Skip to main content

இலா கவிதைகள் 6


1.
தாலாட்டு


கீழிருந்து மேல் செல்லும் மழையில்

கண்ணாடி அறைக்குள் கண் சுருக்கி

எறும்பின் சிறுநடையில்

சிலபொழுது செலிடாகி

வினாடிகளைக் கோபித்து

வேனிலை விரட்டும்படி செய்து

பனிப்பாறை மீதேறி அமர்கையில்

பவளங்கள் முத்துக்கள்

முக்கனிகள் முன்வைத்து

பால் பொங்கப் பசி நிறைக்க

தாலாட்டில் சாய்ந்து

மீளாமல் போனேன்


2.
கண்ணாடிச் சாலை


கண்ணாடிச் சாலையில்

நடக்க வேண்டியதாயிற்று


தவிர்த்து

தள்ளிவைத்து

காற்றாக மட்டுமே

பயண முடிவு

ஓரடி வைத்தேன்

காலடியில்

கும்மிருட்டு


3.
பயணம்


குழந்தைகள் ஆரவாரம்

புதியவர்களின் வரவு

கண்ணசைவில் கவனிப்பு

வேளைக்கு உணவு

உயிர் காக்கும் தவிப்பின்றி

நீரலையில் பயணம்


கண்ணாடியில் மோதிக்கொண்டே

இருக்கிறேன்

கடல் சென்று சேர்வதற்கு


4.
மானும் புலியும்


வரிக்குதிரையின் கோடுகளில்

வரிசையாய்க் குருவிகள்

சுவற்றில் சாய்த்து வைத்திருந்த

வீணையின் கம்பிகள் மீதேறி

பரணைக்குச் செல்லும் எறும்புகள்

மூடாமல் இருந்த கிணற்றுக்குள்

எட்டிப் பார்த்தபடி கொக்கு

கரையேறும் யானைக் கூட்டம்

கால் நீட்டிக் கதை பேசின

அங்கு வந்த மானும் புலியும்


5.

பூஜ்ஜிய வட்டம்


ஒளிவட்டத்தின் உட்குழியில்

நின்று கொண்டிருக்க

நேற்று நடக்கப் போவதையும்

நாளை நடந்ததையும்

ஒத்துப் பார்க்கும்

நாழிகை கடந்த போதும்

கணக்குப் புத்தகத்தை

கைவிட முடியாமல்

திரும்பவும் பூஜ்ஜிய

வட்டத்திற்குள்

வந்து விழுந்தேன்


6.


மேற்குச் சூரியன்


உத்திரத்திலிருந்து தொங்கும்

பொம்மை விமானமேறி

உலகெங்கிலும் பவனிவர

ஆழ்கடலின் மீன்குரல்

கேட்டு பனிமலை மீதிறங்கி

கழுகிடம் இறக்கைகள்

இரவல் வாங்கி

விடியாத இரவிடம்

கோபித்து கொள்கையில்

மேற்குச் சூரியன்

தெரியத் தொடங்கியது.


Comments

Popular posts from this blog