Skip to main content
காஞ்சனா
 
புதுமைப்பித்தன்

இரண்டொரு வருஷயங்களுக்கு முன் அயல் நாட்டு இலக்கியாசிரியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.   இந்திய பாஷை இலக்கியங்களைப்பற்றி அறிந்துகொண்டு போக அவருக்கு ஆசை.    இப்படி இங்கு வந்து சேருகிற மற்றவர்களைப் போல இல்லாமல் அவர், அவசரப்படாமல். நிதானமாக, நின்று, ஆர்வத்துடன், பல விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்ள முயன்றார்.  வசதியும், தகுதியுமுள்ளவராக இருந்தார் அவர்.   பல பேச்சுக்கிடையில் அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்.   üüபொதுவாக இந்தியா பூராவிலுமே, சிறப்பாகத் தமிழில், பழமை என்று ஒன்று தப்ப முடியாத ஆட்சி செலுத்துகிறது என்பது தெளிவவாகத் தெரிகிறது.  எங்கள் இலக்கியங்களில் எங்கள் அனுபவம் என்னவென்றால்,  பழமையின் பிடி மென்னியைப் பிடிப்பதாகவும் இருக்கக் கூடாது ; நழுவிவிடக்கூடியதாகவும் இருக்கக் கூடாது ; இன்றைய இலக்கியத்தில்  பழமையின் சாயை இருக்கத்தான் வேண்டும்.  ஆனால், அதுவே புதுமைக்கு  அனுசரணையாகவும் இருக்க வேண்டும்.  பழமையே புரட்சிகரமானதாக இருக்கலாம். அந்தமாதிரி எழுத்து ஏதாவது உங்களிடையே உண்டா?"
 

  "உண்டு" என்று சொல்லிவிட்டுச் சிறிது தயங்கினேன் நான்.  பிறகு சொன்னேன் ; "ராமாயணக் கதை உங்களுக்குக் கூட ஓரளவு தெரிந்திருக்கும்.  விசுவாமித்திரருடன் அயோத்தியை விட்டுக் கிளம்பிய ராமன், மிதிலை போகும் வழியிலே  ஒரு கல்லை மிதிக்கிறான்.  அக்கல், கௌதமனின் சாபம் பெற்ற அகல்யை.  ராமன் பாத தூளியினால் அகல்யை சாப விமோசனம் அடைகிறாள்.  ராமனுக்குக் கல்யாணமாகிறது.    அயோத்தியில் பட்டாபிஷேக ஏற்பாடுகளுக்கு மத்தியிலே,  ராமனும் சீதையும், லக்ஷ்மணனும் காட்டுக்குப் போகிறார்கள்.  ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனான்.  போர் புரிந்து ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ராமன், உலக அபவாதத்துக்குப் பயந்து, சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொல்கிறான்.   பிறகு அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான்.  ஒருநாள் ராமனும், சீதையும் கௌதமரின் ஆசிரமத்துக்குக் கிளம்பினார்கள்.  அங்கே கல்லாயிருந்து பெண்ணான அகல்யை, சீதையின் வாயைக் கிண்டுகிறாள்.  வனவாச அனுபவம், லங்கா வாசம் முதலியன பற்றிக் கேட்டறிந்து கொள்கிறாள் அகல்யை.  கடைசியாகத் தன்னை ராமன்  அக்கினிப் பரிûக்ஷ செய்ததையும் சொன்னாள் சீதை, "உன்னையா?" " ராமனா?" என்று கேட்ட அகல்யை மீண்டும்  கல்லானாள் என்று எங்களுடைய இன்றைய கதாசிரியர்களில் ஒருவர் கதை எழுதியிருக்கிறார்.    நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் இதில் இருக்கிறது." என்றேன்.

  கதையை மனசில் வாங்கித் தெரிந்து கொள்ள அந்நிய நாட்டு இலக்கியாசிரியருக்குச் சிறிது நேரம் பிடித்தது.  பிறகு அவர் சொன்னார் ; "இந்தப் பிரச்சினையை மஹா கவி வால்மீகியே நியாயப்படித் தீர்த்துவைத்திருக்க வேண்டும்.    தன்மனைவிக்கு ஒரு நீதி, பிறன் பெண்டுக்கு ஒரு நீதி என்று லக்ஷிய புருஷனாகிய ராமனே நினைத்ததாக முடிவு ஏற்படும்படி அவர் விட்டது தவறுதான்." பிறகு கேட்டார் ; "அந்தக் கதையின் ஆசிரியர் பெயர் என்ன?" என்று.

