Skip to main content

இன்று உலகப் புத்தக தினம்

   
                அழகியசிங்கர்


         

    எல்லாக் குப்பைகளையும் தூக்கி
    தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்
    என் புத்தகக் குவியலைப் பார்த்து
    மலைத்து நின்றாள்
    என்ன செய்வதென்று அறியாமல்

    பின் ஆத்திரத்துடன்
    தெருவில் வீசியெறிந்தாள்

    போவோர் வருவோர் காலிடற
    புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்
    ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது
    அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும் பட
    படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்
    எல்லார் முகங்களிலும் புன்னகை
    நானும் ஆவலுடன்
    மாடிப்படிக்கட்டிலிலிருந்து
    தடதடவென்று இறங்கி
    புத்தகத்தின் வரியை
    இடுப்பில் ஒழுங்காய் நிலைகொள்ளாத
    வேஷ்டியைப் பிடித்தபடி படித்தேன்
    'இன்று உலகப் புத்தக தினம்
    இன்றாவது புத்தகம் படிக்க
    அவகாசம் தேடுங்கள்'
    நானும் சிரித்தபடியே
    புத்தகத்தில் விட்டுச் சென்ற
    வரிகளை நினைத்துக்கொண்டேன்
    இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்
    வேஷ்டியைப் பிடித்தபடி....         

                                                                                (14.06.2008)
   



       

Comments