Skip to main content

நிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும்

 நிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும்




அழகியசிங்கர்






அழகியசிங்கர் : வணக்கம்.

மோகினியும், ஜெகனும் : வணக்கம்.

அழகியசிங்கர் : நாம் இப்போது நிஜந்தன் நாவலான புதிய வெயிலும் நீலக் கடலும் என்பதைப் பற்றிப் பேசப் போகிறோம்.

மோகினி : அந்த நாவல் 2008ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

அழகியசிங்கர் ; ஆமாம்.

ஜெகன் : இந்தக் கதை அசோகராஜன் என்ற 40வயதுக்காரன் லதா என்கிற 20 வயதுக்காரியை காதலிக்கிற கதை.

அழகியசிங்கர் : ஆனா லதாவை அசோக் காதலிப்பதாக எந்த இடத்திலும் நாவலில் கூறவில்லை.

மோகினி : அசோகராஜன் லதா என்ற வண்ணத்தியைக் காதலிக்கிறான். அவள் அழகாக இருக்கிறாள்.

ஜெகன் : அவள் அம்மா இறந்து விடுகிறாள். அந்த ஊர்வலத்தில் அசோக்ராஜா லதாவைப் பார்க்கிறான். வளர்ந்த பெண்ணாக அவன் கண்களுக்கு அப்போதுதான் அவள் தென்படுகிறாள்.

மோகினி : அசோகராஜா குறும்படம் எடுப்பவன். நாடகம் அல்லது நதிக்கரை என்ற குறும்படம் முடித்தபோதுதான் லதாவின் அம்மா இறந்து விடுகிறாள்.

அழகியசிங்கர் : இந்த நாவல் முழுவதும் ஒரே பேச்சு. அதுவும் லதாவுடன்.

ஜெகன் : ஒரு இடத்தில் அசோகராஜா இப்படிக் குறிப்பிடுகிறான்
.
ஜெகன் படிக்கிறான். . இதோ இந்தக் கணம் கூட நாம் ஒரு அறைக்குச் சென்று உடலுறவு கொண்டு விடலாம். ஆனால் அது வேண்டாம்.

மோகினி : லதாவை வண்ணாத்தி என்று கூறும் அசோகராஜா தான் எந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்று எங்கும் கூறவில்லை. ஏனோ நாவலாசிரியர் இதைத் தெரியப்படுத்தவில்லை.

அழகியசிங்கர் : அவனுக்குச் சோரன் கீர்க்கிகார்ட் புத்தகத்தைத் தோழி கண்ணகிதான் அறிமுகப்படுத்தினாள். அசோகராஜாவிற்கு கீர்க்கிகார்ட் புத்தகம் பிடித்திருந்தது. கொஞ்ச நாட்களாய் கற்பனையில் மார்க்ஸ் என்ற பாத்திரத்தில் உலாவிக்கொண்டிருந்த அவன் திரும்பவும் அசோகராஜா ஆகிவிட்டான்.

ஜெகன் : அசோகராஜன் தன் வீட்டைவிட்டு வந்தது பற்றிச் சிறப்பாக நாவலில் குறிப்பிட்டிருக்கிறார். அசோகராஜா அக்கா அந்த வீட்டை எடுத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருக்கும். இது குறித்து அசோகராஜாவிற்கு எந்த வருத்தமும் இல்லை.அமைந்தகரை குடியிருப்பில் ஒரு சிறிய குடியிருப்பை எடுத்துக்கொண்டு தங்கியிருக்கிறான்.பக்கத்தில் மாடர்ன் லான்டிரி இருந்தது.அங்குச் சலவைக்குத் துணிப்போட்ட 3ஆம் நாள் மூன்று வயதுக் குழந்தை லதாவைப் பார்க்கிறான்.

மோகினி : லதாவின் அப்பா சோமு அசோகராஜ்ஜைப் பார்த்துத் தான் முன்புபோல் என் மனைவியிடம் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறான்.

ஜெகன் : கல்யாணம் ஆகாத அசோகராஜாவிடம் அவன் இதைக் கூறியிருக்கிறான்.