 "புதுமைப்பித்தன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்ட ஒருவர்.  அவர் இயற்பெயர் விருத்தாச்சலம்," என்றேன் நான்.   தொடர்ந்து சொன்னேன் ; "இவ்வளவு தெளிவாக உங்களுக்குத் தெரிந்துவிட்ட விஷயம் எங்கள் பெரியவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் விளங்கி விடுவதில்லை.  ஆதி கவி அப்படி எழுதவில்லை ;  இந்த புதுமைப்பித்தன் யார் சுண்டைக்காய் என்று சண்டைக்கே வந்து விடுவார்கள்.   ஆனால், அது என்னவானாலும் இன்றுள்ள சிருஷ்டிகர்த்தாக்கள் பழமைபற்றிக் கொண்டுள்ள நோக்கம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்றே எண்ணுகிறேன்."

 புதுமைப்பித்தனின் கதைத் தொகுதிகளில் ஒன்றான காஞ்சனை என்கிற தொகுதியில் உள்ள கதைகளில் ஒன்று மேலே கூறிய "சாப விமோசனம்", அற்புதமான கதை ; அற்புதமான உருவத்தில் விழுந்திருக்கிறது.  இந்தத் தலைமுறையின் சிறந்த சிறு கதைகளில் அது ஒன்று என்பது என் அபிப்பிராயம்.  அது வெளிவந்ததிலிருந்து இன்று வரை அந்தக் கதையை மட்டும் நான் இருபது தடவையாவது படித்திருப்பேன்.  படிக்குந்தோறும் படிக்குந்தோறும் புதிது புதிதாக இன்பம் தரும் கதை அது.   இப்படித் திரும்பத் திரும்பப் படிக்கக்கூடிய கதைகளும் நூல்களுமே நல்ல கதைகளும் நூல்களுமாகும் என்று சொல்வதில் தவறு என்ன?

  புதுமைப்பித்தன் தமிழில் இருநூறுக்கும் அதிகமாகவே கதைகள் எழுதியிருக்கிறார்.  எல்லாக் கதைகளுமே ஒரே தரத்தவை என்று சொல்லமுடியாது எனினும் ஒரு முப்பதுக்குமேல் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார்.  அவற்றில் ஒரு பத்தாவது காலத்தால் சாகாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

 காஞ்சனை என்கிற இந்தத் தொகுதியிலேயே இன்னொரு கதையைப் பார்க்கலாம்.  இது வேறு ஒரு தினுசான கதை.

"வீரபாண்டியன் பட்டணத்துச் சுப்பையா பிள்ளை, ஜீவனோபாயத்துக்காகச் சென்னையை முற்றுகையிட்ட போது சென்னைக்கு மின்சார ரயிலோ, அல்லது மீனம்பாக்கம் விமான நிலையமோ ஏற்படவில்லை.  மாம்பலம் என்ற செமண்டு கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது.   தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்" என்று தொடங்குகிறது கதை.  "பவள்க்காரத் தெருவில், திருநெல்வேலிவாசிகளின் சுயஜாதி அபிமானத்தைக் கொண்டு வளர்ந்த தனலட்சுமி புரோவிஷன் ஸ்டோர்ஸ், பிற்காலத்தில் தனலட்சுமி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடையாக மாறியது.  தேசவிழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை  இயக்கமும், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரஹமும், சுப்பையாப் பிள்ளையின் வாழ்க்கையிலோ மனப் போக்கிலோ மாறுதல் எதுவும் ஏற்படுத்தவில்லை.  வீரபாண்டியன் பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார்.  ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் எல்லாம் சேர்ந்த உருவம் சுப்பையா பிள்ளை.  மின்சார ரயில் அவர்  வாழ்வில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது.  அவர் தாம்பரத்தில் குடியேறினார்.  தினம் மின்சார ரயில் பயணம் அவசியமாயிற்று.....விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம், பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ் வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லரைýý  இவற்றுடன் பவளக்காரத் தெருவுக்குக் கிளம்புவார்.  "இரவு கடைசி வண்டியில் காலித்தூக்டகுச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லரை, பசி, கவலை-இவற்றுடன் தாம்பரத்துக்குத் திரும்புவார்."

