Skip to main content

அப்பா......


     அழகியசிங்கர்
                                                                                               


அப்பா சொன்னார் :
குட்மார்னிங்
சரிதான்

காலையில் காஃபியைச்
சுடச்சுட குடிப்பார்
சரிதான்

முன்னாள் முதல்வர்
கருணாநிதி மாதிரி பேசுவார்
சரிதான்

தெருவில் போவோர் வருவோரைப்
பார்த்து
நலமா என்று கேட்பார்
சரிதான்

ஃபோனில் யாராவது பேசினால்
நலமுடன் வாழ்க என்பார்
சரிதான்

கண்ணாடி இல்லாமல்
பேப்பர் படிப்பார்
சரிதான்

தடியை ஊன்றி தானே
நடைபயிற்சி செய்வார்
சரிதான்

தரையில் அமர்ந்து
காய்கறி நறுக்குவார்.
சரிதான்

யார் உதவி இல்லாமல்
தன் துணிகளை
தானே துவைப்பார்
சரிதான்

சத்தமாக மெய்மறந்து
பாட்டுப்பாடுவார்
சரிதான்

91வயதில் தானே
ஷேவ் செய்து
கொள்வார்
சரிதான்

டிவி முன் சீரியலை
விழுந்து விழுந்து ரசிப்பார்
சரிதான்

படுக்கையை விரித்து
தானே படுப்பார்
சரிதான்

ஆனால் என் 59வது வயதில்
        என் தலைமை அலுவலகத்திற்குப்
போன் பண்ணி
என்னை மாம்பலம் கிளைக்கு
மாற்றச் சொல்லி கெஞ்சுகிறார்
அதுதான் சரியில்லை...........
                                             08.04.2013

Comments

அடடா... முடிவில் இப்படி செய்து விட்டாரே...
அறுபது வயதானாலும் அப்பாவுக்கு பிள்ளை பிள்ளைதானே...

அப்பா செய்தது சரிதான்.

(தயவுசெய்து இந்த வார்த்தை சரிபார்ப்பை நீக்கிவிடுங்களேன்.)

Popular posts from this blog