மோகினி : சோமு பைத்தியமாகக் காரணமாக அவனுடைய அப்பா வேலுதான் காரணமாக இருப்பார் என்பதை அசோகராஜா கண்டுபிடித்து விடுகிறான்.

ஜெகன் : ஒரு உறவு மீறல் வாழ்க்கை முழுவதும் சிதைத்து விட்டது என்கிறாள் லதா.
அழகியசிங்கர் : ஒரு கிழவர் தன் மருமகளுடன் உறவு கொள்வது ஒரு சமூக அவலம் என்கிறார் கதாசிரியர்.

மோகினி : சோமுவின் பைத்தியம் முற்றி விடுகிறது. அதற்குக் காரணம் அவன் மனைவியும் அப்பாவும் வைத்துக்கொண்டிருந்த தகாத உறவு.

ஜெகன் : கூனி குறுகிப் போய் வேலு வீட்டிலேயே கிடந்திருக்கிறார். சோமு தற்கொலை செய்து கொண்டு விட்டான்.

மோகினி : ஒரு குடும்பம் எல்லாவிதங்களிலும் கெட்டுப் போய் விடுகிறது என்பதற்கு உதாரணமாக சோமு, சேகர், வேலு போன்றவர்களில் தகாத உறவுகள் ஒரு காரணமாக அமைகிறது.

அழகியசிங்கர் : இந்த நாவல் எழுதும்போது எய்ட்ஸ் நோய் உலகம் முழுவதும் பரவி எல்லோரையும் அச்சப்பட வைத்திருக்கிறது.
மோகினி : ஆமாம். சேகருக்கு எய்ட்ஸ் நோய் வந்து இறந்தான் என்றுநாவலில் வருகிறது.

ஜெகன் : அசோகராஜனுக்கு ஏன் லதா அம்மாவிற்கு எய்ட்ஸ் நோய் வரவில்லை என்று சந்தேகம் வருகிறது. சேகருடன் அவளும் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தாள் என்றும் அவனுக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவள் அம்மா புற்று நோயால்தான் இறந்தாள்.

அழகியசிங்கர் : கல்லூரியில் படிக்கும்போது கோபால் என்ற பையனுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவன் பிடியில் சிக்கித் தவிக்கிறாள்.

மோகினி : இந்த நாவல் சமுதாயத்தில் சீரழிந்து போனவர்களின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி வருகிறது.

ஜெகன் : கோபாலுக்கும் அசோகராஜாவிற்கும் சண்டை வருகிறது. கோபால் சண்டை போடுகிறான். வயதான அசோகராஜா ஏன் லதாவுடன் அடிக்கடி சுற்றுகிறான் என்பதுதான் வாதம்.

மோகினி : அவள் விரும்பினால் கோபால் திருமணம் செய்து கொள்ளலாம். தனக்கும் அதுதான் விருப்பம் என்கிறான் அசோகராஜா.

அழகியசிங்கர் : அசோகராஜனின் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. அவன் அக்கா ராஜஸ்தானுக்கு ஒரு திருமணத்திற்குப் போகவேண்டுமென்று போகிறாள். அப்பாவைத் தனியாக விட்டுவிட்டு. அசோகராஜாவை வீட்டிற்கு வந்திருந்து பார்த்துக்கொள்ள சொல்கிறாள். அவன் மறுத்து விடுகிறான். அந்தத் தருணத்தில் அப்பா இறந்து விடுகிறார். இருத்தலியல் கொள்கைப் படி பாசம் என்று எதுவும் கிடையாது போலிருக்கிறது.

ஜெகன் : இந்த நாவலின் அடுத்த கட்டம். கோபால் பற்றியது. ஏற்கனவே கோபால் திருமணமானவன். அவன் லதாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவனைத் திருமணம் செய்து கொண்ட பெண் கோபாலை மிரட்டுகிறாள். அவனை அவளுடன் வந்து இருக்கச் சொல்கிறாள். அவன் முடியாது என்கிறான். தன் உடல் மீது தீ வைத்துக்கொள்கிறாள். உடனே கோபாலையும் கட்டிப்பிடிக்கிறாள். தீக்காயத்தால் அவள் இறந்து விடுகிறாள். அவன் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ந்து பிழைத்து விடுகிறான். கோபால் எப்போதுமே அசோகராஜாவை எரிச்சலுடன் பார்க்கிறான். தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தபோதும் அப்படித்தான் பார்க்கிறான்.

