Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 91



அழகியசிங்கர்  



மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் நான் 100 கவிதைகள் கொண்டு வர உள்ளேன் முதலில்.  அதன்பின் தொடரந்து 200, 300 கவிதைகள் என்று கொண்டு வர உள்ளேன்.  முதல் 100ஐப் புத்தகமாகக் கொண்டு வருகிறேன்.  முதல் தொகுதிக்கு என் கவிதை
உட்பட இன்னும் 9 கவிதைகள்தான் தேவை.  இக் கவிதைகளை கவிதைப் புத்தகங்களிலிருந்து தயாரிக்கிறேன். இதில் விட்டுப்போன கவிதைகளும் பின்னால் உருவாகப் போகும் கவிதைத் தொகுதிகளில் சேர்க்கப்படும்.
இக் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை என்று எதுவும் கிடையாது.  இக் கவிதைகளை வாசிக்கிறவர்கள் ஒவ்வொருவரும் கவிதைகள் மூலம் தங்களுக்கான் முன்னுரையைப் புரிந்துகொள்ள வேண்டும. 
ராஜமார்த்தாண்டன் இன்று நம்மிடம் இல்லை.  ஆனால் இந்தக் கவிதையில் ஒரு வரி எழுதியிருப்பார்.  விதிக்கப்பட்ட என் காலமோ மணித்துளிகளாய் விரைகிறது என்று.  இந்த வரிகள்தான் என்னை யோசிக்க வைக்கிறது.



அதுவரை


ராஜமார்த்தாண்டன் 


எனக்கான மலர் 
எங்கோ மலர்ந்திருக்கிறது 
எத்திசையில் என்பதறியேன்

அதன் நறுமணம் 
இதழ்களின் நிறம் 
யாதொன்றுமறியேன்

விதிக்கப்பட்ட என் காலமோ 
மணித்துளிகளாய் விரைகிறது

எனினும் 
என்றேனும் கண்டடைவேன் 
எனக்கான மலரை

நம்பிக்கையுடன் தேடியலைகிறேன்

அதுவரை 
குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பாய் 
மலர்ந்திருக்க வேண்டுமது.


நன்றி :  அப்படியே நிற்கட்டும் அந்த மரம் - கவிதைகள் - ராஜமார்த்தாண்டன் - பக்கங்கள் : 72 - அஜிதா பதிப்பகம் - முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2000 - விலை : ரூ.20 

Comments