Skip to main content

நான்கு கவிதைகள்




கவிதை ஒன்று



ஓடிக்கொண்டிருந்தது நதி. கரையில் அமர்ந்திருந்தேன். வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய் நீ நதியின் சுழல், ஆழம், குளிர்மை z


எனப் பேசிக்கொண்டே போனாய். ஓடிக்கொண்டிருந்தது நதி.


கேட்டுக்கொண்டிருந்தேன்


ஒரு முடவனைப் போல.


ஏதோ ஒரு தருணத்தில்


உன் தலை சிலுப்பில்


பூ தூறலாய் விழுந்தது


நதி என் மேலும்.


நீந்த முடியாத நதி.


கவிதை இரண்டு


அம்மா


காத்திருப்பாள்


அப்பாவிற்காக.


மிடறு தண்ணீரும்


கவளம் சோறும்


இறங்காது.


தகிக்கும் வெயிலில்.


வெறிச்சோடிய தெருவும்.


ஆண்டணா கம்பிகளும் -


ஒதிய மரமும்


மெளனமாய்


அம்மாவைப் பார்த்துக் கிடக்கும்


அம்மா காத்திருப்பாள்


அரவமற்ற வெளியில்


ஏதோ ஒரு தேவகணத்தில்


மலரும்


கருஞ்சிறகுகள்


அம்மாவின் மனங்குளிர.


கவிதை மூன்று


விரிந்த வானம்.


யாரோ இறைத்துபோன


தானிய மணிகள்போல


இறைந்து கிடக்கும் நட்சத்திரம் -


முற்றம் வழி


கூடம் நிறைக்கும் நிலவு


என்பதாய் இருந்தது


அப்பாவின் இரவுகள்


எனக்குக் கிடைத்தது


துண்டு வானம் -


முட்டம் இல்லாத நாளில்


இரண்டொரு நட்சத்திரம்


சாளரம் வழியே


கொஞ்சம் நிலவு.


உன் வீடுதான் காரணமென்றாலும்


நீயும் சொல்லக்கூடும்


என் வீடு


உன் வானத்தை மறைப்பதை.


கவிதை நான்கு


மிகவும் அழகானது


நீ உடைத்தப் பூஞ்ஜாடி


ஒரு பிரயாணத்தின் நினைவாக


அது இருந்தது


என் மேஜையில்.


உன் முகம் வீங்க


அறைய வேண்டும் போலிருக்கிறது


இருந்தாலும்-


அது உடைந்துதான் போய்விட்டது.

Comments

Popular posts from this blog