Skip to main content

ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு

உள்ளிழுக்கவும் வெளித்தள்ளவும் செய்யும் தண்ணீரின்

மாய மிதவை கணத்துள் பிரவேசிக்கும் பொழுதில்
எடையற்ற ஒரு வெளியின் வெளிச்ச கணங்களில்
மொழி மென் துகிலென நழுவிச் செல்லும் நளினமாய்

கண்கள் அறியாக் காற்றின் உணர்சித்திரங்களும்
பரவசம் பேசிச் செல்லும் வார்த்தைகளற்று.
வழியற்று வலியுற்று வளி போல் திடமற்று
நெகிழும் மனதை நிலை இருத்த பூக்களைப் பார்க்க
பசிய கிளை நுனிகளில் நீள் விரல் மருதாணியாய்
பூத்திருக்கும் செந்நிற பூக்களின் விகசிப்பில்
நுட்பங்களின் மென்னொளி துலங்கும் அகமொழி

இதழ் இதழாய் ததும்பி சிலிர்க்கிறது

வண்ண வார்த்தைகளாய்.
அசையும் இருப்பே மொழி என்றுணரும் வேளை
மரத்திலிருந்து மிதக்கும் அச் செம்பூக்கள்
மெல்லத் தடம் மாறி கண்களில் உயிர்க்கிறது
ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு.

Comments