சுப்பையா பிள்ளையின் நிறைந்த இந்த வாழ்வில் இன்னொரு நிறைவு அனுபவமும் புகக் காத்திருந்தது.  மாம்பலம் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு மின்சார ரயிலில் ஏறினாள் ஒரு பெண்மணி.  சுப்பையா பிள்ளை உட்கார்ந்திருந்த ஆஸனத்துக்கு எதிர் ஆஸனத்தில் உட்கார்ந்து கொண்டாள்.  மாணவி  வைத்தியத்துக்குப் படிப்பவள்.  கழுத்தில் லாங் செயினுடன் ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் அலங்காரத்துக்காகத் தொங்கிற்று.   இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன்  கூடிய ஒரு புடைவை.  அதற்கு அமைவான ஜாக்கெட்.  செயற்கைச் சுருளுடன் கூடிய தலைமயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள்.  நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துக் தினவு தீர்த்துக்கொண்டார் சுப்பையா பிள்ளை.  கண்களைக் கசக்கிக் கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையைத் தடவிக் கொடுத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார்.   பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது....'பெத்துப் போட்டால் போதுமா?' என்று தன் பெண்ணைப்பற்றி நினைத்தார்....ஷாக் அடித்தது போலப் பிள்ளையவர்கள் காலைப் பின்னுக்கு இழுத்தார்.  அவளது செருப்புக்காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது.   பிள்ளையவர்கள் கால், உடல், சகலத்தையும் உள்ளுக்கிழுத்துக் கொண்டார்....அவர் மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது.  வீர பாண்டியன் பட்டணத்துக்கருக்கு மாப்பிள்ளை-மேளதாளக் குரவைகளுடன் வீட்டில் குடி புகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக்கோணிய உருவம்.  பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையும் தூக்கிச் சென்ற நாள் சங்கிலிகள்.  குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம்..." எதிரில் இருந்த பெண் பார்க்கில் இறங்கிவிட்டாள்.  அதை அவர் கவனிக்கவேயில்லை.

  இது üசுப்பையா பிள்ளையின் காதல்கள் என்னும் கதை.

 கட்டு எதற்கும் அடங்காத கதாசிரியர் புதுமைப்பித்தன்.  இதுதான் முடியும், இது முடியாது என்பதில்லை அவருக்கு,  எதையும் முயற்சி செய்து லாவகமாக உருவாக்கி விடுவதில் சமர்த்தர்.  சித்த வைத்திய தீபிகையின்  ஆசிரியரான கந்தசாமிப் பிள்ளையைத் தேடிக்கொண்டு கடவுளே வந்துவிட்டார்.  அவர் கதைகளில் ஒன்று;  பிராட்வே முனையில் ஹோட்டல் சுகாதாரம் பேசிக் கொண்டே காபி சாப்பிட்டுவிட்டு, நர வாகனத்தில் (ரிக்ஷாவில்தான்)  வீடு போய்ச் சேருகிறார்கள் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்.   கடவுளிடமே தன் பத்திரிகைக்கு ஜீவிய சந்தா வசூல் செய்துவிடப் பார்க்கிறார்  கந்தசாமிப்பிள்ளை.  "யார் ஜீவியம் ..." என்று கேட்கிறார் கடவுள். வீட்டிலே கந்தசாமிப் பிள்ளையின் பெண்குழந்தை அவர்களை வரவேற்கிறது.    "எனக்கு என்னகொண்டாந்தே?" என்று கேட்டாள் குழந்தை. "என்னைக் கொண்டாந்தன்" என்றார் பிள்ளை.  "என்னப்பா தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப் படாது" என்று சிணுங்கியது குழந்தை.  "பொரி கடலை உம்புக்காகாது. இதோபார் உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டுவந்திருக்கிறேன்" என்று தன் பெண்ணுக்குக் கடவுளை அறிமுகப்படுத்திவைத்தார்.  குழந்தையின்பேரில் வைத்த கண்களை மாத்த கடவுளால் முடியவில்லை.  கந்தசாமிப் பிள்ளைக்குச் சிறுதொண்டர் கதை ஞாபகம் வந்துவிட்டது.  "சற்றுத் தயங்கினார் ; 'இப்பவெல்லாம் நான் சுத்த சைவன். மண்பானைச் சமையல் தான் பிடிக்கும். பால் தயிர்கூடச் சேர்த்துக் கொள்வதில்லை' என்று சிரித்தார் கடவுள்.  ஆசைக்கு என்று காலந் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து என்றார் கந்தசாமிப் பிள்ளை....'வாடியம்மா கருவேப்பிலைக் கொளுந்தே...' என்று கைகளை நீட்டினார் கடவுள்.  ஒரே குதியில் அவர் மடியில் ஏறிக்கொண்டது குழந்தை.   'எம்பேரு கருகப்பிலைக் கொழுந்தில்லை ; வள்ளி.  அம்மா மாத்திரம் என்னைக் கறுப்பி, கறுப்பின்னு கூப்பிடுதா....நான் என்ன அப்படியா?' என்று கேட்டது.  அது பதிலை எதிர் பார்க்கவில்லை" புதுமைப்பித்தனின் கதைகளில் வருகிற குழந்தைகள் அற்புதமான சிருஷ்டிகள்.  இன்றைய தமிழ் எழுத்திலே அந்தக் குழந்தைகளைப் போன்ற பூரணமான பாத்திரங்கள் வேறு இல்லை என்பது என் அபிப்பிராயம். அவை மறக்க முடியாத சிருஷ்டிகள்.
 
