Skip to main content

ழ 5வது இதழ் - டிசம்பர் 1978 ஜனவரி 1979





இறப்புக்குமுன் சில படிமங்கள்


பிரம்மராஜன்


ஜன்னலில் அடைத்த வானம்
குறுக்கிடும்
பூச்செடிகளுடன்
சுப்ரபாதம் இல்லை என்றாலும்
மங்களமான பனிப்புகையில்
விடியல்.
நரைத்த உடைந்த இரவின் சிதறல்கள்
நேரமாய் வந்துவிட்ட
தோட்டியின் கால்களின் முன்.
மண் தின்று எஞ்சிய
எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை
காற்றைத் தவிர
அவனுக்கு மட்டும்
பியானோவென இசைத்து ஒலித்தது
உறங்காமல் திரிந்த
மணிகூண்டு உணர்விழந்துவிட்டது
உறையும் குளிரில்.
பறந்த பறவைகள் வானில் கீறியஓவியம்
பார்த்ததில்
பந்தயம் இழந்தது
நேற்று
விரலிடுக்கில் வழிந்த காலத்தின்
துளிகளை
மற்றொரு கையேந்த
கணங்களை முழுவதும் எரித்தாகிவிட்டது
அவன் இறந்து விட்டான்
இன்றெதற்கு இரண்டாவது மாடியில்
அழகான அறை?
பூக்கள் நிஜமாய்
மலராது அங்கு




 

Comments