் உலக விவகாரங்களை விவாதிப்பார்கள். நானும் இன்னொரு நண்பரும் எஸ் வி சகஸ்ராமத்துக்கும் ஒரு புனைபெயர் வைத்திருந்தோம். 'மெளனி'. அவர் வீட்டில் எல்லோரும் ஏதேதோ பேசி, விவாதித்துக் கொண்டிருக்க, அவர் மட்டும் வாயே திறக்காது இருப்பார். அவருடைய தூண்டுதலில்தான் புதிய நாடகாசிரியர்கள் தோன்றினார்கள். அவர் மூன்றுமாத நாடகப் பள்ளி ஒன்று நடத்தினார். அதில் உருவானவர்தான் கோமல் சுவாமிநாதன். அவர் எழுதிய, தயாரித்த நாடகங்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்து போய்விட்டன. ஆனால் அவருடைய வாழ்க்கையின் இறுதி நாட்களில் நடத்திய 'சுபமங்களா' பத்திரிகை இன்னும் பலருக்கு ஆதரிசமாக இருக்கிறது. அவரும் எனக்கு நண்பராகத்தான் இருந்தார். 'நாம் முதலிலிருந்தே முற்போக்குத்தான். நாம் எதற்காகக் கட்சி கட்டும் கட்சிகளுடன் உறவு கொள்ள வேண்டும்,' என்று என் வாதம். ஆனால் கோமலுக்கு அது வேண்டியிருந்தது.
ராஜாமணி, சகஸ்ரநாமம் இருந்த தாண்டவராயன் தெரு வீட்டில்தான் வைதீஸ்வரன் சில நாட்கள் இருந்தார். அவர் சில ஆண்டுகள் திருவல்லிக்கேணி திருவெட்டீசுவரன் பேட்டையில் இருந்தார். அவர் வீட்டருகில்தான் சி சு செல்லப்பாவோடு அமரத்துவம் அடைந்த 19 பிள்ளையார் கோயில் தெரு. கநாசுவும் பல ஆண்டுகள் 48 வாலாஜா சாலையில் இருந்தார். ஆனால் வீடு விஷயத்தில் பிரசுர விஷயத்திலும் செல்லப்பா அடைந்த வெற்றிகளை அவர் அடையமுடியவில்லை.
வைதீஸ்வரன் மூலம் நான் பரிச்சயம் பெற்ற உலகம் மிகவும் அகன்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் 21, 22 வயதுக்கு முன்பு. வைதீஸ்வரன் போலவே ஆர. கே ராமச்சந்திரன் மூவரும் அந்தக் குடும்பப் பரிவாரங்களே எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்றே தேவையில்லை. அங்கே இருப்பவர்களோடு பேசிக்கொண்டே இருப்பேன். சாப்பிடச் சொல்வார்கள். சாப்பிடுவேன். ஐந்தாறு முறை நேரமாகிவிட்டது, தூங்கி விட்டுக் காலையில் போ என்பார்கள். அப்படியே எந்த முன்னேற்பாடும் இல்லாமல்தான் அவர்கள் வீட்டிலேயே நிம்மதியாகத் தூங்கி விட்டுக் காலையில் வீட்டுக்குப் போவேன். என் தாயாருக்கும் இதெல்லாம் பழக்கப்பட்டு விட்டது. அப்போது தேடுவது, விசாரிப்பது என்றால் நேரே ஒருவர் போகவேண்டும்.
இதெல்லாம் வைதீஸ்வரன் வீட்டுத் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளச் சென்றபோது நினைக்கத் தோன்றியது. அவர்கள் குடும்பத்தில் அநேகமாக அனைவருக்கும் சதுர வடிவ முகம். அவர்கள் அறிமுகம்தான் என்னை எழுதத் தூண்டியது என்றால் அது தவறாகாது.
என்னுடைய முதல் இரு சிறுகதைத் தொகுப்புகளுக்கும் ஞானக்கூத்தனும், வைதீஸ்வரனும்தான் முன்னுரை எழுதினார்கள். அதன் பிறகுதான் நான் முன்னுரைகள் எழுத வற்புறுத்தப்பட்டு இப்போது நான் முன்னுரைகளே படிப்பதில்லை. நல்ல வாசகர்கள் முன்னுரைக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.
இவ்வளவு நீண்ட வரலாறுக்குச் சாட்சியாக நான் இருந்து கொண்டிருக்கிறேன். இரு மாதங்கள் முன்பு கூட என்னுடைய 50 ஆண்டு நண்பர் மெலட்டூர் விசுவநாதன் நொடிப்போதில் காலமானார். வைதீஸ்வரனின் தாயார் போல அவரும் மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே மெளனமடைந்தார். 'கொடுத்து வைத்தவர்கள்' என்று சொல்வதற்குச் சில அடையாளங்கள் உண்டு. அதில் ஒன்று மரணம். அது பகலில், வீட்டில் நடக்க வேண்டும். உற்றார் உறவினர் இருக்கும்போது நிகழ வேண்டும். மிக முக்கியமாக, நினைவுடன் உயிரை விட வேண்டும். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. மஞ்ச்சி மனுஷீக்கு மரணமே சாட்சி. நல்லவனுக்கு அவன் மரணம் அடையாளம்.
வைதீஸ்வரன் ஒரு குறும்புப் பார்வையுடன் 'இந்த உடம்பை வைத்துக்கொண்டு இரங்கல் கூட்டங்களுக்குப் போகிறீர்கள்,' என்றார். அவர் குறிப்பிட்ட கூட்டம் கிருத்திகா - சுகந்தி சுப்பிரமணியத்துக்காக நடத்தப்பட்ட கூட்டம். அன்று பேசிய 'சிட்டி'யின் மகன் திரு வேணுகோபால் கிருத்திகாவின் இரு நாவல்களைப் படித்திருந்தார். நான் மூன்று படித்திருந்தேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த கூட்டம், பார்வையாளர்கள் எனக்கு ஆச்சரியமளித்தது. கூட்டத்திற்குச் சென்று வீடு திரும்பியவுடன் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சகஸ்ரநாமம் எழுத்தாளர்களை நாடகம் எழுதச் சொன்னார். வேண்டாம். இரங்கல் கூட்டங்கள் நடத்துங்கள் என்று கூறியிருந்தால் போதுமானது.

(தயாராகிக் கொண்டிருக்கிற நவீன விருட்சம் 84வது இதழில் வெளியாகும்)




Comments