Skip to main content

ஜானகிராமனை கொண்டாடுவோம்....

அழகியசிங்கர்







இந்த ஆண்டு ஜானகிராமனின் நூற்றாண்டு.  அவரை  கதைகள்  சில படித்து விட்டு எழுதியிருக்கிறேன்.  சமீபத்தில் ' மரப்பசு நாவலைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

நான் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த 'அம்மா வந்தாள்' நாவலைப் பற்றியும் 'மோக முள்' நாவலைப் பற்றியும் ஒரு வாசகனாகப் படித்திருக்கிறேன் என்பதால் எதுவும் எழுதவில்லை.  அவருடைய நூற்றாண்டு முடிவதற்குள் அவருடைய நாவல்கள் எல்லாவற்றையும் படித்து விட்டு எழுத எண்ணம்.

நூறு பக்கங்கள் வரை ஒரு புத்தகம் கொண்டு வர எண்ணம்.  இப்போது  'கங்கா ஸ்நானம்' என்ற கதையைப் பற்றி எழுதியதை இங்குத் தருகிறேன். 

1956ல் எழுதிய 'கங்கா ஸ்நானம்' என்ற கதையிலிருந்து 70 கதைகள் கொண்ட தொகுப்பைப் படிக்கும்போது, எனக்கு மலைப்பே ஏற்பட்டது.  முழு தொகுப்பை என்னால் படித்து முடிக்க முடியவில்லை.  ஆனால் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் 200 பக்கங்களைத்தான் படிக்க முடிந்தது.

அத்தனைக் கதைகளிலும் அடிநாதமாக ஒரே ஒரு விஷயத்தைத் திரும்ப, ஜானகிராமன் சொல்லிக்கொண்டே போகிறார்.  மனித உறவுகளிடையில் உண்டாகும் üதுரோகம்ýதான் அவர் சிந்தனையில் பெரும் பங்கு வகித்துள்ளது.  அத் துரோகத்தை விதம்விதமாக விவரிப்பதில், பெரிய சாதனையாளராக உள்ளார்.
 
துரோகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் கதைகள் எழுதினாலும், ஏமாற்றுபவர் ஏமாற்றப்பட்டவர் என்ற இரண்டு முனைகளில் ஏமாற்றப்பட்டவர் சாத்விகமான முறையில், துரோகத்தை ஏமாற்றத்தை எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாமல் ஏற்றுக்கொள்வது இவர் கதையின் உத்தி.   ஆனால் விதிவிலக்காக சில கதைகளில், ஏமாந்தவர், வேறுவிதமாகவும், ஆனால் பழி தீர்க்கப்பட்டது என்ற உணர்வு வெளியே தெரியவராமல், செயல்படவும் செய்கிறார்.

உதாரணமாக, 1956 ஆம் ஆண்டு எழுதிய  'கங்கா ஸ்நானம்" என்ற கதையில், துரைய்யாவை சின்னசாமி கங்கையில் சந்திக்கிறார்.  இதில் சின்னசாமி துரைய்யாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்.  உண்மையில் சந்திப்பு நடக்கவில்லை.  துரைய்யா தங்கியிருக்கும் இடம் தெரிந்து, சந்திப்பு நிகழ்ந்துவிடக் கூடாதென்ற பதைப்பு சின்னசாமியிடம் ஏற்படுகிறது.  சின்னசாமி திருப்பித்தர வேண்டிய பணத்தைக் கொடுத்தும், கொடுக்கவில்லை என்று சாதித்தவர் துரையப்பா.  மேலும், பணத்தைப் பெற சின்னசாமி மீது கோர்ட்டில் வழக்குத் தொடுத்து பணத்தை வலுக்கட்டாயமாகப் பெற்று விடுகிறார்.  இது சின்னசாமி மனதில் ஏற்பட்டுள்ள மாறாத வடு.  அவமானம்.  இந்த üதுரைய்யப்பாýவை சந்திக்காமல், அவர்கள் இருந்த இடத்தை காலி செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது.  இக் கதையில் வெளிப்படுகிற துரோகத்திற்குத் தீர்வாக, சின்னசாமி மனைவி அளிக்கிறாள் தீர்ப்பு.

"அவன் பாவத்துக்கும் சேர்த்து முழுக்குப் போடுங்கோ," என்பதுதான் தீர்ப்பு.

