Skip to main content

பாஜிராவ் மஸ்தானி

பிரபு மயிலாடுதுறை


சில ஆண்டுகளுக்கு முன்னால், மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பகல் நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.  அது செல்ஃபோன் பிரபலமாகிக் கொண்டிருந்த காலம்.  நான் பேருந்தின் கடைசி வரிசைக்கு முன்னால் இருந்த இடதுபக்க இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்.  புதுச்சேரி பேருந்து நிலையத்தில் ஓர் இளைஞன்  ஏறினான்.  கடைசி வரிசையின் நடுவில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.  அவனது தோற்றம், கைப்பை, காலணிகள் மற்றும் அவன் கையிலிருந்த புத்தகங்கள் இவற்றைக்கொண்டு அவன் பொறியியல் மாணவனாக இருக்கக் கூடும் என கணித்தேன்.  பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது இரண்டு கல்லூரி மாணவிகள் புதுச்சேரி பொறியியல் கல்லூரி அருகே ஏறினர்.  கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருந்தது.  அம்மாணவனுக்கு அருகே அமர்ந்து கொண்டனர்.  ஒரே வகுப்பில் படிப்பவர்களாக இருக்கக் கூடும்!   புதுச்சேரியிலிருந்து சென்னை வரை உரையாடிய வண்ணம் இருந்தனர்.  ஒரு பெண் அவ்வப்போது தூங்கி எழுந்து உரையாடலில் இணைத்து கொண்டாள்.  அவள் உரையாடும் போது இன்னொரு பெண் தூங்கினாள்.  மோட்டலில் வண்டி நின்ற போது அம்மாணவன் தான் இறங்கிச் சென்று குடிநீர், பிஸ்கட் மற்றும் நொறுக்குத் தீனி வாங்கி வந்து தந்தான். அவர்களுக்கான பயணச்சீட்டையும் அவன் தான் எடுத்தான்.

அவர்கள் பல விஷயங்களைப் பேசினர்.  மேத்தமேடிக்ஸ் – 4 என்ற தாளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.  ஃபோரியர் சீரிஸ்,  ஆய்லர் தேற்றம் என்ற வார்த்தைகள் காதில் விழுந்தன.  எழுபது ஐந்து மதிப்பெண்களுக்கு எழுதிய தேர்வில் அறுபத்து ஐந்து மதிப்பெண்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பெண் இருந்தாள்.  கிடைக்காத பத்து மதிப்பெண்ணுக்காக 
வருந்தினாள்.  தோழிகள் தான் குழப்பி விட்டனர் என அங்கலாய்த்தாள்.  “இட் இஸ் ஆள் இன் எ கேம்” என்றாள். அது அவளுக்கு உவப்பான வாக்கியம் போலும்! அடிக்கடி அதனைபிரயோகித்தாள்.  அவர்கள் பேருந்தில் உரையாட ஒரு பாணியை பின்பற்றுவதை நான் பேருந்தில் ஏறியதுமே கவனித்தேன்.

பேருந்தில் ஏறியதுமே அவர்கள் உரையாடத் துவங்கவில்லை.  முன்னிருக்கையில் இருப்பவர்கள் ஓய்வு நிலைக்கு செல்லும் வரை பேசாமல் இருந்தனர்.  அப்பெண்கள் வந்து அமர்ந்ததும் அந்த இளைஞன் அவனே நடத்துனரிடம் சென்று பயணச்சீட்டு வாங்கி வந்தான் என்பதை நடத்துனர் அப்பெண்களிடம் சீட்டு வழங்க அவர்கள் இடத்துக்கு வராததிலிருந்து யூகித்துக் கொண்டேன்.  என்ஜின் சத்தத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பவே அவர்கள்  உரையாடலின் ஸ்தாயி இருந்தது. என்ஜின் சத்தம் அதிகமாக இருக்கும் போதே உரையாடினர்.  நிறுத்தங்களில் வண்டியை நிறுத்த ஓட்டுனர் வாகனத்தை மெதுவாக இயக்கினால் பேச்சு நின்று விடும்.  பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்குமே அவர்களைப் பற்றிய கவனம் இல்லை அல்லது எவர் கவனத்தையும் கவராத ஒரு தகவமைப்பை அவர்கள் உருவாக்கியிருந்தனர். இரண்டு பெண்களில் ஒரு பெண் மிகவும் புத்திசாலி என்பது அவளது பேச்சில் தெரிந்தது. அவ்விளைஞனும் அவளுக்கு சமமான அறிவு கொண்டிருந்தான்.  இன்னொரு பெண்ணும் அவர்களை ஒத்த திறனுடன் இருந்தாள்.

