Skip to main content
சாகசம்

கருவறைச் சிசுவின்
தரையிறங்கும் தருணம்
தாய்வசமில்லை.
கொடியறுந்து தனியான
மினிமனிதனுக்குப் பசி முதற்பாடம்.
முலைப்பால் ருசி தனிப்பெருங்கருணை.
தேனீக்குப் பூ, மீனுக்கு மீன்
மானுக்குப் புல், புலிக்கு மான்
வேடனுக்குப் புலியென
சங்கிலித்தொடர் ரகசியம்
மூளைக்குளத்தில் பூ விரியும்
ஆகாயத்தில் அந்தரவிளக்குகள்
அகிலத்தில் இருள்விலக்கும்
படைப்பு நுணுக்கமாய் திட்டமிட்டதுபோல.
கண் காட்சி காணும்
மனம் சிருஷ்டி ரகசியம் தேடும்
கடவுள்துகளை விண்டு பார்க்கும்
கண்டிராத முதல் கடவுள்துகளைத் தேடும்
அண்டப்பெருவெளியளக்கும்
சாகசம் நிகழ்த்தும்
எறும்பு.

\
லாவண்யா

Comments