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்கிற கதை பூராவையுமே சொல்லிவிட வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  அவ்வளவு நல்ல இடங்கள் பல இருக்கின்றன அதில்.  'கடவுளிடமும் ஜீவிய சந்தா வாங்கிக்கொண்டு தான் அவரை விட்டார்  கந்தசாமிப் பிள்ளை.....' என்று சொல்லி ஒருவாறாக முடித்துவிடுகிறேன்.
 
காஞ்சனைத் தொகுதியிலே முதல் கதையான காஞ்சனையே வெகு நுட்பமான ஒரு விஷயத்தை அழகிய உருவத்தில் சொல்கிறது, பழைய பெரிய எழுத்து விக்கிரமாதித்தின் கதைப் பாணியில் செல்லுகிற ஒரு மூட்டைப் பூச்சி கதை இருக்கிறது இத்தொகுதியில் - கட்டிலைவிட்டிறங்காக் கதை என்று பெயர் அதற்கு.   'மசாமசானம்' என்று ஒரு கதை.  அதில் தெரு ஒரத்திலே பிச்சைக்காரன் செத்துக்கொண்டு கிடக்கிறான்.  ஒரு குழந்தை மாம்பழத்தை மூக்கில் வைத்துத் தேய்த்துக் கொள்கிறது.   'செல்லம்மாள்' என்ற கதையில் செல்லம்மாள் இருபது பக்கங்களிலும் செத்துக் கிடக்கிறாள்-அவள் புருஷன் கடைசிக் கிரியைகளைச் செய்யத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான்.
 
இந்தத் தொகுதியில் இல்லாத வேறு பல கதைகளையும் பற்றிக் இங்கு சொல்லவேண்டும் போல இருக்கிறது எனக்கு.  சிற்பியின் நரகம், மனக்குகை ஓவியங்கள், ஞானக்குகை, கபாடபுரம்....இன்னும் பல ;  விதவிதமான கதைகளை விதவிதமான உத்திகளைக் கையாண்டு எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.    அவர் கதைகளிலே இரண்டு விசேஷ அம்சங்கள் சொல்லலாம்.  (ஒன்று) அவர் அவசியம்  என்று தேர்ந்தெடுத்துச் சொல்லும் விஷயங்கள்; அவர் கையாண்ட விஷயங்கள் எல்லாமே புரட்சிகரமானவை என்று பொதுவாகச் சொல்லலாம்.  (இரண்டு) அதைச் சொல்ல அவர் கையாண்ட நடை.  சிலசமயம் அவர் நடை தடுமாறி விஷயத்தை எட்டாது போனதும் உண்டு.   ஆனால் அவருடைய சிறந்த கதைகளில், சொல்லும் சிந்தனையும் சேர்ந்து அமைந்தன.  திருநெல்வேலி பேச்சுத் தமிழை அவர் பல இடங்களில் கவிதையாகவே கையாண்டிருக்கிறார். 

 வருகிற நூற்றாண்டில் தமிழ்ச் சிறு கதைச் செல்வத்துக்கு நமக்குப் பலமான அஸ்திவாரம் போட்டுத் தந்து விட்டவர் புதுமைப்பித்தன் என்று சொல்ல வேண்டும்.

(Written by KA NA SUBRAMANIAm)

Comments