Skip to main content

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை





மொழிபெயர்ப்புக் கவிதை


இன்றொரு கவிதை எழுதவேண்டும்

சொல்லும்பொழுதே தாளொன்று

பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று

உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்

விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு

ஒன்பது மணிக்கு குழு வகுப்பு

இரவில் விடைதிருத்தும் வேலை

சிவப்புப் பேனையிலிருந்து வழிவது

மனைவியின் முறைப்பு

செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில்

எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின்

கவிதைத் தலைப்புகளே இங்கு

சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை

கரும்பலகையில் வெண்கட்டி போல

தேய்ந்துபோகும் வாழ்விடையே

கவிதைகள் கைவிட்டு நழுவி

எனக்கே மிதிபட்டு அலறும்

சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன்

இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன்

கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள்

எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன்

மூலம் - திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில்)



Comments