Skip to main content

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......5




பிரமிள் எண் கணிதம் என்று சொல்வதை விசிறி சாமியார் வேறுவிதமாக சொல்கிறார் என்று தோன்றியது.ஆனால் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. பேசிக்கொண்டே இருக்கும்போது விசிறி சாமியார் எங்கள் மூவருக்கும் பால் கொடுத்தார். ஒரு தம்ளரில்தான் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.. நடுவே நடுவே Passingshow சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். விசிறி சாமியார் தெய்வத்தின் குரல் என்கிற புத்தகத்தை பிரமளிடம் கொடுத்து ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படிக்கும்படி கூறினார். பிரமிள் பயப்பக்தியுடன் எடுத்துப் படித்தார். திடீரென்று பிரமிள் முதுகில் ஒரு ஷொட்டு. பிறகு அவருடைய கையை வெகுநேரம் பிடித்துக் கொண்டிருந்தார். எனக்கோ இதெல்லாம் ஆச்சிரியமாக இருந்தது. நடுவில் அமர்ந்திருந்த லயம் சுப்பிரமணியம் எந்தவித சலனத்தையும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். நானோ அவர்கள் பேசுவதைக் கேட்டு பரவசம் அடைந்து விட்டேன். ''பேசுவது ரொம்ப interesting ஆக இருக்கிறது,'' என்று வேறு சொன்னேன்.


இப்போது ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இருவரும் பேசினார்கள். அந்தக் காலத்தில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஜே கிருஷ்ணமூர்த்தியால் கெட்டுப் போனார்கள். நாராணோ ஜெயராமன் (வேலி மீறிய கிளைகள்) கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டார். யார் எது எழுதினாலும் ஜே கிருஷ்ணமூர்த்தியை மீறி எழுதிவிட முடியாது என்று என்னிடம் கூறுவார். பிரமிள் கூட ஜே கிருஷ்ணமூர்த்தியால் கெட்டு விட்டார் என்று எனக்குத் தோன்றும்.

விசிறி சாமியாரும், பிரமிளும் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த அனுபவத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். முதலில் விசிறி சாமியார், ''இந்தப் பிச்சைக்காரன் ஒரு முறை, அப்பாய்ண்ட்மென்ட் எதுவும் இல்லாமல் வசந்த் விஹாரில் தங்கியிருந்த ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போனேன்...அங்குள்ளவர்களிடம் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். முன்னதாக அப்பாண்ட்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாது என்று பார்க்க விடாமல் தடுத்து விட்டார்கள். அப்போது ஜே கிருஷ்ணமூர்த்தி மாடிப்படியிலிருந்து இறங்கிநடந்து வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் ஒரு முறை பார்த்தார். பின் என் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டுச் சென்றுவிட்டார்,'' என்று கூறினார் விசிறி சாமியார்.

உடனே பிரமிள், ''நானும் ஒருமுறை என் வாழ்க்கையில் தாங்க முடியாத பிரச்சினையாக இருந்தபோது, ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போனேன். என்னிடம் வாழ்க்கையைப் பற்றி கேட்க ஏகப்பட்ட கேள்விகள் வைத்திருந்தேன். அவரை தனியாக சந்திக்க வேண்டுமென்று அனுமதி கேட்டேன்... அனுமதி தந்தார்கள். உள்ளே நுழைந்து கிருஷ்ணமூர்த்தி முன் அமர்ந்தேன். ஒருமுறை அவர் என்னை உற்றுப் பார்த்தார்...என்னமோ தெரியவில்லை...நான் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை...என் பிரச்சினைகள் எல்லாம் முடிந்துவிட்ட மாதிரி தோன்றியது. நான் அவரிடம் எதுவும் பேசவில்லை,'' என்றார்.

என் நண்பன் ஒருவன் கிருஷ்ணமூர்த்தி பேச்சைக் கேட்டுவிட்டு வரும்போது எக்ஸ்பிரஸ் காப்பி குடித்த மாதிரி இருக்கும் என்பான். பின் அதன் effect போய்விடும் என்பான். பிரமிள் வேடிக்கை. ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும் மாலை மயிலாப்பூரிலுள்ள ஷீரிடி சாய்பாபா கோயிலுக்குப் போவார். அதேபோல் சனிக்கிழமை கிருஷ்ணமூர்த்தி வீடியோ பேச்சைக் கேட்க மாலை வந்துவிடுவார். இதை ஒரு கடமைபோல் செய்து கொண்டிருந்தார்.
(இன்னும் வரும்)

Comments

வழக்கம் போல இந்தத் தொடர் எனக்கு விருப்பமானதாக இருக்கிறது