Skip to main content

அன்பின் பிரார்த்தனை


சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின்
அன்பையும்
சந்தேகித்தபடியே சில இதயங்கள்

அக்கறையை அவமதிப்பாக
பரிவைப் பாசாங்காக
மூளையின் துணைகொண்டுக்
காரணங்களை அலசி அலசி
அன்பைத் திரித்து மகிழ்கின்றன 
பேதமையின் உச்சத்தில்.

யார் யார் வாயிலாகவோ
சுற்றிச் சுற்றி முயன்றும்
தாம் தாமாகத்
தங்க முடியாத இடத்தில்
சுயமிழந்துவிடும்
சாத்தியங்களுக்கு அஞ்சி
விலகத் தொடங்குகிறது 
வேதனையுடன் அன்பு

அமிர்தக் கடலில் மூழ்கிக் கிடந்தாலும்
நச்சு கலந்த இரத்தத்தையே
இதயத்துக்குப் பாய்ச்சுவேன் என
அடம்பிடிக்கிற ஆன்மாக்களின்
பரிசுத்தத்துக்குப் பிரார்தித்தபடி.
***
 
 

Comments

Popular posts from this blog