 பரீட்சைத் தாள்கள், கல்லூரித் தோழிகள், சென்னைத் தோழிகள், விடுமுறைத் திட்டங்கள், எதிர்காலத்தில் எழுத வேண்டிய போட்டித் தேர்வுகள், பெற்றோர்கள் என நானாவித விஷயங்களைப் பற்றியும் அப்பெண் உற்சாகத்துடன் பேசினாள்.  நடந்த – அவள் எதிர்பாராத – விஷயங்களைப் பற்றி பேசும்போது ‘இட் இஸ் ஆல் இன் எ கேம்’ என்றாள். 

 இட் இஸ் ஆல் இன் எ கேம்.  ஆம், நாம் விரும்புவதும் வாழ்வில் நடக்கும்.  நாம் எதிர்பாராததும் வாழ்வில் நடக்கும்.  அனைத்தும் சாத்தியமே.வாழ்வை முழுமையாக அணுகுவதும் புகாரின்றி ஏற்பதுமே அழகான, நேர்மையான வழிமுறை. 

அவர்களது பேச்சு ஓம் சாந்தி ஓம் என்ற திரைப்படம் பற்றி திரும்பியது.  அப்படம் அன்றைய தினத்துக்கு ஓரிரு நாட்கள் முன்பே வெளியாகியிருந்தது என்பதை அவர்கள் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.  ‘சான்ஸே இல்ல சான்ஸே இல்ல’ என்று அப்பெண் சொன்னாள்.  அவ்வியப்பு வாக்கியத்தை நான் அன்றுதான் முதல் முறையாகக் கேட்டேன்.  பின்னரே அது சென்னை கல்லூரி மாணவர்களிடம் பிரபலமாக இருந்த வாக்கியம் என அறிந்தேன்.  ‘இட் இஸ் ஆல் இன் எ கேம்’ என்ற சொற்றொடரும்  ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற பெயரும் என் மனதில் பதிவானது.  

சென்னை கிண்டியில் அவர்கள் மூவருமே இறங்கிச் சென்றனர். நான் அவர்களைப் பற்றி யோசித்தவாறு அசோகத்தூண் நிறுத்தத்தில் இறங்கினேன். அன்றைய தினம் போன்ற அழகான நாட்கள் அவர்களுக்கு கல்லூரிக் காலங்களுக்குப் பின் நீடிக்குமா என யோசித்தேன்.  துடிப்பு, உவகை மற்றும் உத்வேகம் ஆகியவை இளவயதில் தானாக வாய்க்கிறது.  இளமை கடந்ததும் நாமே அவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.  

சில நாட்களில், எனது நண்பனின் திருமணத்துக்கு கோயம்புத்தூர் சென்றேன். நகரில் நுழைந்ததுமே ஓம் சாந்தி ஓம் திரைபடத்தின் சுவரொட்டிகள் வரவேற்றன.  எந்த திரையரங்கில் படம் ஓடுகிறது என பார்த்து வைத்துக் கொண்டேன்.  கனகதாரா திரையரங்கம்.  திருமண அரங்கில் ஒரு உள்ளூர்வாசியிடம் அவ்வரங்கு எங்குள்ளது எந்த பாதையில் செல்ல வேண்டும் என விசாரித்துக் கொண்டேன் காலையில் திருமணம் முடிந்ததும் மணமகனின் இல்லத்திற்கு வந்துவிட்டோம்.  மதியம் திருமணத்துக்கு வந்துருந்த ஒரு மயிலாடுதுறை வாசியை கூட்டிக்கொண்டு கனகதாரா திரையங்கம் சென்றேன்.  

