Skip to main content

மகனின் தீபாவளி

 
 

சோமா
 
பொட்டடுப்பில் வெந்நீர் வைத்து
எழுப்பி விடும் அப்பத்தா
உடல் முழுதும் எண்ணைய்
தேய்க்கத் துரத்தி சோர்ந்து
முதுகில் ரெண்டு வைக்கும் அம்மா
இரவெல்லாம் கண்விழித்த‌
டெய்லரின் கருணையில்
பட்டன் வைக்க மறந்து
முதல்நாளிரவு வந்து சேரும்
புதுச்சட்டை வாசம்-அதன்
காலருக்கு சந்தனமிடும் அப்பா
பேரம் பேசி வாங்கியிருந்த‌
நாடார்கடை பட்டாசை
பிரித்துக் கொடுக்கும் பெரியப்பா
அதிரசம் முறுக்குச் சுட்டு
அடுக்கும் பெரியம்மா-சாமி
கும்பிடும் முன்னரே இனிப்பு உப்புப்
பார்க்க சாம்பிள் கொடுக்கும் சித்தி
உடை மாற்றி விடும் சித்தப்பா
வருடமொருமுறை வீடுவீடாய்
மங்களம் கொட்டும் மேளக்காரன்
புதுத்துணி கட்டிய ஜோரில் ஊரையே
வளைய வரும் நண்பர் பட்டாளமென‌
ஞாபகம் விரித்தெழும் நேற்றைய
என் தீபாவளி என் மகனுக்கானதில்லை.
ஞாயிறுகளின் நீட்சியான
தீபாவளி விடுமுறையில்
அவனுக்கான பட்டாசு
இன்னும் வாங்க‌ப்படவே இல்லை.

Comments

மதி said…
நல்ல கவிதை .. கொஞ்சம் மாறுபட்ட கோணத்திலான என்னுடைய தீபாவளிக் கவிதையையும் வாசித்துக் கருத்து இடுங்கள் நண்பரே .. http://sunshinesignatures.blogspot.com/2011/10/blog-post_25.html
Anonymous said…
இன்றைய விழாக்கள் ஞாயிறுகளின் நீட்சியாகவே ஆகிவிட்டன. நல்ல கருத்து. அருமையான கவிதை. நன்றி.

Popular posts from this blog