இக் கதையில் முரண்பாடாகத் தெரிவது துரைய்யாவின் பாத்திர அமைப்பு.  கதையில் முன் பகுதியில் துரையப்பாவைப் பற்றிப் பேசும்போது, இப்படி எழுதப்படுகிறது.  'துரையப்பா பெரிய மனுஷன்.  பெரிய மனுஷ்யன்தான் எவ்வளவு மரியாதை....விட்டுக் கொடுக்கிற தன்மை.  சாயங்காலம் சின்னசாமி பஸ்ஸிலிருந்து விளாஞ்சேரி முக்கில் இறங்கி வந்தபோது துரைய்யாவின் அன்னதானத்தைப் பற்றித்தான் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  யார் எப்போதும் போனாலும் துரைய்யா வீட்டில் சாப்பாடு கிடைக்கும்.  'அன்னதாதா, அன்னதாதா' என்று அவர் பெயர் ஜில்லா முழுவதும் சுற்றம் முழுவதும் முழங்கிக் கொண்டிருக்கும்.  எப்போது ரயிலில் போனாலும் அதைப்  பற்றிப் பேசுகிற ஒரு பிரயாணியாவது பார்க்க முடியும் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற துரைய்யா, இறுதியில் சின்னசாமியை ஏமாற்றுகிறார்.  இது மாதிரி பல கதாபாத்திர முரணைý கதைகளில் வெளிப்படுத்துகிறார் தி ஜானகிராமன்.  'வீடு'என்ற ஒரு கதை.  

இது சற்று நீளமான கதை.  குறுநாவல் என்று சொல்லலாம்.  ஜானகிராமன் நாவல்களைப் படித்த அனுபவத்தில், இக் கதை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்கப் போகிறாரென்பது தெரிந்து விடுகிறது.  வாசகனை முதலில் அவர் வீடு விற்கத் தயாராக இருப்பதுபோல் காட்டுகிறார்.  ஆனால் கதை வீடு விற்பது பற்றையல்ல.  மகாதேவன் என்பவன் நயமாகப் பேசி டாக்டரின் கம்பவுண்டராகச் சேர்கிறான்.  காம்பவுண்டராக மட்டுமல்லாமல், அவர் வீட்டிற்கு எல்லா உதவிகளையும் செய்கிறான்.  அவன் உதவிகளைக் கொண்டு புளாங்கிதம் அடைகிறார் டாக்டர்.  ஆனால் அவர் மனைவியிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்கிறான்.  இதை அறிந்த டாக்டர், அவனை நையப் புடைத்து, உதைத்து அனுப்புவதற்குப் பதிலாகப் பூடகமாகத் துரத்தி விடுகிறார்.  அவர்களுடைய கள்ள உறவு வெளிப்படையாகத் தெரியும்படி வருகிறது.  டாக்டரின் மனைவி அவரை விட்டுப் போக விரும்புகிறாள்.  டாக்டரிடம், வீட்டையும், சாப்பிட எதாவது ஏற்பாடு செய்யும்படி கேட்கிறாள்.  டாக்டர் மறுத்து விடுகிறார்.  அவர் இருக்கும்வரை இந்த வீட்டில் இருக்க வேண்டுமென்று சொல்கிறார்.  வீட்டை விற்றுவிடுவதாகச் சொல்பவர், கடைசி வரை வீட்டை விற்காமலிருக்கிறார்.  இறுதியில் மகாதேவனுடைய சாவுடன் கதை முடிவடைகிறது.  இக் கதையில் மூவரும் ஒவ்வொரு விதத்தில் பழிவாங்கப் படுவதாகப் படுகிறது.  துரோகத்திற்கு எதிராகத் துரோகம் செயல்படுகிறது.  சங்கிலித் தொடர் மாதிரி துரோகம் எல்லோரையும் பிணைத்து விடுகிறது.  வெளிப்படையாக இல்லாமல், பூடகத்தன்மையுடன் கதையை எடுத்துச் செல்வதில் ஜானகிராமன் வெற்றி பெறுகிறார்.

ஜானகிராமன் எழுத்து நடை கு ப ராஜகோபாலனிடமிருந்து ஸ்வீகரித்த நடை.  கதை பாணியும் கு ப ராவைப் போல் பூடகத்தன்மை வாய்ந்தது.  ஜானகிராமன் குபாராவிற்குப் பிறகு வளர்ந்த ஒரு பெரிய எழுத்தாளர்.  பலவிதங்களில் சாதனைப் புரிந்தவர்.  இன்றைய படைப்பாளிகளுக்கு அவர் எழுத்து நடையின் மிடுக்கு இப்போது படிக்கும்போது கூட ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.  அவர் கதைகளில் எல்லாவற்றையும் வெளிப்படையாக எடுத்துப் போடுவதல்ல.  மனித உள்ளம் எப்படிச் செயல்படுகிறது என்பதுதான் அவருடைய ஆராய்ச்சி.  அதாவது, மனிதனின் 'உள்முரணை' வெளிப்படுத்துவதுதான் கதையின் வெற்றியாகக் கொண்டு வருகிறார்.

இன்று ஜானகிராமனின் வாசகராக இன்றும் பல எழுத்தாளர்கள் தோன்றி உள்ளார்கள்.  உதாரணமாகப் பாலகுமாரனைச் சொல்லலாம்.  ஜானகிராமனைப் படிக்கும்போது, ஒருவித உற்சாகம் ஏற்படுகிறது.  üஇவ்வளவு எழுதி இருக்கிறாரேý என்ற உற்சாகம்தான் அது.

Comments