ஓம் சாந்தி ஓம் சிறந்த இந்தித் திரைப்படங்களில் ஒன்று.  நாம் காணும் திரைபடத்தினுள் ஒரு திரைப்படம் உருவாவதன் கதை இருக்கும்.  கதைக்குள் கதை என்ற உத்தியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திரைக்கதை. ஃபராகானின் இயக்கத்தின் ஆகச் சிறப்பான  படமும், மிக சிறந்த இந்தி திரைப்படங்களில் ஒன்றாக உள்ளதும் ஓம் சாந்தி ஓம்.  படத்தின் துவக்கத்திலிருந்துஅப்படத்தின் கதாநாயகி திரையை ஆக்கிரமித்திருந்தார். அவரது பெயரை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.  இந்தி சினிமாவையும் அதன் வணிக பாணிகளையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட இந்தி சினிமாவான ஓம் சாந்தி ஓம் ஒரு நிறைவான அனுபவத்தை அளித்தது.  படம் முடிந்து டைட்டில் கார்டில் கதாநாயகி நடிகை அறிமுகம் : தீபிகா படுகோனே – என குறிப்பிடப்பட்டடிருந்தார்.  இவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியவருக்கு இதுதான் முதல் படம் என்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.  தீபிகா இன்னும் பல ஆண்டுகள் சிறந்த நட்சத்திரமாய் நீடிப்பார் என நினைத்தேன்.  அவ்வாறே நிகழ்ந்தது.  ஓம் சாந்தி ஓம் திரைப்படத்திற்கு பின்னர் தீபிகா நடித்த ஹேப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை பார்த்தேன்.  

சமீபத்தில் பாஜிராவ் மஸ்தானி திரைப்படம் பார்த்தேன்.  இன்று தீபிகா திரையுலகின் ஒரு முன்னணி நட்சத்திரம்.  யாருடைய திருமணத்திற்கு சென்றேனோ, அந்நண்பனுக்கு இப்போது ஹர்ஷவர்தன் என்ற ஆறு வயது மகன் இருக்கிறான்.  ஹர்ஷாவுக்கு தீபிகா நடித்த கோச்சடையான் படத்தில் வரும் எங்கே போகுதோ  வானம் அங்கே போகிறோம் நாமும் என்ற பாடல் பிடித்த பாடல்.  அப்பாடலில் உன் வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு என்ற வரி வரும்.  

ஹர்ஷா என்னிடம் ஒரு சூரியனை உண்டாக்கி என்ன செய்வது என்று கேட்டான்.  பின்னர் அவனே மாலையில் அஸ்தமிக்க விடாமல் செய்தால் இன்னும் கொஞ்ச நேரம் விளையாட முடியும் என்று பதிலும் சொன்னான்.  

பாஜிராவ் மஸ்தானியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா மூவருமே பாஜிராவாகவும் மஸ்தானியாகவும் காசியாகவும் மாறியுள்ளனர்.  படம் முழுதும் உணர்ச்சி அலையலையாய் எழுந்து பிரவாகம் எடுக்கிறது.  ஒரு தளபதியின் உடல் மொழியும் தோரணைகளும் ரன்வீருக்கு சிறப்பாக அமைத்துள்ளது.  ஒரு மாவீரனின் நேசத்துக்குரியவள் எப்படி இருப்பாள்,  எப்படி யோசிப்பாள், எப்படி செயல் புரிவாள் என்பதை இயக்குனர் 

