Skip to main content

சில க.நா.சு கவிதைகள்

போ

எட்கார் ஆலன் போவின் கதைகளைப் படிக்கும்போது
மிகவும் உஷாராகத்தான் படிக்க வேண்டியதாக இருக்கிறது.
ஏதாவது ஒரு வார்த்தையின் இடத்தையும் அர்த்தத்தையும்
கவனிக்காமல் விட்டு விட்டால், அவன் என்னதான் சொல்ல
வருகிறான் என்பது தெரியாமலே போய் விடுகிறது. இத்தனைக்கும்
அவன் எழுதியதெல்லாவற்றையும் பத்திரிகைத் தேவைக்காக
அவசர அவசரமாக எழுதினான் என்றுதான் தெரிகிறது.
கவனமாகப் படிக்காவிட்டால் அவன் அர்த்தப்படுத்துவதற்கு
எதிர் மறையாக வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ள
ஏதுவாகியிருக்கிறது. லிஜீயா என்கிற கதையில் அவன்
தனது இரண்டாவது மனைவியைக் கொன்றானா; ஆகாயத்
திலிருந்து கொட்டிய விஷத்துளிகள் மனப்பிராந்தியா
உண்மையின் எதிரொலியா பிரதிபலிப்பா என்று
கண்டுகொள்ள முடியாமல் திணறிப் போவோம்.
தன் கூடப்பிறந்தவனைக் கொன்றானா? யாரையோ
நட்புடன் உயிரோடு புதைத்து சாக விட்டுவிட்டு
தான் செய்த தவறுக்குத் தண்டனை வேண்டி
நின்றானா?-கவனித்துப் படித்தால்தான் தெரியும்
வேறு விதமாகவும் பதினாறு விதங்களாகவும்
அர்த்தப்படுத்திக்கொள்ள அவன் உபநிஷத்துக்கள்
எழுதினானா? வெறும் கதைகள்தான் எழுதினானா?
போவின் எழுத்துக் கலையின் பூர்ணத் தன்மை
உனக்குப் புரிகிறபோது இலக்கியத்தின் அமைதியும்
அமைதியின்மையும் பலித்து விட்டதுபோல
ஒரு நினைப்பு ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Comments

Popular posts from this blog