Skip to main content

Posts

Showing posts with the label என்.விநாயக முருகன்

இரண்டு கவிதைகள்

கண்ணீர் அஞ்சலி நான்கு நாட்கள் முன்பு தெருமுனை மின்சார கம்பத்தில் அவரை பார்த்தேன் கண்ணீர் அஞ்சலி எழுத்துகளுக்கு கீழே இரண்டு கண்கள் படம் யாருடையதென்று தெரியவில்லை அழுதுக்கொண்டிருந்தன கண்களுக்கு கீழே சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார். புகைப்படத்திற்கு கீழே வருந்துகிறோம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எ‌ன்று அச்சாகி இருந்தது. இரண்டாவது நாள் குடும்பத்தினரை காணவில்லை. நண்பர்கள் மட்டும் உட‌ன் இருந்தனர் மூன்றாவது நாள் நண்பர்களை மாடு நக்கி கொண்டிருந்தது. நான்காவது நாள் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார் யாரோ ஒருத்தன் சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான் இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன இரண்டு கண்கள் யாருடையதென்று தெரியவில்லை ஒருநாள் அதுவும் மறைந்து விட்டது விசாரித்தல் எங்கு பார்த்தாலும் அன்புடன் விசாரிப்பார் எனது நண்பர் சினிமா தியேட்டரில் விசாரிப்பார் என்ன படம் பார்க்க வந்தீங்களா? மருத்துவமனையில் விசாரிப்பார் என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா? துணிக்கடையில் விசாரிப்பார் என்ன துணி எடுக்க வந்தீங்களா? கோயிலில் விசாரிப்பார் என்ன சாமி கும்பிட வந்தீங்களா? ந‌ல்ல மனுசன்.நெஞ்சுவலியாம். ஒருநாள் இறந்தும்விட்டார் ஒர...

சாட்சி

விவாகரத்து வழக்கொன்றிற்காக சாட்சி சொல்ல நீதிமன்ற வளாகத்தின் வேப்பமரத்தடியில் காத்திருந்தபோது பார்த்தது. ஜில்லென்ற தூறல் காற்றில் நனைந்த சிறகுகளை ஒ‌ன்றுக்கொன்று ஆறுதலாய் கோதிக்கொண்டிருந்தன தவிட்டு குருவிகள் இரண்டு.

சிங்கம் -------

சிங்கம் என்றால் சிறுவயது முதலே எனக்கு பயம். கதை கதையாக கேட்டிருக்கின்றேன். சிங்கம் என்று சொல்லி ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல் வாங்கிக்கொள்வேனாம். தொலைக்காட்சிப் பெட்டிகளில் கூரான நகங்களால் மான்களின் வயிற்றை கிழித்துண்பதை பார்த்து நடுங்கியிருக்கின்றேன் பலமுறை. அடிக்கடி எனக்குள் வியர்க்கும். என்னை தின்றுவிடுமோ என்னும் பயம். பலநாள் கழித்து பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன். வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் முடிக்கொட்டி,உடல்மெலிந்து சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால். இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக. என்னை தின்றிருந்தால் கூட வந்திருக்காது இந்த பயம்.

சிறுமழை -----------

முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் சிறுமி ஓய்ந்து முடிந்த மழை முத்துக்கள் சொட்டும் பேருந்தின் ஜன்னல் கம்பிகளை விரலால் தொட்டு தொட்டு வெளியே சுண்டுகிறாள். சிறுமழையொன்று பெய்கிறது.

அலையும் ஆவியொன்று

என் வீட்டுப்பரணில் கிடக்கும் பழைய டிரங்க் பெட்டியில் உடைந்துப்போன சிலேட் குச்சிகள், பச்சைநிற பிளாஸ்டிக் முனையுடன் தகர சிலேட்டொன்று, புழுக்கையாகிப்போன ‌ கலர் பென்சில்கள், பிலிம் துண்டுகள், ஒரு மயிலிறகு, இவற்றோடு ஒரு சிறுவயது ஆவியும் சுற்றிக்கொண்டு திரிகிறது. நான் எப்போது பெட்டியை திறந்தாலும் உயிர்கொள்ளத் துடிக்கும் அந்த ஆவி என் உடலின் நீள அகல பருமன்களை கண்டு திகைத்து மீண்டும் பெட்டிக்குள் உறங்கிவிடுகிறது

தனிமை

நூறாண்டுக்கு முந்தைய பாழடைந்த வெறுமை படர்ந்த கோயில்களுக்கு தனியாக செ‌ன்று திரும்பும்போதெல்லாம் முதுகுக்கு பிறகு சன்னமாக கேட்கிறது விசும்பலொலி அடு‌த்த முறையாவது உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்

இரவெல்லாம்

இரவெல்லாம் கத்தியபடி வழியெங்கும் வயிறு வெடித்து கிடந்த தவளைகள் நினைவூட்டுகின்றன முன்தின மாலையின் நமக்கான பிரிவொன்றை

சட்டையொன்று-----------------

என்னை தன்னுள்ளே உடுத்தியபடி சட்டையொன்று கிளம்பியது. எதிர்வந்தவர்கள் நலம் விசாரிக்க என்னை இறுதிவரை பேசவிடாமல் தன்னைப் பற்றியே பெருமையடித்து தீர்த்தது. புறக்கணிப்பின் உச்சத்தில் ஒரு நாள் சட்டைக்குள்ளிருந்த நானொன்று அம்மணமாக வெளியேறியது யாரிடமும் சொல்லாமல்

