Skip to main content

அவளா இது?




லூசியா. அதுதான் அவள் பெயர். பாத்திரங்களை முறையாக அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் வேறு ஏதோ நினைவில் உழன்று கொண்டிருந்தாள். 'இன்னும் சிறிது நேரத்தில் எட்வர்ட் வந்துவிடுவார்', என்ற எண்ணம் எழுந்ததும், இரவு உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கினாள். பத்தே நிமிடத்தில் மிருதுவான சப்பாத்தியும், மணமணக்கும் குருமாவும் தயார் பண்ணிவிட்டாள். அவற்றை சூடாகவே இருக்கும்படி வைத்துவிட்டு, சோபாவில் சற்றே ஆசுவாசமாக அமர்ந்தாள்.

அவள், இதுவரை தான் வாழ்ந்த வாழ்வை அசை போட்டுக் கொண்டிருந்தாள். அவள் முன் எட்வர்ட், குழந்தைகள், சமையலறை மட்டுமே நிழலாடின. சலிப்பாக உணர்ந்தாள் முதன் முறையாக. 'என் வாழ்க்கை இவ்வளவுதானா?' என்ற நினைப்பு அவளை என்னவோ செய்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

எட்வர்ட் தன் முதல் மனைவி இறந்த பிறகு, மிகவும் சிரமப்பட்டான். அவனால் அலுவலகத்திற்கும் சென்று, ஐந்து மற்றும் மூன்றே வயதான தன் பெண் குழந்தைகளையும் கவனிக்க இயலவில்லை. அந்த நேரத்தில்தான் லூசியாவைச் சந்தித்தான். அவளின் சந்திப்பால் எட்வர்ட் சிறிது ஆறுதல் அடைந்தான். அவன் தன் விருப்பத்தை அன்றே அவளிடம் கூறிவிட்டான், உடன் தன் நிலைமையையும் எடுத்துரைத்தான்.

ஆனால் லூசியாவோ, "உங்கள் குழந்தைகள் விருப்பமும் எனக்கு மிக முக்கியம்." என்று கூறிவிட்டாள். மறுநாளே சந்தித்தான், குழந்தைகளுடன். அவள் அன்பாகப் பேசிய சில நிமிஷங்களிலேயே அவளிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் வயது அப்படி.

வீட்டிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே எட்வர்ட் மனதிலும், குழந்தைகள் மனதிலும் நிலையான ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள் லூசியா. வீட்டை அவ்வப்போது மாற்றங்கள் செய்வது, புதிய வகை உணவுகள் தயார் செய்வது என முழுமையாகத் தன்னை குடும்பத்திற்காக அர்ப்பணித்து விட்டாள். முக்கியமாக குழந்தைகள் கவனிப்பில் அவளை மிஞ்ச அவளேதான். குழந்தைகள் தன்னை 'லூசியா' என்றே அழைக்க பழக்கப்படுத்தியிருந்தாள். இதனால் 'குழந்தைகளுக்கும் தனக்குமுள்ள இடைவெளி குறையும்' என்பது அவள் எண்ணம். தினமும் கதை கூறுவாள். அடிக்க மாட்டாள். ஆனால் கண்டிப்புடன் இருப்பாள். மொத்தத்தில் தங்கள் அம்மாவையே மறக்கச் செய்து விட்டாள். அவர்கள் வளர்ந்து தன் வழியே சென்றபின், எட்வர்ட் மட்டுமே அவளின் உலகமானான்.

'டிங் டாங்'. அழைப்பு மணி ஓசை அவளை இக்காலத்திற்கு மீட்டது. சுயநினைவு வந்தவளாய், உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒரு பொத்தானை அழுத்தினாள். கதவு திறந்தது எட்வர்ட்தான் வந்தான்.

அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே கேட்டாள், "எட்வர்ட், நான் உங்களோடு சிறிது நேரம் பேசலாமா?"

"இது என்ன புதுக் கேள்வி! எப்போதும் நீதான் பேசுவாய். நான் கேட்டுக் கொண்டிருப்பேன். இன்றைக்கு என்ன ஆச்சு?"