மோகினி : தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறாள் லதா.

அழகியசிங்கர் : இந்த நாவல் முழுவதும் லதா - அசோகராஜா பற்றித்தான். அடிக்கடி லதா அசோகராஜாவைப் பார்க்க வருகிறாள். அவளுடைய துன்பத்தையெல்லாம் அவனிடம் சொல்கிறாள்.

மோகினி : நிறைய உபகதைகள். இசை ஆசிரியர் செல்வம் வீட்டில் கருக்கலைப்பு செய்துவிட்டுத் தங்குகிறாள் லதா. அங்கு இசை ஆசிரியர் செல்வம் பற்றி செய்தி வருகிறது.

ஜெகன் : முன்பே சொன்னதுபோல் இந்த நாவல் எய்ட்ஸ் பற்றிப் பேசுகிறது.

அழகியசிங்கர் : ஆமாம். சிவலிங்கம் என்ற கதாபாத்திரம். பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு உண்டு. அவருக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது. அவர் மனைவிக்கு அது பரவியிருக்கும் என்று நம்புகிறார்.

மோகினி : லதாவிற்கு அசோகராஜா மீது வெறியான காதல். அதுதான் அவளை கோபாலை நாடவிடாமல் தடுத்துவிட்டது. கண்ணகி அவள் கணவனைக் கொன்றது. அசோகராஜனின் பால்ய கால நக்ஸலைட் நண்பன் அய்யாவு போலீசரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப் படுகிறார் முதலில் சிவலிங்கம் மனைவி இறந்து போகிறாள். பின் அந்த அதிர்ச்சியில் அவர் இறந்து விடுகிறார். அடுக்கடுக்காக மரணங்கள். எத்தனையோ நிகழ்ச்சிகள் இந்த நாவலில்

ஜெகன் : இந்த நாவலைப் பற்றி கடைசியாக என்ன சொல்ல வருகிறீர்கள்?

அழகியசிங்கர் : இந்த நாவல் ஒரே மரண ஓலமாகஒலிக்கிறது . லதா அசோகராஜாவிடம் அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள். அவனும் அவளிடம். அந்த அன்பு கடைசிவரை வரம்பு மீறவில்லை என்பது ஆசிரியமாக இருக்கிறது. கோபாலுக்கு அசோகராஜாவின் மீது ஒரே சந்தேகம். லதாவை கோபால் சீரழித்தும் அவன் அவளை விட முடியாமல் இருக்கிறான். பலரிடம் அவன் தொடர்பு வைத்திருந்தாலும் அவன் லதாவை விட முடியவில்லை. அவனால் அவளிடம் உள்ள தாபத்தைத் தணிக்க முடியவில்லை இதற்குக் காரணம் அசோகராஜாவும் அவளும் பழகிய விதம்.

இந்தக் கதையின் இறுதிப் பகுதியில் கோபாலைத் தள்ளிவிட அவன் இறந்துவிடுகிறான். இது தற்செயலாக நடந்த நிகழ்ச்சிதான். கோபால்தான் மூர்க்கமாக அவனைத் தாக்குகிறான். கோபாலைத் தடுத்துத் தள்ளிவிடுவதால் தடுமாறி தலையில் அடிப்பட்டு இறந்து விடுகிறான். இந்த இடத்தில் நாவல் ஆல்பெர் கம்யூவின் நாவலான அந்நியனை ஞாபகமூட்டுகிறது. காரணமில்லாமல் ஏற்படுகிற கொலையில் அதில் வரும் கதாபாத்திரம் ஜெயிலுக்குப் போகிறது. இங்கு போலீஸ் ஸ்டேஷன் போகிறான் அசோகராஜா.
இறுதியில் வன்முறையில் முடிந்து விடுகிற இந்த நாவல், முதலிலிருந்து கடைசிவரை துயரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.
(குவிகம் ஏப்ரல் 2021 மாத மின் இதழில் வெளிவந்த கட்டுரை)

Comments