உணர்ச்சிவேகம் குறையாமல் எடுத்துள்ளார்.  பேஷ்வாவிடம் உதவி கேட்டு வரும்  காட்சியிலேயே பாஜிராவ் மஸ்தானியையும் மஸ்தானி பாஜிராவையும் மனதால் ஏற்கும் காட்சி திரைப்படத்தின் காட்சியமைப்பில் – இயக்கத்தில் – நடிகர்களின் நடிப்பில் – ஒரு நுண் கணத்தில் வெளிப்பட்டுள்ளது.  பாஜிராவ் குடும்பதினரின் அவமதிப்புகளை பொருட்படுத்தாது சாதுர்யமாக பதில் கூறுவது  ஒரு ராஜகுமாரியின் கதாபாத்திரத்துக்கு அழகு சேர்க்கிறது.  ஒரு பெண்ணின் 

நேசத்துக்காக தனது பதவி, அதிகாரம், குடும்பம் அனைத்தையும் இழப்பதுற்கு பாஜிராவ் தயாராவதற்கு இன்னொரு கோணமும் உண்டு : ஒரு பெண்ணின் நேசத்தை உணர முடியாத அவை எந்த மதிப்பும் அற்றவை.  உலகில் மதங்கள் அன்பை போதிக்கின்றன.  அனால் அன்பே இறைமை என படம் முடிகிறது.  தீபிகாவின் திரைத் தடத்தில் பாஜிராவ் மஸ்தானி ஒரு மாஸ்டர் 

மஸ்தானி சாவுக்கு அஞ்சாதவள் என்பதே பாஜிராவை நேசம் கொள்ள செய்கிறது.  சாவுக்கு அஞ்சாதவளால் விரும்பப்படுபவராக பாஜிராவ் இருக்கிறார்.  புத்தேல் கண்டைக் காப்பாற்ற பாஜிராவிடம் உதவி கேட்டு வரும்போது அவரை காண்கிறாள்.  சாவுக்கு சில கணங்களுக்கு முன்னாள் தன் குழந்தையிடம் யாரைப் போன்ற வீரனாவாய் என்று கேட்கிறாள்.  

குழந்தை, தந்தை பேஷ்வா பாஜிராவைப் போல என்று சொல்கிறான்.  ஒரு வீரனை நேசித்து ஒரு வீரனுக்குத் தாயாகி ஒரு வீராங்கனையாக வாழும் மஸ்தானி பாஜிராவையும் தாண்டி செல்கிறாள். 

திரைப்படத்தின் கலையில் இயக்குனர் ஒரு காட்சியை கற்பனையில் உருவாக்குகிறார்.  கலை இயக்குனர் அக்காட்சி நிகழும் வெளியை புறஉலகில் உருவாக்குகிறார்.  நடிகர்கள் இயக்குனரின் கற்பனையை உள்வாங்கி நடிப்புக்கலையை வெளிப்படுத்துகின்றனர்.  

ஒளிப்பதிவாளர் அதனை சினிமாவின் சட்டகத்துக்குள் கொண்டு வருகிறார்.  திரைக்கு முன்னும் பின்னும் பங்களிக்கும் நூற்றுக்கணக்கான கலைஞர்களும் தொழில்நுட்ப உதவியாளர்களும்தங்கள் பங்களிப்பை வழங்குகின்றனர்.  இவை அனைத்தும் ஒருங்கிணையும் ஒரு புள்ளி 

பார்வையாளனுக்கு கடத்தப்படும்போது கலாபூர்வமாக சினிமா முழுமையடைகிறது.  பாஜிராவ்  மஸ்தானி படம் முழுதும் இது நிகழ்ந்துள்ளதாக நான் எண்ணுவது உண்மையா அல்லது பிரமையா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. 

பாஜிராவ் மஸ்தானி திரைப்படக் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments