Skip to main content

காலத்தின் கொலைகாரன்





எம்.ரிஷான் ஷெரீப்



வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென
புதிதாக விழுந்திருக்கிறது
ஐங்கூர் பழுத்த இலை
சிவப்புக் கலந்த நிறமதற்கு
உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில்
சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும்

எப்படிப் பூத்ததுவோ
பசுமையெரிந்த செடிகளுக்கிடையில்
எதற்கும் வாடிடா மலரொன்று
அன்றியும்
எந்தக் கனிக்குள் இருக்கின்றது
அடுத்த மரத்துக்கான விதை

எல்லா வாசனைகளும் பூக்களாகி
நாசிக்குள் நுழையும் கணமொன்றில்
செழித்த ஏரியின்
கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள்

வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும்
சுவரோவியங்களில் தோப்புக்கள்
எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன

இங்கு நீர் தேங்கிய குட்டைகளில்
தலைகீழாக வளருகின்றன
அருகாமை சடப்பொருட்கள்

விம்பங்கள் மட்டுமே காட்டுகின்றன
வாழ்வின் நிறங்களை
கனவுக் கண்ணாடிகளில்

தேய்ந்திடும் காலமொன்றை நோக்கியே
நகரும் எண்ணங்களுக்குக் கூடமைத்து
வர்ணங்களைத் தீட்டலாமினி

ஆமாம்
காத்திருப்பு
காலத்தின் கொலைகாரன்தான்


Comments

Popular posts from this blog