Skip to main content

துளி - 72 தீபாவளி மலரும் நானும்...4


அழகியசிங்கர்



கடந்த சில தினங்களாக ஒரு தீபாவளி மலரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  அது ஆனந்தவிகடன் தீபாவளி மலர்.  அதில் நகுலன் சிறுகதை இருந்தது.  காவ்யா ஷண்முகசுந்தரத்திற்குக்கூட அந்தக் கதையைப் பிரதி எடுத்து நகுலன் சிறுகதைகளுடன் சேர்க்க அனுப்பியிருந்தேன்.  அந்தத் தீபாவளி மலரை என் நண்பர் கொடுத்திருந்தார்.  அது இப்போது காணும்.  

நகுலன் சிறுகதையை வாங்கிப் பிரசுரம் செய்திருக்கிறார்களே என்று நினைத்தேன்.  ஒவ்வொரு தீபாவளி மலரிலும் நான் முதலில் விரும்பிப் படிப்பது தலையங்கள்.

2019ல் வெளிவந்த அமுதசுரபி தீபாவளி மலரில் எனக்குப் பிடித்த தலையங்கத்தின் ஒரு பகுதி :

'உயர்ந்த ஆன்மிகவாதியின் மனத்தில் பிறமத விரோதம் கடுகளவும் இராது.  அப்படிப்பட்ட மிக உயர்ந்த ஆன்மிகவாதியாய்த் திகழ்ந்ததால் தான் நம் தேசப்பிதாவால் üரகுபதி-ராகவ ராஜாராம்' என்று சொன்னதோடு ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று சேர்த்துச் சொல்ல முடிந்தது.'

லேடீஸ் ஸ்ஷெல் தீபாவளி மலரில் அதன் ஆசிரியர் இப்படி எழுதியிருக்கிறார். 

'லேடீஸ் ஸபெஷல் தீபாவளி மலர் என்னைப் பொறுத்தவரை ஒரு லட்சியக் கனவு.  மராத்தான் ஓட்டம்.  ஒவ்வொரு வருடமும் முதல் மலரை எடுத்துக்கொண்டு போய் என் தந்தையிடம் காட்டுவேன்.  கஷ்டப்பட்டு தன் மகள் சாதித்திருக்கிறாள் என்பது மட்டும் புரிந்து சந்தோஷப்படும் அவர் இந்த வருடம் இல்லை.'

தினமணி தீபாவளி மலரில் : 'ஏதாவது ஒரு ஏழைக் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தக் குழந்தைகள் புத்தாடை உடுத்தி, வயிறார உண்டு மகிழ்ச்சியாகப் பட்டாசு வெடித்து மகிழ்வதையும் உங்களது தீபாவளிக் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக்குங்கள் என்பதுதான் இந்த ஆண்டும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள்.'

இந்த ஆண்டு மூன்று தீபாவளி மலர்கள்தான் என்னிடம் உள்ளன.  இந்த மூன்று தீபாவளி மலர்களில் நான் மதிக்கும் தலையங்கம் தினமணி தீபாவளி மலரில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்.   
 

Comments