Skip to main content

மையம்

நிர்மாலியப்படாத பூக்கள்
தெய்வத்தின் திருமேனியை
அலங்கரிக்கும்
பால் வற்றிப் போன
தாயின் முலை சப்பும்
குழந்தை
பள்ளிக் கூட வாசலில்
வியாபாரியின் கைபட்டவுடன்
புதுப்புது வடிவெடுக்கும்
பஞ்சுமிட்டாய்
ஏனோ சிறுவர்களை
ஈர்க்கும்
வாழை இலை அசைவைப்
பார்த்து
பயந்து போன சிநேகிதன்
ஜுர வேகத்தில்
உளறிக்கொண்டிருந்தான்
பேயைப் பார்த்ததாக
சிட்டுக் குருவியின் சீண்டல்களைப்
பார்த்து செவ்வந்தியின் மனம்
சிறகடிக்கும்
அந்தி நேரம்
கணவனின் வருகைக்காக
முகம் கழுவி பவுடர் பூசி
வாசலில் காத்திருக்கும்
தோப்புக்காரன்
தேங்காய் தலையில் விழுந்து
கபாலம் சிதறி
இறந்து போனான்
உச் கொட்டிய கூட்டம்
தேங்காய் சிரட்டை கூட
ஈயமாட்டாரு
போறப்ப என்னத்த
எடுத்துகிட்டு போனாரு
என்றது.

Comments

ஒவ்வொரு வார்த்தைகளிலும் வலிகள் நிரம்பி நிற்கிறது .