Skip to main content

திருக்குறள் சிந்தனை 16

திருக்குறள் சிந்தனை 16


அழகியசிங்கர்




வள்ளுவர் சிலை அருகில்தான் சந்திப்போம்  ஞானக்கூத்தன் முன்னால் வந்து உட்கார்ந்து விடுவார்.  பின் நான், காளி-தாஸ், ஆனந்த், ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன் போன்ற நண்பர்கள்.  எல்லோரும் தமிழில் அப்போது எழுதுகிறவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.  அதெல்லாம் இனிமையான பொழுதுகளாக இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  ஆத்மாநாமும் அடிக்கடி அங்கு வந்து சந்திப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  நான் இவர்களைச் சந்தித்தபோது ஆத்மாநாம் இல்லை.  இதில் வேடிக்கை என்னவென்றால் வள்ளுவர் சிலை அருகில் நாங்கள் சந்தித்தாலும் வள்ளுவர் குறித்துப் பேசியதில்லை.  ஒருமுறை கூட திருக்குறளைப் பற்றிப் பேசியதில்லை.  ஏன்?  இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.  காரணம் புரியவில்லை.  

இன்றைய திருக்குறளைப் பார்ப்போம்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

வானிலிருந்து மழையின் துளிகள் விழாவிட்டால் பூமியில் முளைக்கும் புல் பூண்டு கூட காண்பது அரிது என்கிறார் திருவள்ளுவர்.  இக்குறள் கிட்டத்தட்ட ஏரின் உழாஅர் உழவர் குறளில் சொல்வதையே சொல்வதுபோல் தோன்றுகிறது.  திருவள்ளுவரிடம் காண்பது எதுகையைக் குறளில் பொருத்தமாகப் பயன்படுத்துவது.    உதாரணமாக விசும்பின் என்றும் பசும்புல் என்றும் குறிப்பிடுகிறார்.

இதோ இதற்கு ஏற்றாற் போல் பிரதீபன் என்ற நவீன கவிஞரின் கவிதையைப் குறிப்பிட விரும்புகிறேன்.

தீப்பெட்டியில் அடைத்துச்
சிறைசெய்த
சின்னஞ்சிறு இந்திரகோபப் பூச்சிகள்
அடாது சேட்டைகள்கண்டு
அகங்குன்றிய ஆசிரியர்

ஆரவாரமான
அறிவுஜீவித்தனப் பேச்சுக்களைக் கேட்டு
நசுங்கி உணர்ந்த நண்பன்

அதிகம சீண்டியதால்
அழுதுவிட்ட புதுமனைவி

மறந்தனம் அவையெலாம்
வருந்தற்க என்பதுபோல்
சிரித்துத் தோன்றித் தெரிந்தனர்
மழைபெய்து
மண்நெகிழ்ந்திருக்கும்
இந்த 
மாலைப் பொழுதில்
நான் வைத்திருக்கும் எல்லாக் கவிதைத் தொüகுதிகளிலும் மழையைப் பற்றி கவிதைகள் இல்லாமல் இல்லை.  நான் வைத்திருக்கும் ஆர் பாலகிருஷ்ணனின் கவிதைத் தொகுதியின் பெயர் மழை.

Comments