Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 144


அழகியசிங்கர்  




 இன்ஸ்டண்ட் கவிஞர் எம்





கீதாஞ்சலி பிரியதர்சினி 




இன்ஸ்டன்ட் கவிஞர் எம் என்பவர் மாவட்டத்தின்
ஒரு சிறந்த நிர்வாகி, நாட்டுக்கும், அவர் வீட்டுக்கும் 
ஸ்டேட்ஸ் போய் படித்து விட்டு, பிடிக்காமல் ஊர் 
வந்து முகநூலில் ஸ்டேடஸ் போடுவார் அடிக்கடி 
முகநூலில் அவருக்கு மூவாயிரம் பேர் பரஸ்பர 
நண்பர்கள் குருதிக்கொடை மற்றும் அடைமழைக்கு 
மழைக்குடை உதவும் நண்பர் வரை பேமஸ் அவர். 
முன்தினம் அவர் மொரிஷியஸ் போனதை 
அடுத்த நாள் முகநூலில் எழுதுவார், ஒரு நவீன 
கைப்பேசி உதவியுடன் கையடக்க புகைப்படம் உண்டு 
கண்டிப்பாக யாரோ ஒருத்தியுடன் சிரித்தபடி இருப்பார் 
சிந்திப்பது குறித்து சிந்தனையுடன் தினம் பதிவில் 
ஏராளம் எழுதுவார் நம் இன்ஸ்ட ன்ட் கவிஞர் எம். 
அணுஉலை எதிர்ப்பாளர், ஈழவிடுதலைக்கு தமிழ் 
ஆதரவாளர் கவிஞர் எம் ஏழெட்டு புரட்சிகர தமிழ்க் 
குறும்படங்களுக்கும் உரிமையாளர். புதுமற்றும் பழைய 
கவிதைகள் குறித்தும், எழுத்தாளர்களின் போக்கு, திமிர் 
குறித்தும் ஏராளம் பதிவுகள் போட்டார் நேற்று                முன்தினம் 
அப்கோர்ஸ் அடுத்த மாதம் இயக்குநர் எக்ஸ்ஒய் என்கிற 
ஒருத்தர் தான் அவரின் உலகப்புகழ்ப்பெற்ற தமிழ்ப்புதுக் 
கவிதைத் தொகுப்பை வெளியிடப் போவதாகவும் ஒரு 
தகவல். உற்றுப் பாருங்கள் உங்கள் கைப்பேசியை பளீஸ் 
இதற்குள் முப்பது லைக்குகள் எம் முக்கு 
வெற்றி வாகை நமக்கே, வாழ்க கவிதை, வளர்க எம். 
முப்பது நாளில் மூவாயிரம் பிரதிகள் இன்ஸ்ட ன்டாக 
விற்கும் கவிதை செய்வோம். வாருங்கள் நண்பர்களே 
மிச்சமிருக்கும் பொழுதுக்குள்.

நன்றி : நிலைக்கண்ணாடி நிமிடங்கள் - கீதாஞ்சலி பிரியதர்சினி - இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்) 41 கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600 011 அலை பேசி : 9444640986 - பக் : 72 - விலை : ரூ.50

Comments