Skip to main content

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......6


இந்தத் தொடரில் நான் பிரமிளைப் பற்றி எழுதுகிறேனா விசிறி சாமியார் பற்றி எழுதுகிறேனா அல்லது என்னைப் பற்றி எழுதுகிறேனா?


விசிறி சாமியாரைப்போல் அட்டகாசமான சாமியாரை நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கு முதலில் திகைப்பாக இருந்தது சிகரெட் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் சாமியாரைப் பார்த்து. பின் வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும் மாலைகளைப் பார்த்து திகைப்பாக இருந்தது. மாலைகள் முழுவதும் தூசிகள் நிரம்பி வழிந்தன. அவர் கட்டளை யார் யார் எங்கே உட்கார வேண்டும். நான் போய் முன்னால் உட்கார முடியாது. சாமியார் கட்டளை இடுகிறார் பிரமிள்தான் முதலில் உட்கார வேண்டுமென்று. அடுத்தது லயம் சுப்பிரமணியன். மூன்றாவதுதான் நான். அந்தப் பகுதியிலிருந்து நான்தான் முதல். ஆனால் பிரமிள்தான் அவர் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டிருந்தார். அடிக்கடி முதுகில் ஷொட்டுகளை வாங்கிக்கொண்டு.


ஏன் சாமியார் இதெல்லாம் செய்கிறார் என்று எனக்குத் தோன்றாமலில்லை. ஆனால் இது ஒரு விளையாட்டு மாதிரி தோன்றியது. சாமியார் ஒரே நிமிஷத்தில் என் மூடை மாற்றுகிற காரியத்தைச் செய்தார். அவர் கையில் வைத்திருந்த Passingshow சிகரெட் தீர்ந்து விட்டது. பிரமிள் சிகரெட் வாங்கி வரட்டுமா என்று கேட்டார். சாமியார் சரி என்றார். பிரமிள் உடனே என்னைப் பார்த்து சிகரெட் வாங்க பைசா கொடுங்கள் என்றார். பிரமிளிடம் பைசா இல்லை. அவரை திருவண்ணாமலைக்கு அழைத்துப் போகும் செலவை நான் ஏற்றக்கொண்டிருந்தேன்.


நானும் உற்சாகத்துடன் சிகரெட் வாங்க சாமியாரிடம் பணத்தை நீட்டினேன். ஆனால் சாமியாரோ என்னிடமிருந்து சிகரெட் வாங்க மறுத்துவிட்டார். இன்னொன்றும் சொன்னார். சிகரெட் வாங்கும் பணத்தை பிரமிளிடம் கொடுக்கச் சொன்னார். நானும் சாமியார் சொன்னபடி பிரமிளிடம் கொடுத்தேன். பிரமிள்தான் என்னிடம் வாங்கிய பணத்தை சிகரெட் வாங்க சாமியாரிடம் கொடுத்தார்.


அந்த நிகழ்ச்சி நடந்தபிறகு நான் சாதாரண நிலையில் இல்லை. ஏன் சாமியார் என்னிடமிருந்து பணத்தை வாங்க மறுத்தார் என்ற கேள்வி என்னை குடை குடையென்று குடைந்துகொண்டிருந்தது. என் முகம் வாடிவிட்டது. நான் எப்போதும் போல் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு என் நண்பர் எஸ் சண்முகத்திடம் இந்தச் சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அவர் சாமியாரும் சிபிஐக்காரர்களும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். நம் மூளையை அவர்கள் முன்னதாக நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார்கள். முளைக்கு ஒரு அதிர்வை ஏற்படுத்துவது அவர்கள் வழக்கம். உங்கள் இயல்புநிலையை சீர்குலைக்கும் உத்தியாகக் கூட இருக்கும் என்று கூறியதாக ஞாபகம்.


சாமியாருக்கு உதவி செய்யும் பையன் ஒருவன் அவருக்கு சிகரெட் வாங்கி வந்தான். பிரமிள் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இன்னொன்று சொல்லியிருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி ஒருவரைத் தொட்டால் ஒன்றுமில்லை. ஆனால் நாம் கிருஷ்ணமூர்த்தியைத் தொடக்கூடாது. அப்படி தொட்டால் நமக்கு எதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகு விசிறி சாமியார் மீதுள்ள என் மரியாதை கொஞ்சங்கூட குறையவில்லை.


இந்தச் சம்பவம் நடந்த பிறகு சாமியார் எல்லோருக்கும் கொய்யாப்பழத்தைப் பிண்டு கொடுத்தார். முதலில் எனக்குத்தான் கொடுத்தார். எனக்கு கொய்யாப்பழம் என்றால் ரொம்பவும் உயிர். நான் விரும்பி சாப்பிடும் பழங்களில் இதுவும் ஒன்று. எப்படி சாமியாருக்கு எனக்குத்தான் முதலில் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினேன்.


(இன்னும் வரும்)

Comments

வழக்கம் போல இந்தத் தொடர் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது ... தொடருங்கள்
தொடர் நல்லா வருதுங்க. எனக்குப் பிடித்த பிரமிள் பற்றி பல அறியாத தகவல்கள் வருவதில் மகிழ்ச்சி. தொடருங்கள்