இரண்டு கவிதைகள்

ஒழுங்கு வரிசையாக ஆடுகின்றன பிரசவ ஆஸ்பத்திரி தொட்டில்கள் வரிசை வரிசையாக பார்த்து சிரிக்கிறார்கள் பார்வையாளர்கள் வரிசை தவறாமல் பெற்று வரிசையில் சேர்த்து உச்சி முகர்கிறார்கள் தகப்பன்கள் வரிசையாக நின்றும் வரிசையில் தின்றும் வரிசையில் படுத்தும் வரிசையாகவே செத்தும் போகிறார்கள் ஒரு மழை இரவின் ஒரு மழை இரவின் திடீரென இறங்கிய இடிச்சத்தத்தில் அர்ச்சுனாவென்று அலறி கட்டிப்பிடித்தாய் என்னை கீதாஉபதேசம் பெற்றேன்

கோவில் மிருகம்

என்னதான் அடித்தாலும் அ‌ங்குசத்தால் காதில் குத்தினாலும் வாலை முறுக்கி வலியேற்றினாலும் வற்புறுத்தி பிச்சையெடுக்க வைத்தாலும் கா‌ட்டு‌ப்பாகனொருவன் நம்பி உறங்குவது கோவில் மிருகத்தின் காலடி நிழலில்

ஒரு வேண்டுகோள்

ஒரே கயிற்றில் ஒரு டஜன் கோழிகளையாவது கால்களில் சுறுக்கிட்டு சைக்கிளின் இருபுறம் தொங்கவிட்டு செல்கிறான் நிதானமாக. மானசீகமாக வேண்டுகிறேன். கொஞ்சம் விரைந்துச்செல் நண்பா சீக்கிரம்... வெந்நீரில் முக்கியோ கழுத்து திருகியோ கொன்றுவிடு.

இலக்கணப்பிழை

உன்னைப் பற்றிய கவிதையில் ஏதோ ஒரு சொல் பொருந்தாமல் சீர் வரிசைத் தப்பி வருவதாக விமர்சித்தான் கவிஞன் ஒருவன் உன்னிடம் வாசித்துக் காட்டினேன் தெற்றுப்பல் தெரிய சிரித்தாய்

தேடல்

எத்தனை முறை உதிர்ந்தாலும் அத்தனை முறையும் பூத்துத்தொலைக்கும் காதலை எழுதிய இறகொன்றும் எத்தனை முறை பெய்தாலும் அத்தனை முறையும் கொட்டித்தீர்க்கும் மழையில் நனைந்த இறகொன்றும் நூறாண்டுகளாய் அலைந்துக்கொண்டிருக்கும் சிறகிலிருந்து பிரிந்த இறகொன்றும் தேடிக்கொண்டிருக்கின்றன. தீராத பக்கங்களில் எந்த கூட்டில் அமர்ந்துள்ளது அதுவென்று.

எங்கே அவன்?

நானே காலமுமாய் இருப்பதாய் சொன்னவன் கடந்து விட்டானா? கரைந்து கொண்டிருக்கிறானா? சொல் இருக்கிறது. சொன்னவன் எங்கே? கேட்டவன் எவன்?

இந்தச் சாலையும்

இன்று கொலையேதும் நடக்கவில்லை. ரத்த வாடை வீசாத சாலைகளில் வழிந்தோடுகிறது அமானுஷ்யம். குழுக்களாய் கிசுகிசுக்காத சாலைகளில் வீசுகிறது நிசப்தம் போடும் சப்தம். அம்புக்குறி சுட்டாத சாலைகளில்பொழிகிறது அமைதி தரும் அதிர்வு. கொலை நடந்த எல்லா சாலைகளையும் போல இந்தச் சாலையும் நீள்கிறது பயங்கரமாய்…

ஐந்து கவிதைகள்

இன்று முத‌ல் வழிதப்பிய குறுஞ்செய்தியொன்று ஒலித்தது. வேணுகோபால் இறந்துவிட்டான் உடனே கிளம்பி வா. உண்மையில் வேணுகோபால் என்று எனக்கு யாரும் இல்லை. இன்று முத‌ல் அந்தக் கவலையும் தீர்ந்தது. முத‌ல் நிலவு இறுக மூடிக்கிடக்கும் அந்தக் குழந்தையின் கைகளை யாரோ விடுவிக்கிறார்கள். அந்தக் குழந்தை தன்னோடு கொண்டு வந்த நட்சத்திரங்கள், நிலவுகள் உ…ரு…ண்…டோடுகின்றன. கனவில் கடவுள் கோபிக்கிறார். குழந்தை சிரிக்கிறது. இரண்டாம் முறையும் நட்சத்திரங்கள், நிலவுகளை தருகிறார். அது ஒருபோதும் முதல் நிலவு முதல் நட்சத்திரங்கள் போல் இருந்ததில்லை. யாரும் சொல்லாத கவிதை இதுவரை யாரும் சொல்லாத கவிதையை எடுத்துக்கொண்டு திரும்பினேன். அ‌ங்கே நீ இல்லை. நான் இல்லை. யாரும் இல்லை. எதுவும் இல்லை. எதுவுமற்ற அதுவும் இல்லை. நீட்சி முன்பொருநாள் எவனோ ஒருவன் தன் சதைகளை அரிந்து கழுகுக்கு போட்டானாம். அவனது நீட்சியென்று அடுக்குமாடி குடியிருப்பின் என் ஜான்னலூரம் காத்துக்கிடக்கின்றன அதே புறாக்கள். *********** பாரியின் காலத்திலிருந்து கிளம்பி வந்த கொடியென்று இருசக்கரவாகனம் மீது படர்ந்தெழுந்திருந்தது. எடுக்கவா தொடுக்கவா என்றது என்னைப் பார்த்து.