Skip to main content

இன்று உலக கவிஞர்களின் தினம்

துளி - 179







அழகியசிங்கர்







ஒவ்வொருவருக்கும் கவிதை எழுத உந்துதல் வேண்டும்.  எனக்கு வள்ளலார்தான் கவிதை எழுத உந்துதல்.  எளிமையான வரிகளைக் கொண்ட அவர் பாடல்கள் என்னைக் கவர்ந்தன. 

பின் கணையாழி, தீபம் பத்திரிகைகளைப் படிக்கும்போது அவற்றில் பிரசுரமாகும் கவிதைகளையும் படிப்பேன்.

என்ஒன்றுவிட்ட சகோதரர் ஆரம்பித்த மலர்த்தும்பி என்ற சிற்றேடில்தான் என் கவிதைகள் முதலில் அரங்கேறின. அதற்கு முன்பே நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தாலும் எந்தக் கவிதையும் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் ஆகவில்லை.

என் நண்பர் கவிஞர் எஸ்.வைத்தியநாதன் மூலம் ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன்.
 ரா.ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன், ஆனந்த், காளி-தாஸ், ஆத்மாநாம்  போன்ற நண்பர்கள் நட்பு கிடைத்த பிறகு, நான் எழுதிக் கொண்டிருந்த  கவிதைத் தன்மை மாறி விட்டது.

ஆத்மாநாம் மறைவுக்குப் பின் ழ இதழைத் திரும்பவும் கொண்டு வர முயற்சி நடந்தது.  அதில் நானும் பங்கெடுத்துக்கொண்டேன்.

ஆனால் ழ பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை.

எனக்குக் கவிதை போதை ஏறியதால் நான் விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்தேன்.  கடந்த 35 ஆண்டுகளாகக் கொண்டு வரும் இந்தப் பத்திரிகை கவிதை எதுவுமில்லாமல் பிரசுரம் ஆகாது.


நான் இதுவரை 400 கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  ஒரு பெரிய புத்தகம் கொண்டு வரத் தீர்மானித்திருக்கிறேன். 1976ஆம் ஆண்டிலிருந்து  எழுதி வருகிறேன்.  இன்னும் எழுதி வருகிறேன்.

இன்றைய கவிஞர்கள் தாங்கள் கவிதை எழுத வேண்டுமென்று நினைக்கிறார்களே தவிர, இன்னொருவர் கவிதையை வாங்கிப் படிக்க வேண்டுமென்று நினைப்பதில்லை,
இது பெரிய சோகம்.

நான் ஆரம்பத்தில் வள்ளலார் பாடல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது எழுதிய கவிதை ஒன்றை இங்குத் தருகிறேன்.  அதன் பின் என் கவிதை எழுதும் முறை மாறிவிட்டது. இந்த மாற்றத்திற்குக் காரணம் நான் படித்த க.நா.சு, நகுலன், ஞானக்கூத்தன், பிரமிள், போன்ற இன்னும் பலருடைய கவிதைகள் காரணம்.


என்னவென்று சொல்வது


மென்மையாய்ப் பட்டுத் துகில்போல்
வானம்
விரிந்து கிடக்க
என்னருகில் மனத்தின் துயர்
புதர்போல்
எல்லோரிடமும் சண்டைபோட
எல்லோரிடமும் நட்புக்கொள்ள
எல்லாரும்போல்
எனக்குக் கிடைத்த ஆயுதம்
வார்த்தைகள்
எல்லையற்ற மன ஆழத்தில்
என்னையே புரிந்துகொள்ள
முடியாமல் போகும்போது
கேட்பேன் அந்த ரகசியத்தை
துள்ளிப் பறக்கும் பறவைகளிடம்
கண்சிமிட்டும் பூக்களிடம்
விதம்விதமாய் நிறம் காட்டும்
வண்ணத்துப் பூச்சிகளிடம்
எட்டாத தூரத்தில்
ஒளிபிழம்பாய்ப் பிரகாசிக்கும் சூரியனிடம்

  


Comments