அவன் ஹாஸ்யத்தை அவள் ரசிக்கவில்லை.

"இல்லை, என்னைப் பற்றி பேச வேண்டும்."

அவன், அவளை விநோதமாகப் பார்த்தான். 'இன்று இவளுக்கு என்ன ஆச்சு' என்ற விநோதப் பார்வை.

"சரி, சொல்லு." என்றான் எட்வர்ட், மனதில் ஆயிரம் கேள்விகளுடன்.

"எட்வர்ட், நான் என் வாழ்நாளை வீணடித்து விட்டதாக உணர்கிறேன்."

அவளை ஆழமாகப் பார்த்தான். இன்று லூசியா, அவளாகவே இல்லை என்பது போலப் பார்த்தான்.

"எனக்கு நீங்கள், குழந்தைகள், சமையலறைத் தவிர வேறு ஒன்றுமே என் வாழ்கையில் இல்லை. இத்தனை நாள் இப்படி, எப்படி இருந்தேன் என எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களோடு 20 வருடம் வாழ்ந்து விட்டேன். ஆனால் அதனால் நான் சாதித்தது என்ன?........." அவள் பேசிக் கொண்டே போனாள்.

அவள் பேச்சு அவன் காதில் விழவில்லை. லூசியா எப்படி இப்படி மாறினாள் என அதிசயித்தான். இத்தனை நாள் தன்னைப் பற்றி சிந்திக்காமல் இப்போதாவது சிந்தித்தாளே என்று மகிழ்ந்தான். ஆனால் அடுத்த நொடி சற்றே நிதானித்து விழித்துக் கொண்டான்.

அவர்களின் முதல் சந்திப்பின் போது நிகழ்ந்த உரையாடல் ஞாபகமாக ஞாபகத்திற்கு வந்தது.

"உன் பெயர் என்ன?"

"லூசியா, உங்கள் பெயர்?"

"எட்வர்ட். உன் வயது?"

"ஆறு."

'அப்படியானால் இவள் வயது இப்போது இருபத்தி ஆறு. எப்படி மறந்தேன் இதை. அவளின் அன்பின் பிடியில் மறந்து விட்டேன் போலும். இனியும் தாமதிக்கக் கூடாது. ஏற்கெனவே ஒரு வருடம் தாமதமாகிவிட்டது. இது ஆபத்தின் அறிகுறி.'

சட்டென்று தன் லேசர் பேனாவை கீழே போட்டான். அதை எடுப்பது போல் கீழே குனிந்தான்.

அவளின் கெண்டைக் காலில் மச்சம் போன்ற ஒன்று இருந்தது. சட்டென அதை அழுத்தினான்.

"எட்வர்ட், என்ன செய்கிறாய்?" பதட்டமானாள். அவன் பிடியை விடவில்லை.

"விடு என்...." பேச்சிழந்தாள்.

அதன் பிறகும் ஒரு நிமிடம் கழித்தே தன் பிடியை விட்டான். 'அப்பாடா' என்றிருந்தது அவனுக்கு.

அவன் அவளை, இல்லை, அதைத் தூக்கி ஓரமாக நிறுத்திவிட்டு அவளை வாங்கிய இடத்திற்கு போன் போட்டு 'Switch Off' செய்து விட்டதை கூறினான்.

சோபாவில் கண்மூடி சாய்ந்தான். 'லூசியாவை பிரியணும்' என்ற எண்ணம் அவனை வதைத்தது. 'ஆனாலும் லூசியா இல்லாவிட்டால் என்ன, வேறு ஒரு ஃபெல்சியாவோ, ஆசியாவோ வரப் போகுது. செய்யும் வேலைகள் ஒன்றுதானே', என்று சமாதானமானான்.

ஆனாலும் ஒரு ரோபோ எப்படி இருபத்தைந்து வருடங்களில் சுயமாக சிந்திக்க ஆரம்பிக்கிறது என்பது அவனுக்கு மட்டுமல்ல, பலருக்கும் இன்னும் அது புரியாத புதிராகவே இருக்கிறது, இந்த 24ஆம் நூற்றாண்டிலும் கூட.


Comments